'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 11


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

கொரோனா வருகையும்..
அவசர பாதுகாப்பும்..

ஓர் அரசின் செயற்பாடு எப்படி இருக்க வேண்டும், அதை எவ்வகையில் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் டென்மார்க் நாடு எப்படியுள்ளது என்பதனை விபரிப்பது, இச்சூழலில் தகுந்ததாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இத்தாலி நாட்டிற்குச் சென்று வந்த குடும்பத் தலைவன், முதல் முதலாக இந்நோய்க்கு ஆளாகியுள்ளான் எனக் கண்டறியப்படுகின்றது. விமானம் மூலம் இந்நாட்டிற்கு வருபவர்கள் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். ஒருவர் இருவராகி, அத்தொகை 514 ஆக உயர்ந்ததும் அரசு போர்க்காலச் சூழல்போல் செயற்படத் தொடங்கியது.


11ஆம் திகதி மீனம் 2020 (பங்குனி) இந்நாட்டுப் பிரதம மந்திரி செய்தியாளர்களினை அழைத்துத் தொலைக்காட்சி மூலமாக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இச்செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், நீதி அமைச்சர், சுகாதார அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் உள்நாட்டமைச்சர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் தனது உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்த முடிவிற்கு அமைய 14 நாட்கள் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பராமரிப்பு நிலையங்கள், உணவுச் சாலைகள், மதுபானச் சாலைகள், கேளிக்கை விடுதிகள், அரச அலுவலகங்கள் போன்றவை மூடப்படுகின்றன என்பதை அறிவிக்கின்றார். மேலும் இயலுமானவரை வீட்டில் தங்கியிருக்கு மாறும், 10 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றார்.
  
இதனைத் தொடர்ந்து ஒவ்வோர் அமைச்சர்களும் எவ்வகையாகத் தேவைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதனைத் தெரிவித்தனர். பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினார்கள். மேலும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் செயற்படும் என்பதனையும் சுட்டிக் காட்டினார்கள். இச் சந்திப்பில் அனைத்து அமைச்சர்களும் பிரதம மந்திரி உட்பட நின்றவாறே உரை நிகழ்த்தினர். அனைத்துப் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் அமர்ந்திருந்தவாறே கேள்விகள் கேட்டனர்.

இவ்வறிவித்தல் வெளியானதும் ஒருவிதப் பதட்டமே ஏற்பட்டது. அனைத்து மக்களும் தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு முனைப்புக் காட்டினர். எனினும் அடுத்தநாள் அக்கடைகளில் தேவையான பொருட்கள் இருப்பதையும் காணக் கூடியதாக இருந்தது.

ஆசிய நாடுகளில் அனைத்துப் பொருட்களுக்கு மான விலையேற்றம் அவரவர் விருப்பப்படி நிர்ணயிப்பதுபோல இங்குச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் சட்டம் கடுமையாக இருக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இரு நாள்களின் பின் மீண்டும் முன்னர்போல் பிரதம மந்திரி, அமைச்சர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா தொற்றியோர் 801 ஆக உயர்ந்துள்ளதால் நாட்டிற்குள்  எவரும் வரவோ போகவோ முடியாதவாறு நாட்டின் எல்லைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடியிருந்தால் ஒவ்வொருவருக்கும் 1500 குரோனர் குற்றப் பணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 23ஆம் திகதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் பின்வரும் தகவல்களை அறிவித்தார். இதுவரை 1450 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 254 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 பேர் இறந்துள்ளனர். ஏற்கனவே. மூடப்பட்ட அத்தனை இடங்களும் மேழம் (சித்திரை 13ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக  பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறினார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் களைப் பதவி நீக்கம் செய்யுமிடத்து, அப் பணியாளர்களுக்காக இப்போழுதே உதவித்தொகை வழங்குவதற்கான செயல்திட்டம் உண்டென்றும் சுட்டிக் காட்டப் பட்டது. இயலுமானவரை வீட்டினில் இருக்குமாறு ஒவ்வொரு மக்களையும் அரசு கேட்டுக் கொண்டது. அதனை மக்கள் சிரமேற்கொண்டு செயற்படுவது கொரோனாவிலிருந்து பிழைப்போம் என நம்பிக்கை தருகின்றது.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு, ஐரோப்பா ஒன்றியத்துத் தலைமைகளுடன் கலந்தாலோசித்தல் ஒவ்வோர் துறைக்குமான அமைச்சர்களின் நேரடி அறிவிப்புகள் இப்படிக் கால தாமதமின்றி இயங்கும் தன்மை இலங்கை, இந்திய நாடுகளிலும் ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

இவற்றினைப் பதிவு செய்வதன் நோக்கம், ஓர் அரசு எவ்வகையில் இது போன்ற அவசர காலத்தில் மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதே!

No comments:

Post a Comment