'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 14

கட்டளைக் கலித்துறை

1.       அபூ முஜாகித்

வாடு முயிர்களின் வாதைகள் நீங்கவும் வையகத்தி
லாடி வருகின்ற தத்தனை நோய்க ளகன்றிடவுங்
கேடு தருகின்ற கேளிக்கை யாவையுங் கீழிருத்தி
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே

2.       மெய்யன் நடராஜ்

ஆடு முயிரினை ஆட்டும் பிணியிதாம் அஞ்சுவமே
வீடு சிறையென வீழ்ந்து கிடந்ததை வெல்லுவமே
கேடு வருமெனக் கெஞ்சி யுரைப்பதைக் கேட்பதிலே
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே


3.       பைந்தமிழ்ச் சுடர் பா. நடராஜன்

வாடு துலகு வழியறி யாது மயங்கிடுது
கூடு விடுத்துநாம் கூடும் வழக்கம் குறைத்திடுவோம்
வீடு கிருமி விளைவி லிருந்து விடுபடும்காண்
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே!

4.       கவிமாமணிசேலம்பாலன்

வீடு மகிழ்வாய் விளங்கிட வேண்டின் குடும்பமொடு
பாடு மறந்து பணத்தை மறந்து பயங்கரமாம்
கேடு கிருமி கெரோனா ஒழிந்திட வீட்டிலிரு!
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே!

5.       பூங்கா சண்முகம்,  புதுச்சேரி

ஏடு திருத்தி எழுத்தை விதைத்து வளப்படுத்த
நீடு புலனாசை யால்நாமோ நன்னிலம் பாழ்படுத்தி
வீடும் தெருவும் விரும்பாத தீவானோம் மாற்றமுற
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே.

6.       பொன். இனியன், பட்டாபிராம் 

ஊடு பயிராக வுள்ள தனைத்திலு மூழலெனக்
கேடு தரற்காகுங் கீழ்மை யரசியல்  கிள்ளுவமே
தாடு விளங்கத் தடையும் விலகிடுந் தன்மையவாய்
நாடு நலம்பெற நல்ல வழியினை  நாடுவமே

தாடு – வலிமை.

No comments:

Post a Comment