'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

நடுப்பக்க நயம் - கம்பனைப் போலொரு... பகுதி 1


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

முகநூலில் அண்மையில் ஒரு கீழ்மகன் "கம்பனின் மொத்தக் கவிதையும் கம்பன் எழுதியதில்லை என்றும், தம்மிடம் பயின்ற மாணாக்கரை எழுதச் சொல்லித் தொகுத்தவை" என்றும் தன்னை ஒரு மாமேதையாக நினைத்துக்கொண்டு ஆணவத் துடன் கூறினான். அந்த முட்டாள் தானொரு முழுமூடன் என்பதை மறந்தான்.
இன்னும் சிலரும் கம்பரின் புகழையும், கவிதைத் திறனையும் கொச்சைப்படுத்தியும், கீழ்த் தரமாகவும் வசைபாடி வருவதைக் கண்ணுற்றதால் இந்தக் கட்டுரை எழுவதாயிற்று.
இக்கட்டுரையின் மூலம் அவர்களின் வசவுகளை நீர்க்கச் செய்தும், தலைகுனியச் செய்தும் கம்பரின் புகழை நிலைத்ததாய் நிறுவுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்
* * *
கம்பனைப் போலொரு... (1)

'கல்வியிற் பெரியவன் கம்பன்' என்று போகிற போக்கில் சொல்லிவிடவில்லை நம் முன்னோர்.
வெல்லத்தை விடவா சீனி நன்மை தரக்கூடியது?
மிளகை விடவா மிளகாய் நன்மை தரக்கூடியது?
எல்லாவற்றையும் உய்த்துணர்ந்து, ஆய்ந்துணர்ந்து சொன்னவர்களின் கூற்றை நாம் மறுத்துப் புறம் தள்ளுவதில்லை. ஏனெனில் அவர்தம் கூற்றில் துய்ப்பு கரணியமாக இருந்தது. அந்தத் துய்ப்பே அவர்களை அவ்வாறு சொல்ல வைத்தது.
அவ்விதமே கல்வியில் பெரியவன் கம்பன் என்றதும் கம்பனை ஆழமாகத் துய்த்ததால் அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.
கம்பனை ஒதுக்கிவிட்டுக் கவிதையைத் துய்த்தலென்பது குழம்பை நீக்கிவிட்டு வெற்றுச் சோற்றைத் தின்பது போலாகும்.
கம்பன் ஒரு கவிதைச்சோலை. அதில் பல்வேறு மணம்வீசும் சந்தங்களைக் காணவியலும்.
கம்பன் ஒரு கவியருவி... அதில் பல்வேறு வகையான யாப்புநதிகள் வந்து கலந்திருக்கும்.
கம்பன் ஒரு கவியாலை... அதில் பல்வேறு சுவைமிக்க கனிகளின் சாற்றினை அள்ளிப் பருகவியலும்.
கம்பன் ஒரு கவித்தேர்... கட்டுப்பாடான இலக்கண வரம்புகளுக்குட்பட்டு அதில் பயணிக்கலாம்.
கம்பன் ஒரு பழத்தோட்டம்... முக்கனி மட்டுமன்றித் தேனிலூறிய செந்தமிழ்க் கனிக்கூட்டங்களைப் பறித்துத் துய்க்கலாம்.
எதுகைக்கும் மோனைக்கும் இடர்படாத சொல்லாட்சியும், புதிய புதிய சொல்லீட்டமும் மிளிரும் காவியச் சுவையில் கட்டுப்படுத்த வியலாத கவிச்சக்ரவர்த்தியவர்.
எத்தனை யெத்தனை யாப்புகள். . எத்தனை யெத்தனை சந்தங்கள்... எத்தனை யெத்தனை சொல்லோவியங்கள்...
அறிவியல், ஆன்மீகம், அரசியல், வரலாறு, சமூகம், பண்பாடு, குடும்பப் பண்புநலன்கள், பொதுமை, புதுமை.... இன்னும்... இன்னும்...
சொல்லிக்கொண்டே போகலாம் கம்பரின் ஆளுமையை.
தமிழென்றால் இனிமையென்பது கம்பன் காவியத்தால் அறியப்படும்.
தமிழென்றால் அமிழ்தமென்பது கம்பன் சொல்லோட்டத்திலும், உவமையாட்சியிலும் பெறப்படும்.
தமிழென்றால் இளமையென்பது கம்பனது எழுத்தாளுமையாற் பெறப்படும்.
தமிழென்றால் முதுமையென்பது கம்பனின் காவியப் போக்கினால் பெறப்படும்.
தமிழென்றால் உணர்வென்பது கம்பனின் கவிதைச் சுவையால் பெறப்படும்.
இவற்றையெல்லாம் அறியாமலா முண்டாசுகாரன் சொன்னான்.?
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் 
இளங்கோ வைப்போல் 
யாங்கணுமே யாம்கண்டதில்லை...." என்று.!
"பத்தா யிரம்கவிதை முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு"

என்று மகுடம் சூட்டும் கவியரசரின் வாழ்த்தைப் புறந்தள்ளிவிட முடியுமா?
"எண்ணியெண்ணித் திட்டமிட்டு எழுதி னானோ?
எண்ணாமல் எங்கிருந்து கொட்டி னானோ?"
என்ற நாமக்கல்லாரின் வியப்பை மறுக்கத்தான் முடியுமா?
இவ்வாறாக நந்தமிழ் நாட்டோர் நனிமிகக் கொண்டாடி மகிழும் கம்பனின் கவிச்சுவையை அறிய மாட்டாமலும், அவருடைய புகழிற்குக் காரணமான கவிதையை விடுத்து அவர் எடுத்துக் கொண்ட கருவை மையப்படுத்தி அவரைக் கொச்சைப்படுத்துவதும் இற்றைநாள் வழக்க மாகிப் போனது.
நுளம்பின் ஒளியையே ஒளியென்றெண்ணி மருளும் மடயர் தம் சிற்றறிவால் வானிலாவின் ஒளியைத் துய்க்கவா முடியும்.?
கல்லில் செதுக்கிய காரிகையின் மார்பைக் காமத்துடன் பார்க்கும் கயவர்க்குக் கலையின் மாட்சியா தெரியப்போகிறது.?
தாயை அன்புடன் அரவணைக்கும் பாசத்தைத் தாரத்தின் அணைப்போ டிணைத்துப் பார்க்கும் கயவர்தம் அறியாமையே இது.
.... வளரும்...

2 comments:

  1. ஐயா !

    நுளம்பு என்றால் என்ன?

    ReplyDelete
  2. ஐயா !

    நுளம்பு என்றால் என்ன ?

    ReplyDelete