'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் இரா.அழகர்சாமி

·         வயது: 62
·         கல்வி: 8-ம் வகுப்பு தாண்டாத பள்ளிப்படிப்பு.
·         பிறந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்திலுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமம்
·         வாழும் ஊர்: 50 ஆண்டுகளாகச் சென்னை பள்ளிக்கரணை.
·         விருப்பம்: தமிழ், கதை, கவிதை, ஓவியம், வாசிப்பு






கவிஞரை வரவேற்றல்

அற்றமிலா நல்வாழ்வை அகிலம் காண 
... அழகாகச் செந்தமிழில் சந்தத் தோடு
 
சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்ந்தி னிக்கச்
 
... சுடர்வீச மணம்வீச அனுப வத்தில்
 
நற்றவத்துத் தோய்ந்தரிய கருத்தெ டுத்து
 
... நயக்கவிதை நாட்டுகின்ற அழகர் சாமி
 
பல்சுவைஞர் பண்பினிலே ஓங்கி நிற்கும்
 
... பாவண்ணப் பாணரிவர் வாழ்க வாழ்க!



தமிழ்த்தாய் வாழ்த்து

ஆதிநாள் தொட்டே வாழும்
... அருந்தமிழ் மொழியே உன்னை
ஓதினோர் தாழ்ந்த தில்லை
... உயர்வுடன் வாழ்வார் மண்ணில்
நீதியின் தட்டில் உன்னை
... நிகர்த்தவோர் மொழியும் இல்லை
மேதகு மொழியாம் உன்றன்
... மேன்மையை வணங்கு கின்றேன்!



அவை வணக்கம்

நாடுகள் கடந்தேகும் நாவாய்கள் மத்தியிலே
ஓடுமென நம்பித்தான் ஓடமொன்று கட்டிவந்தேன்
ஆடுகின்ற அலைநடுவே ஆடாமல் ஓடுதற்குக்
கூடுமென அவையோரைக் கும்பிட்டே இறங்குகின்றேன்.

இப்படித்தான் விடியும் (எண்சீர்ச் சந்த விருத்தம்)

காலையிலே நாளிதழைக் கண்டாலே போதும்
... கலவரங்க ளடிதடிகள் கண்முண்ணே விடியும்
சாலையிலே சென்றிடவும் சங்கடமே கூடும்
... சாலையதன் விதிமறந்து சாகசமும் புரிவார்
மூளையிலா மாந்தர்களை முறைவைத்தே விதியும்
... முதுமைக்காய்க் காத்தலின்றி முடிவையுடன் காட்டும்
ஏலாதே இதைத்திருத்த என்றேதான் நாமும்
... இருந்தாலே எந்நாளும் இதுபோல்தான் விடியும்!

பருகிடவும் நீரின்றிப் பரிதவித்த மக்கள்
... பகலெல்லாம் குடமேந்திப் பாதையிலே நிற்பர்
பெருகித்தான் ஓடுதடா பேய்மதுவாம் ஆறும்
... பெண்டுகளின் தாலிகளை அறுக்கவந்த கூற்றாய்
வரித்தொகையை வாயிலிட்டு வாழ்கின்ற கூட்டம்
... வரும்தேர்தல் காட்டுமடா வக்கற்றோர் ஆட்டம்
உரிமைகளைக் கேட்காமல் ஒளிந்தாலே நாமும்
... உள்ளபடி எந்நாளும் உருப்படாது விடியும்!
நாட்டுக்குள் நாசங்கள் நமக்கில்லை என்றே
... நாம்கண்கள் மூடுவதால் நடவாமல் போமா
வீட்டுக்குள் வந்தால்தான் வினையாகும் என்றே
... வீட்டையு(ம்)நாம் தாளிட்டால் விலகித்தான் போமா
காட்டுக்குள் விலங்காக வாழ்ந்தாலும் நன்றே
... கவலைகளே இல்லாமல் காலங்கள் நகரும்
கூட்டுக்குள் புழுவெனவே வாழ்கின்ற எண்ணம்
... கொண்டாலே நாளெல்லாம் கொடுமையுடன் விடியும்!

பெட்டிகளைப் பறிமாறிப் பெரும்பதவி காண்போர்
... பொறுப்புடனே ஆட்சிதனைப் புரிவாரோ சொல்வீர்
சட்டமதைச் சாதகமாய்ச் சரிக்கட்டும் பேர்கள்
... சமுதாயம் வாழ்வோங்கச் சாதகமா செய்வார்
வட்டமிடும் கழுகெனவே வாய்ப்புகளைத் தேடும்
... வல்லூருக் கெந்நாளும் வாய்க்கிரைதான் நாமும்
கெட்டவர்கள் கூடிநின்று கோலோச்சும் போழ்தில்
... கொடுமைகளைச் சுமந்துவரும் கோலமதே விடியும்

நல்லவனைத் தேர்ந்தெடுத்து நாமாளச் செய்வோம்
... நம்தலைவன் இவனென்றே நாட்டுக்குச் சொல்வோம்
புல்லர்களை இனிமேலும் விட்டுவைக்க வேண்டா
... புழுப்போல நசுக்கியே பொய்த்திரையைக் கிழிப்போம்
அல்லவைககள் கூடுவதால் நல்லவைகள் விலகும்
... அவனியிலே குழப்பங்கள் அதனாலே விளையும்
சொல்லுவதைச் சொல்லிவிட்டேன் சோதரரே கேளும்
... சொந்தமூளை தனைவிட்டால் இப்படியே விடியும்!
வாழ்த்து

நாட்டின் நன்னிலை நற்றவக் கொற்றவன் 
நாட்டும் கொடியினில்; நாடுக நல்வழி
 
வாட்டம் களைபவன்; மீட்பவன் தனையென
 
ஊட்டம் தருபவர் வாழிய வாழிய!
 

No comments:

Post a Comment