'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


முனைவர் அர.விவேகானந்தன்
• தமிழாசிரியர். 
• தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
• பைந்தமிழ்ச் சோலை - இலக்கியப் பேரவை - திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் தலைவர்.
 
• பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பெற்றவர்.
 
• ‘அஞ்சிறைத்தும்பி’, ‘தூரிகைப் பூக்கள்’, ‘விரல்நுனி விளக்குகள்’, ‘பட்டுக் கிளியே வா வா வா’ முதலிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
 
• பள்ளி மாணவர்களுக்கு வெண்பா எழுதக் கற்றுக்கொடுத்து, அம்மாணவர்களே எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து நூல் வெளியிட்டுள்ளார்.



கவிஞரை வரவேற்றல்

உழன்றும் உழவே தலையென் றுணர்ந்து 
கிழக்காய் வாழ்க்கை விடியப் பாடும்
 
அழகர் முனைவர் விவேகா னந்தர்
 
வழங்கும் கவிகள் வாயமிழ் தம்மே!

விவேகானந்தரே வருக! 
வியக்கும் கவிதை தருக!

தமிழ் வணக்கம்!
முப்பாலை முன்புகட்டி முத்தமிட்டாய்! முத்தமிழே!
தப்பாம லெப்பொழுதுந் தாள்பணிவேன்! - செப்புகிறேன்!
மண்ணாய்ப்போ னாலும் மறவே னுனைப்பாட!
கண்ணுள் கருவா யிரு!

பாவலர், தலைமை, அவை வணக்கம்!

வெற்றென்னும் வாழ்வொழிக்குஞ் சோலை தந்து
... வேகுநிலை போகுநிலை செய்த வள்ளல்
பற்றோங்கும் பாவலரை வணங்கு கின்றேன்!
... பைந்தமிழில் மூழ்கிநிதம் முத்தெ டுத்து
வற்றாது தமிழாயு மகழ்வ னாரை
... வண்டமிழாய் வண்ணமுற வாழ்த்து கின்றேன்!
சொற்றமிழாய்ப் பூக்கின்ற சோலை யோர்க்குச்
... சுவையேகும் பாவணக்கஞ் சூட்டு கின்றேன்!
இப்படித்தான் விடியும்!

இப்படித்தான் விடியுமென்று காத்தி ருந்தால்
... எப்படித்தான் விடிவுவரும் வாழ்வி லென்றும்
செப்படியே செய்கின்ற வித்தை யாகும்
... சிரிப்பாகும் வாழ்க்கைமுறை! சிறிது கேட்பீர்!
எப்படியும் வாழ்ந்திடலா மென்ற கூட்டம்
... ஏவலென வேற்றகாலம் பார்த்தி ருக்கும்
அப்படியே அதன்வழியே நாமுஞ் சென்றால்
... ஐயகோ..நம் இனம்மெல்ல மறைந்தே போகும்!

உலகினிலே எத்தனைதான் விளைத்திட் டாலும்
... ஊருக்காய்ச் சோறுபோடு முழவே ஏற்றம்!
பலவிடியல் பல்துறையில் கண்டிட் டாலும்
... பசிபோக்கும் உழவனுக்கே விடியல் வேண்டும்!
நிலமெல்லாம் வணிகமென மாறி விட்டால்
... நெடுவயலின் பசுமையெலாம் நீர்த்துப் போகும்!
குலங்கூடிக் கொடுமிறப்பில் அழுதல் போலே
… கொடுமையெலாம் குவலயத்தோ ரில்லி லேகும்!

உயிர்போகும் நேரத்தில் உணர்வே இன்றி
... உடனெஞ்சில் கால்வைத்து மிதித்தல் போலே
பயிர்காக்கும் பரமனுக்குப் பசியாந் தொல்லை
... பார்த்திருக்க நேர்கிறதே! விடிவா யில்லை!
உயிர்காக்கும் பணிசெய்வோன் இறையோ னென்றால்
... உயிர்வாழ உணவாக்கு முழவன் யாரோ?
அயராது பாடுபடு முழவ னுக்காய்
... அகத்தினிலே இடங்கொடுக்கத் தயக்க மேனோ?
பட்டமெல்லாம் தேடிவரும் பதவி வேண்டா!
... பலபுதுமைப் பகட்டான பணியும் வேண்டா!
நட்டவிதை நன்றெனவே தழைக்க வேண்டும்!
... நம்பிள்ளை உழவினையே படிக்க வேண்டும்!
தொட்டதெல்லாம் பொன்னாகப் பொலிய வேண்டும்!
... தோப்பாக அவன்வாழ்வுங் குலுங்க வேண்டும்!
இட்டபடி இவ்வுலகம் இயங்க வேண்டும்!
... இப்படித்தான் விடியவேண்டு முழவன் வாழ்வே!

வாழ்த்து

பச்சைமரத்(து) ஆணி போலப் 
… பட்டென்று நெஞ்சில் தைக்கும்
அச்சுமொழிச் சொற்கள் உள்ளத்(து)
… ஆர்வத்தைக் கிளப்பும் சொற்கள்
 
உச்சியிலே உரைக்கும் சொற்கள்
 
… உணர்வினிலே கலக்கும் சொற்கள்
 
மெச்சவொரு சொல்லும் இல்லை
… மேன்மைமிக வாழ்க வாழ்க!

 





No comments:

Post a Comment