'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்செம்மல்
சியாமளா ராஜசேகர்
          
இதுவரை 1300 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். ‘எழுத்து.காம்’ வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.
• சிறுகதைகள் எழுதுவார். வாரமலர், மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளாய் வெளிவந்துள்ளன.
 
• தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். முகநூல் குழுமங்களில் பல விருதுகள் பெற்றுள்ளார்.
• பரிசுக்காக அன்றிப் புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்றே முன்வந்து கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
• மரபு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கவிஞரை வரவேற்றல்

சிந்துவே சந்தமே வண்ணமே என்றெலாம் 
செந்தமிழ்த் தாயவள் கொஞ்சுவாள் உம்மையே!
எந்தவொன் றெடுப்பினும் எளிதினில் கைவரச்
 
சிந்தையில் செதுக்குவீர் சியாமளா அம்மையீர்!

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா அம்மா வருக! 
சிந்தைக்கு இனிய சிந்திக்க வைக்கும்பா தருக!



தமிழ் வாழ்த்து
பொன்னெழிலே! நித்திலமே! பூவனமே! தீஞ்சுவையாம் 
இன்னமுதே! தேன்தமிழே! எந்தாயே! - நின்னையன்பாய்ப்
 
போற்றி வணங்கப் பொலிவாயென் பாட்டினில்
 
ஊற்றெனப் பொங்கி யொளிர்.

தலைமை வாழ்த்து
செந்தேனாய்த் தித்திக்கும் செம்மாந்த மொழியாம் 
*** செந்தமிழை நேசிக்கும் நிகரில்லாக் கவிஞன்!
சந்தத்தில் துள்ளிவரும் கவிதைகளை யெல்லாம்
 
*** தணியாத காதலொடு வாசிக்கும் சுவைஞன்!
சொந்தமென மரபினைத்தன் உள்ளத்தில் கொண்டு
 
*** சோலையிலே பைந்தமிழ்ப்பா மழைபொழியும் அமுதன்!
இந்தமன்றில் கவியரங்கத் தலைமையினை யேற்ற
 
*** இனியவனாம் தமிழகழ்வன் சிறப்போடு வாழி!!

                      இப்படித்தான் விடியும்

ஊர்ப்பசி தீர்க்கும் உழவரின் வீட்டில் 
… உண்பதற் கொருபிடி யில்லை !
காரது பொய்க்கக் கருகிடும் பயிரைக்
 
… கண்டவர் கும்பியும் எரியும் !
ஏர்பிடிப் போரின் வறுமையை விரட்ட
 
… ஏற்றநல் வழிசெய வேண்டும் !
நேர்மையா யரசு தந்திடும் தீர்வால்
… நிமிர்ந்திடும் அன்னவர் வாழ்வே !!
உலைகொதிப் பதுபோல் உள்ளமும் குமுறும்
… உழுபவர் நிலையினைக் கண்டால்
தலைவிதி என்றா ஒதுக்கிட முடியும்
 
… தலைமையை தூற்றிடத் தோன்றும்!
நிலையிலாப் பதவி என்றறிந் திருந்தும்
 
… நீதியைப் புறக்கணிப் போரே!
விலக்கிடு வீரே கடன்களை யெல்லாம்
 
… விடியலைக் காட்டிடு வீரே!!

ஊழலி லூறி அரசியல் செய்வோர் 
… உயரற மெதுவென வுணர்ந்தே
 
ஏழைகள் வாழ்வில் நிம்மதி காண
 
… இனியொரு விதிசெய வேண்டும் !
வீழினும் முயன்றே எழுபவர் வாழ்வில்
 
… விடியலைக் காட்டிடத் துணையாய்த்
தோழமை யோடு கைக்கொடுத் துதவித்
 
… தோல்வியைத் துரத்திட வேண்டும் !!

நெகிழியே யில்லா நிலையது வந்தால் 
… நிலவளம் நீர்வளம் சிறக்கும்!
மகிழ்ந்திடும் வண்ணம் முற்றிலு மொழிந்தால்
 
… மாசுகள் புவியினில் குறையும்!
மிகுந்திடும் நோய்கள் நெகிழியால் தானே
 
… விளைவுகள் விபரீத மாகும்!
வகுத்திடும் திட்டம் சீர்பெறு மானால்
 
… வண்ணமாய் விடியலும் விளங்கும்!!

இன்முகத் தோடு கழனியைப் பிரியார் 
… எத்தனை யிடர்தொடர்ந் தாலும்
 
பொன்மணி போலும் நெல்மணி காக்கும்
 
… புனிதரைப் பொலிவுறச் செய்வோம் !
அன்னம ளிக்கும் அவரிலை யென்றால்
… அவனியில் நம்நிலை என்ன ?
என்றிதை யுணர்ந்தால் மாறிடும் நிலையும்
 
… என்றும்வி டிந்திடும் நன்றே!!

தரணியில் தமிழர் உளமதை நிறைக்கத் 
… தைமகள் எழிலுடன் வருவாள்!
வருமிடர் யாவும் விலகிடச் செய்து
 
… மனத்தினில் மகிழ்ச்சியை விதைப்பாள்!
உரிமைகள் தந்தே அரசுமா தரவாய்
 
… உழவரைப் பேணிடு மாயின்
 
விரிந்தவிவ் வுலகின் இருளதும் நீங்கி
 
… விடிந்திடும் நன்மையா யிங்கே!!

வாழ்த்து

'கழனிதனைக் காத்துநின்று கவின்பயிரை விளைவிக்கும் 
உழவர்களைக் காத்துநின்றால் உலகினுக்கே ஏமாப்பு
 
வழங்கிவிடும் வகையறிவீர் நம்முடைய கைகொடுப்போம்'
அழகாக எடுத்துரைத்தீர் அம்மையீர் வாழியவே!
 

No comments:

Post a Comment