'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா

பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லூர், புதுக்கோட்டை மாவட்டம்
• கல்வித் தகுதி: எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்
• பெற்ற விருதுகள்: 
1. கவியருவி
 
2. கவிச்சாகரம்
3. கவிமணி
4. கவிமாமணி
5. கவிச்சோலை
6. சங்கப் புலவர்
7. நல்லாசிரியர் விருது.
8. நகைச்சுவைப் பேச்சாளர்
கவிஞரை வரவேற்றல்

காரைக் குடியார் முகில்மழை பெய்தெனக்
காரைக் குடியார் கவிசெய்வார் - காரைத்
தகர்க்கின்ற மீனெனத் தன்னொளி கட்டிப்
பகர்வார்பார் ஓங்கும் படி

காரைக்குடி கிருஷ்ணா அவர்களே வருக 
கற்பனை மழைசொட்டக் கவிதை தருக

*** *** *** ***

இப்படித்தான் விடியும் (குறள் வெண் செந்துறை)

விண்ணவர் தொழுதிடும் வியத்தகு உலகம்
பெண்மை காக்கும் பெருந்தகை ஆடவர்

பொருள்கள் எல்லாம் பொதுவில் இங்கே
அருகனும் வந்தால் அதிசயம் கொள்வான்

கலைகள் நிறைந்த கவின்மிகு வீடுகள்
விலைகள் இல்லா வியத்தகு இயற்கை

சிட்டுக் குருவிகள் சிணுங்கும் ஓசை
பட்டுத் தெறித்தது பரிதியின் சுடரொளி

அருகில் வெள்ளிய ஆற்றின் ஓசை
மருண்டே ஓடும் மான்கள் கூட்டம்

உழைப்பைப் போற்றும் உழவர் மக்கள்
உழைப்பின் பயனை உதவி நின்றனர்

மரும மில்லை மறைத்தலு மில்லை
தரும மொன்றே தலைமைக் கடனாம்

அகில மெங்கும் அன்பாய் மக்கள் 
நெகிழிகள் இல்லா நெடிய வழிகள்

இயற்கை சார்ந்த இயல்பு வாழ்க்கை
வயல்வெளி எங்கும் விளைந்த நெற்கதிர்

கொத்தித் தின்னும் குருவிகள் கூட்டம்
எத்தனை கோடி இன்பம் இங்கே

காலை வேளை களைந்த(து) இருட்டு
கனவும் இங்கே கலைந்து போனது

விழிகள் இரண்டை வியப்பில் ஆழ்த்தி 
விழித்துப் பார்த்தேன் விடியவே இல்லை

*** *** *** ***

வாழ்த்துரை

இன்பம் கோடி இனிதே பாடித்
துன்பம் தீர்க்க வந்த கவிதை
 
கனவாய்ப் போனதில் கலக்கம் பிறக்க
நனவாய் மாற்றல் நங்கட னேயென
 
உணர்த்தும் உயர்ந்த கவிதை
 
வணக்கம் அம்மா வாழ்கபல் லாண்டே!

No comments:

Post a Comment