'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி.

பெங்களூரில் தொழில்நுட்பம் பயின்றவர். 
• சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
• பள்ளிப் படிப்போடு தமிழ்ப்படிப்பு நின்றுவிட்ட போதிலும், தமிழ்மீதுகொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் நீண்ட இடைவெளிக்குப்பின், கடந்த இரண்டாண்டுகளாகத் தமிழ் பயின்றுவருகிறார்.

கவிஞரை வரவேற்றல்

துள்ளி விளையாடத் துணைவரு நண்பனைப் 
பள்ளிப் படிப்பொடு விட்டதைப் போலத்
தொழில்மேற் கொண்டு தொடர முடியாத்
தமிழின் நட்பைப் புதுப்பித் தின்ப
அமிழ்தம் பருக அள்ளி யணைத்தார்
பொற்றேர் எழுந்து புறப்படுந் தமிழை
 
நாவில் இருத்திப் பாடும் குயிலாய்
 
மரபு பாக்கள் நாடும்
வச்சிர வேலனார் வருக வருக

தமிழ்த்தாய் வாழ்த்து!

அகத்தியமும் காப்பியமும் அறியும் முன்பே
... ஆண்டுபல செழுமையுடன் வாழ்ந்து நின்றாய்
பகுத்தபல விலக்கணங்கள் பாகாய்க் கொண்டாய்
... பாரினிலே பலமொழிக்குத் தாயாய் நின்றாய்
தொகுத்துனது வயதினைத்தான் சொல்ல விங்குத்
... தொல்லியலும் தயங்குவது பொறாமை யாலோ
மகுடமுயர் செம்மொழியாய் மன்றம் வென்றாய்
... மகிதலத்தில் இணையிலையே தமிழ்த்தாய் வாழி!

அவை வாழ்த்து! (கட்டளைக் கலித்துறை)

மரபுத் தமிழ்ப்பா மறையா திருக்க வழிவகுத்துக்
கரத்தைப் பிடித்துக் கருத்தை அளித்துக் கவிபுனையச்
சிரத்தை எடுத்துத் திருத்தம் கொடுத்துத் திறம்வளர்க்க
உரத்தைக் கொடுக்கும் உயர்தமிழ்ச் சோலைக்கிங்(கு) ஒப்பிலையே.

இப்படித்தான் விடியும்: நன்மை (கும்மிச் சிந்து)

அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தால் - நம்மை
... அண்டுந்தீ மைகளைத் தாங்கிநிற் கும்...
அன்னையின் தந்தையின் தாள்பணிந்தால் - அவர்
... ஆசிகள் வாழ்வினைக் காத்துநிற் கும்...

பள்ளியில் ஓதிடும் பாடங்களைக் - கற்றுப்
... பக்குவ மாய்ச்சிந்தைக் கேற்றிவிட் டால்...
தெள்ளிய சிந்தனை மேவிவரும் - என்றும்
 
... தேடுபட் டம்பொருள் நாடிவ ரும்...


நல்லெண்ணச் சிந்தனை நெஞ்சினிலே - வைக்க
... நம்பிக்கை யாவையு மேலெழு மே...
பொல்லன விட்டுனைப் போய்விடுமே - இன்பம்
... புத்துயிர் பெற்றுடன் நின்றிடு மே...

நல்லுயிர் நண்பர்கள் வாய்த்திருந்தால் - உன்றன் 
... நன்மைதீ மைகளைக் கண்டுரைப் பார்...
இல்லத்தி லோருறுப் பாயிருப்பார் - என்றும்
... இன்பதுன் பத்திலுன் னோடிருப் பார்...

வள்ளுவன் சொல்பற்றி வாழ்ந்துநின்றால் - யார்க்கும்
... வாழ்க்கையி னிக்குமே மாற்றமில் லை...
உள்ளுவ தென்றுமு யர்நோக்கமென் றாலிங்(கு)
... ஒற்றுமை மேலெழும் வாழ்வுய ரும்...

இப்படித்தான் விடியும்: தீமை (வெண்பா)

கண்மூடித் தான்செய்யும் காரியங்கள் யாவுமே
மண்மூடிப் போகும் மறவாதே - பொன்மூடி
போட்ட் பெருநகையும் பொய்யுரையும் ஓர்நாளில்
காட்டிவிடும் தன்நிறத்தைக் காண்.

காடு மலையழித்துக் காசு பொருட்சேர்க்க
நாடு வளமிழக்கும் நம்பிடுநீ - ஓடும்
நதியாவும் வான மழையின்றி நாளும்
கதிரோன் பொசுக்கிடுவான் காண்.

கள்ளுண்ணும் போதுன்றன் கண்மயங்கிக் காலிடரும் 
பள்ளத்தி லேவிழநீ பார்ப்போரங்(கு) எள்ளுவரே
 
உள்ளமதி கெட்டொழுக்கந் தானிழக்க ஊரிலுனைக்
கள்ளுகுடி காரனென்பர் காண்.

கள்ளவழி நாடிக் கவரும் பொருள்யாவும் 
உள்ளபடி யோர்நாள் உனைத்தாக்கும் - கள்ளக்கோல்
வைக்கும் கடையதனின் வாணிகமும் காலத்தே
கைக்கூடா மற்போமே காண்.

வாழ்த்து: வெண்பா

அன்புவழி நின்(று)ஆன்றோர் ஆய்ந்தளித்த பாதையிலே
உன்போல் உயிர்யாவும் ஒப்பெனவே கொண்டுள்ளம்
மண்ணுமுயர் வானின் மகிமையதைத் தான்வணங்கி
கண்ணெனக் காத்திடநல் வாழ்த்து.

வாழ்த்துரை

யாப்பினைக் கற்றறிந்து யாவையும் சீர்துக்கிப் 
பாப்புனையும் வச்சிர வேலரே - நாப்பழகு
 
நல்லதமிழ்ப் பாவால் நனிமகிழ்ந்து வாழ்கவே
வல்லதமிழ் வாழ்விக்க வே

No comments:

Post a Comment