'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் - பதினாறாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகமெல்லாம் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி கொரோனா (Corona) என்னும் தொற்றுநுண்மி தொற்றிப் பரவுதலைப் பற்றியே. உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) செய்திப்படி உலகத் தொற்றாக (Pandemic) மாறி இதுவரை இருநூற்றுக்கும்மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர்.

இந்தியாவில் இதுவரை ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாய் 21 நாள்கள் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கிறோம். அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் இந்நோய் ஓய்ந்த பாடில்லை. இது மேலும் பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கையைக் கெடுத்த மனிதனுக்குத் தரப்படும் தற்காலிக தண்டனையாக இதை ஏற்போம்.

தேவையின்றி வெளியில் சுற்றித் திரியாமல் இருப்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும்  இந்நோயைத் தவிர்க்க நாம் மேற்கொள்ளும் தவம் ஆகும்.

வந்தபின் காப்பது மருத்துவர் கையில்.
வருமுன் காப்பது நம் கையில்.
                                                                                                                                                                                   தமிழன்புடன் 
                     மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment