'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 23

 நேரிசை வெண்பா


1. கவிஞர் செல்லையா வாமதேவன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

புலனின் வழியும் பொறியும் -  நிலவும்

மலத்தை ஒழிக்குநன் மந்திரத் தெண்ணும்

நலமென் நமச்சிவாய வே.


2. கவிஞர் Fakhrudeen ibnu Hamdun


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

உலக இயக்கத்தின் உந்து - புலன்களும்

ஐந்து பொறியென ஆகும் இயல்பினில்

மைந்தரைப் பெற்றது மண்


3. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலமிவை நல்குமே நாடு - நிலத்திடை

நல்வழி நீக்கிநாம் நாளும் நடந்திட

அல்லல் வருமே யறி.


இன்னிசை வெண்பா


4. கவிஞர் Shaick Abdullah 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

இலமெடுத் தேயியற்கை யென்றொன் றிருப்பே!

நலமா முளமுணர் நன்னிலை யுன்னுள்

இலயித் திருவிதியே யின்!


கலிவிருத்தம்


5. கவிஞர் நெடுவை இரவீந்திரன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

வலம்சேர் வெளியில் வலம்வரும் அன்ன

குலம்சேர் உயிரால் குயவனின் கூட்டில்

நலம்சேர் அளவாய் நயம்படு மாமே


6. கவிஞர் பா.இந்திரன்


நிலம்நீர் வளிதீ நெடுஙீசும் பைந்தாம்

பலந்தந் திடுமே பாரினில் மேவிக்

குலம்தான் வளர்ந்தே குவலயங் காக்கும்

வலம்வந் திறைவனை வரமதும் பெற்றே


7. கவிஞர் வசந்தன் குருக்கள்


சிலம்பும் ஒலிக்கும் சிவனது பார்வைத்

தலங்கள் பலவும் தருவது வளமாம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலங்கொள் இயற்கை நன்மையும் பெறுமே


வெண்டளையானியன்ற கலிவிருத்தம்


8. கவிஞர் வ.க.கன்னியப்பன்


நிலைக்கு முலகில் நிலவுகின்ற வைம்பூதம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்;

அலைக்கின்ற வாழ்வி லதனதன் தாக்கம்

கலக்கம் மிகாதெமைக் காத்திட வேண்டுமே!

படைப்புச் செம்மல் விருது

 


கவிஞர் பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659


தமிழ்க்குதிர் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டன்று வழங்குகின்ற படைப்புச் செம்மல் விருது இந்த ஆண்டு அன்பு நிறை சான்றாளர், பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர், திருக்குறள் ஆய்வாளர் பைந்தமிழ்ப் பாமணி பொன்.இனியன் ஐயாவுக்கு வழங்கப்படுகிறது. 

இந்தத் திங்கள் நடைபெறவுள்ள பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை இலக்கியக் கூடலில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.


1. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

குறள்வழி நிற்குங் குணத்தினர் செப்புஞ்

சிறப்புட னாய்வார் குறளைத் - திறந்தமனப்

பொன்னினியர் பாரில் புகழுடன் நின்றோங்க

வென்னிதய வாழ்த்தளித்தே னின்று.


2. கவிஞர் மிழகழ்வன்

குறளுரைபல குடைந்தாய்ந்துரை

மறவாளரை மறவாதிருந்து

இனிதாயொரு வாழ்த்துரைக்கிறேன்

இனிக்க

வாழ்க வாழ்க பல்லாண்டு

வையம் போற்ற வாழ்க வாழ்கவே!


3. கவிஞர் நெடுவை இரவீந்திரன்

அன்புநிறை வாளர் அருமைப் படைப்பாளர்

என்னினிய நண்பர் எழுத்தாளர் - பொன்னினியர்

பல்லாண்டு சீராண்டு பாவாண்டு கூராண்டு

கல்லாண்டு வெற்றிகளைக் காண்.

பாட்டியற்றுக 24

அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்”

தமிழர் திருநாள்

1. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

கன்னலின் சுவையோ?  வெள்ளைக்

   கற்கண்டின் சுவையோ? நெல்லின்

வெண்பொங்கல் சுவையோ? அன்றி

   வெய்யவன் வரவோ? எங்கள்

இன்னலப் பண்போ?  உங்கள்

   இதயத்தி னன்போ? இல்லை.

தன்னிக ரில்லா எங்கள்

   தமிழர்தம் திருநாள் தானே!


2. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

தைத்திரு நாளே உள்ளத் துவகை

தைத்திரு நாளே வளமும் நலமும்

தைத்திரு நாளே பொங்கல் இன்பம்

தைத்திரு நாளே தமிழர் நாளே


3. கவிஞர் பொன். இனியன்

ஆண்டு வரவுடன் ஆர்க்குந் திருநாளாய்

ஈண்டுவந்த திப்பொங்கல் நன்னாளில் யாண்டும்

இனிமையே பொங்குக வென்றியான் வாழ்த்தி

நனிமகிழ் உற்றேன் நயந்து 

வினாதலும் விடுத்தலும்

வினா: ஒருவரின் பெயரைக் கவிதையில் வகையுளியாக எழுதலாமா?

            - கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்

விடை: வகையுளியைத் தவிர்க்கும்பொருட்டுப் பெயரை மாற்றி எழுதுதல் சரியன்று. எனவே இவ்விடத்தில் வகையுளி ஏற்கப்படும்.