'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் அதிராம்பட்டினம்
ஷேக் அப்துல்லாஹ் அ


கவிஞரை வரவேற்றல்

எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிச் 
சொல்லில் அடங்காச் செய்திகள் எல்லாம்
 
உள்ளே வைத்துப் போற்றி இன்பம்
 
கொள்ளும் கவிஞர் அபுதுல் லாஅ
வருக வருக செந்தமிழ்த் தேனைப்
பருகத் தருக பண்புயர்ந் தோரே

வாழ்த்து

உதிப்பாகு மெண்ணங்க ளுயரும் வண்ணம்
... உயிரான தமிழன்னை யருளாற் றிண்ணம்
பதிப்பிக்கும் பண்புடையோர் படையின் முன்னால்
... பாவலரின் தமிழகழ்வன் பார்வைப் பொன்னாள்
மதிமிக்க பாவலரின் பார்வை சூழ்ந்தே
... மாசற்ற வழிகாட்டும் மாண்பில் ஆழ்ந்தே
அதிவீரர் பட்டினத்திற் காளா யாக்கி
... ஆண்டவனே உன்கருணை மனத்தின் வாழ்த்தே !

இப்படித்தான் விடியும்

நடந்துவிட்ட நிகழ்வுகளில் நல்ல பாடம்
... நாம்கற்க வாழ்நாளில் நன்மை கூடும்
கடந்துவிட்ட காலங்களில் கற்ற வுண்மை
... கசப்புகளு மினிப்புகளும் காட்டும் தன்மை
தொடர்ந்துவரும் நாள்களிலே தூணாய்க் கொண்டு
... துவளாதே வாழ்தலிலே சொர்க்கம் காண்பாய்
சுடர்ந்துவிடும் வாழ்நாள்கள் சுகத்தைக் கொண்டு
... சுயத்தினிலே உணர்ந்திடவே சோக மேது ?

நன்னடத்தை பேணுகின்ற நல்ல வுள்ளம்
... நாற்புறமும் பாதுகாவல் நன்றாய்க் கொள்ளும்
அன்னமிட்ட கைகளுக்கே அருளும் சூழும்
... அத்தனையும் கண்டுமனம் வைத்து வாழும்



புண்படாத செய்கையினால் புகழி லாளும்
... புரிந்துகொண்ட வுள்ளமதைப் போற்றும் நாளும்
கண்டுகொண்டும் கேடுசெய்யும் கள்வ ராட்டம்
... காலத்தில் துன்பத்தைக் காணும் கூட்டம் !

அடித்தபுயல் வந்தவழி யதனின் திட்டம்
... ஆராய்ந்து பார்த்திடவே யங்கு நுட்பம்
துடித்துமாண்டோ ரிழந்துவிட்டோர் துன்பம் கொண்டோர்
... தொலைவில்லா வன்மத்தோர் தொடாதே சென்றே
வடித்துவிட்ட கோலமதில் வகுத்துப் பாராய்
... வதைபட்டோர் படாதோர்கள் மண்ணில் யாரு ?
குடித்துவிட்டும் கெடும்புசெய்தும் குழப்பம் தந்தோர்
... கொண்டதுன்பம் தெரியாதிக் கொடுமை விந்தை!

நியாயநேர்மை பேணுவதால் நிலைக்கும் சாந்தி
... நினைவில்கொள் செயல்களிலே நிறுத்து வாய்நீ
அயராவன் பைப்பொழிந்தே அணைத்துக் கொள்வாய்
... மகவுணர்வும் மகிழ்ச்சியிலே மனத்தில் துள்ளும்
தயாளவழி வழக்கமாகின் தாக்கும் துன்பம்
... தலைவிட்டு நகர்ந்துபோகும் தன்னை யென்றும்
மயானமாகு முண்மைகளை மறுத்து வாழ !
... மறந்துவிட விப்படித்தான் விடியும் நாளே !



வாழ்த்துரை

கடந்த காலம் காட்டும் உண்மை 
தொடரும் நாளில் தூணாய்க் கொள்க!
 
நடக்கும் நிகழ்வி னின்று கற்க!
நடத்தும் நம்மை நல்ல வழியில்
 
மிடிமை நீக்கச் சுடராய் எழுக!
 
விடியல் இப்படி வேண்டும் என்று
 
கடமை உணர்த்திய கவிஞர் வாழ்க
 

No comments:

Post a Comment