'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 15

நேரிசை வெண்பா

1.       கவிஞர் நடராஜன் பாலசுப்ரமணியன்  

நாலும் தெரிந்தவனாய் நல்லது செய்வதற்கும்
காலங் கருதிக் கடனாற்று - ஞாலம்கைக்
கொள்ள யிதுவே குறிப்பென் றிருத்திடு
வள்ளுவன் வாக்கை மனத்து!

நேரிசை ஆசிரியப்பா

2.       கவிஞர் பூங்கா சண்முகம், புதுச்சேரி

ஆலமாய் மாய்த்திடும் கடுங்கொரோனா மாய்க்கச்
சால  நன்றாம்  தனித்தல்  மக்காள்
காலம்  கருதிக்  கடனாற்று
கோலம்  சிறந்து  குவலயம்  மகிழவே.!

அறுசீர் விருத்தம்

3.       கவிஞர் வ.க.கன்னியப்பன்

ஆல காலம் போலநம்மை
    ஆட்டி வைக்கும் கொரோனாவை
ஓலை கொடுத்த னுப்பிவைப்போம்;
    ஒழிந்து போகச் செய்திடுவோம்!
வேலன் என்றுந் துணையிருப்பான்:
    வெற்றி நமக்கு விளைத்திடுவான்!
காலங் கருதிக் கடனாற்று;
    கவலை யெல்லாந் தீர்ந்திடுமே!

4.       கவிஞர் சோமு.சக்தி 

காலங் கருதிக் கடனாற்று 
    காயம் விரைவில் கரைந்தோடும்
ஓல மிடலால் ஒழிந்திடுமா
    ஓயாக் கொரோனா வொட்டுதலும்
ஞால நடப்பில் நாம்கண்ட
    ஞானம் சமூக விலகலுமாம்
சாலப் பொருளைத் தந்துதவி
    சாவைத் தடுத்தாற் சரிதானே !

வஞ்சி விருத்தம்

5.       கவிஞர் அபூ முஜாஹித்

தூல மொருநாட் தேயாதோ?
கோலம் மாறிப் போகாதோ?
ஞாலத் திருளிற் கரையேறக்
காலங் கருதிக் கடனாற்று

6.       கவிஞர் செல்லையா வாமதேவன் 

ஞாலம் புகழ நடைபோடு
காலங் கருதிக் கடனாற்று
ஆலக் கிருமி அதையோட்டச்
சீலந் தனிமை செயலாற்று.

குறுக்கெழுத்துப் போட்டி


ஆக்கம்: பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. இது யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி.  தங்கள் விடையை 31.05.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


குறுக்காக:
1. ஓர் அடியன் 1, 2, 3 சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல்
2. ஓர் அடியின் முதலிரு சீர்களும் முரண்பட இணைந்து வருந்தொடை
4. ஓர் அடியின் அனைத்துச் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் _____ மோனை
5. சீர்கள் ஒன்றுடனொன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது
6. பாடல் - வேறு சொல்                                                  
10. குறள் வெண்பாக்கள் என்று அறியப்படுபவை  ________ சீர் வெண்பாக்கள்
11. முக உறுப்பு. வேற்றுமை உருபு                              
12. ஒரு வகை சிந்துப்பா                                                
13. வெண்பா ஓசை                                                        
14. 4 சீர்கள் கொண்டால்  ______________
                             
நெடுக்காக:
1. நேர் நிரை நேர்                                                           
2. ஈரசைச் சீர்                                                                 
3. இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
5. நான்கசைச் சீர்களின் மூன்றாமசை நேர் என்பதைக் குறிக்கும் சொல்
7. 6, 7, 8 சீர்கள் கொண்டவை ____________________ எனப்படும்
8. ஆசிரியப்பா ஓசை                                                    
9. கட்டளைக் கலித்துறை                                              
10. எழுத்தை _______ணி யாப்பது கட்டளை கலித்துறை

பாட்டியற்றுக 16

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
  1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.
  2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும்.
  3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
  4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.
"எண்ணத் தெழுவஃ தெழுத்தா யெழுவஃ தினிமையதே"

Apr 14, 2020

குதிர்2-கதிர்6-மீனம்

 குதிர்2-கதிர்6-மீனம்

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் - பதினாறாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகமெல்லாம் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி கொரோனா (Corona) என்னும் தொற்றுநுண்மி தொற்றிப் பரவுதலைப் பற்றியே. உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) செய்திப்படி உலகத் தொற்றாக (Pandemic) மாறி இதுவரை இருநூற்றுக்கும்மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர்.

இந்தியாவில் இதுவரை ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாய் 21 நாள்கள் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கிறோம். அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் இந்நோய் ஓய்ந்த பாடில்லை. இது மேலும் பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கையைக் கெடுத்த மனிதனுக்குத் தரப்படும் தற்காலிக தண்டனையாக இதை ஏற்போம்.

தேவையின்றி வெளியில் சுற்றித் திரியாமல் இருப்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும்  இந்நோயைத் தவிர்க்க நாம் மேற்கொள்ளும் தவம் ஆகும்.

வந்தபின் காப்பது மருத்துவர் கையில்.
வருமுன் காப்பது நம் கையில்.
                                                                                                                                                                                   தமிழன்புடன் 
                     மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்