'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 23

 நேரிசை வெண்பா


1. கவிஞர் செல்லையா வாமதேவன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

புலனின் வழியும் பொறியும் -  நிலவும்

மலத்தை ஒழிக்குநன் மந்திரத் தெண்ணும்

நலமென் நமச்சிவாய வே.


2. கவிஞர் Fakhrudeen ibnu Hamdun


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

உலக இயக்கத்தின் உந்து - புலன்களும்

ஐந்து பொறியென ஆகும் இயல்பினில்

மைந்தரைப் பெற்றது மண்


3. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலமிவை நல்குமே நாடு - நிலத்திடை

நல்வழி நீக்கிநாம் நாளும் நடந்திட

அல்லல் வருமே யறி.


இன்னிசை வெண்பா


4. கவிஞர் Shaick Abdullah 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

இலமெடுத் தேயியற்கை யென்றொன் றிருப்பே!

நலமா முளமுணர் நன்னிலை யுன்னுள்

இலயித் திருவிதியே யின்!


கலிவிருத்தம்


5. கவிஞர் நெடுவை இரவீந்திரன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

வலம்சேர் வெளியில் வலம்வரும் அன்ன

குலம்சேர் உயிரால் குயவனின் கூட்டில்

நலம்சேர் அளவாய் நயம்படு மாமே


6. கவிஞர் பா.இந்திரன்


நிலம்நீர் வளிதீ நெடுஙீசும் பைந்தாம்

பலந்தந் திடுமே பாரினில் மேவிக்

குலம்தான் வளர்ந்தே குவலயங் காக்கும்

வலம்வந் திறைவனை வரமதும் பெற்றே


7. கவிஞர் வசந்தன் குருக்கள்


சிலம்பும் ஒலிக்கும் சிவனது பார்வைத்

தலங்கள் பலவும் தருவது வளமாம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலங்கொள் இயற்கை நன்மையும் பெறுமே


வெண்டளையானியன்ற கலிவிருத்தம்


8. கவிஞர் வ.க.கன்னியப்பன்


நிலைக்கு முலகில் நிலவுகின்ற வைம்பூதம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்;

அலைக்கின்ற வாழ்வி லதனதன் தாக்கம்

கலக்கம் மிகாதெமைக் காத்திட வேண்டுமே!

No comments:

Post a Comment