'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 10

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இன்றைக்கு முன் சற்றொப்ப, 2300 ஆண்டுகளுக்கு முன் அஃதாவது, கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும், 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த ஓர் அரசியல் போர்க்கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பழங்கதையே இராமாயணமாகும். (இதிகாசம் - பழங்கதை)

இன்றைய பீகார் மாநிலத்தின் பிரிந்த சத்தீஸ்கர் மாநிலப்பகுதியில் கங்கையின் கிழக்குக் கரையில் தொடங்கி, கங்கையின் மேற்குக் கரைப்பகுதியில் நடைபெற்ற இருமன்னர்களின் போர் குறித்தான செய்திகளை மையமாகக் கொண்டதே இராமாயணமாகும். (★அடுத்த பகுதியில் சான்றுகளுடன் விளக்கப்படும்)★

இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே இதிகாசங்கள்தாம். (பழங்கதைகள்).

இக்கதைகள் நிகழ்ந்த இடத்திருந்து காலத்தால் கடத்தப்பட்டுச் செவிவழிச் செய்தியாகப் பரவியகாலை அவ்வப் பகுதிகளின் பண்பாடுகளுக்கேற்பவும், கதை சொல்லும் மாந்தர்தம் கற்பனைகளுக்கேற்பவும், உட்பொருள் திரிபடைந்து வளர்ச்சியுற்றுப் பலப்பல புனைவுகளும், கற்பனைகளும், கருதுகோள்களும் நுழைக்கப்பெற்றவையே.

அதனால்தான் இராமகாதை அவ்வப்பகுதிகளுக் கேற்பக் கருக்கொண்டு அம்மக்கள் பழக்கத் தனவாக வழங்கலாயிற்று. சான்றாகத், துளசி ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஆனந்த ராமாயணம் போன்றவை நம் நாட்டிலேயே மாற்றம் பெற்றவையாகும்.

தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்களின் வழக்கிற்கேற்ப மாற்றம் பெற்றவையுள.

இராமாயணம் நடைபெற்ற பகுதியில் வாழ்ந்திருந்த (சூத்திரரான) ரட்சன் என்ற வேடன் அக்கதையை அஃதாவது அவனுடைய காலத்தில் நிகழ்ந்த ஒரு போர் நிகழ்வை வடமொழியில் எழுதி வைத்தார்.

(அவருடைய ஏழாம் காண்டமான உத்தர காண்டத்தில் இராமனின் மனைவியான சீதைக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அங்கேயே அவள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததாகவும் வரும் செய்திகளை ஆராய்ந்தால், போருக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நிலை கருதி வான்மீகியே அரசக் குடும்பத்தைப் பாதுகாத்துத் தகுந்த காலத்தில் அரியணையில் அமர வைத்தார் என்று கருதவும் இடமுள்ளது.)

இராமாயணம் நிகழ்ந்த அதே காலக்கட்டத்தில் தான்...

ரிக் வேத கால நதிகளான சரசுவதி மற்றும் திருட்டாதுவதி நதிக்கரைப் பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் [இன்றைய வடக்கு இராசபுதனம் மற்றும் தெற்கு அரியானா] பெருமழையால் அழிந்த பின்பு அங்கு வாழ்ந்தவர்கள் (ஆரியர்கள்), விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில்... (தற்கால நேபாளம், உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனம்] குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரிய வர்த்தம் எனற பெயரால் அழைக்கப்பெற்றது.

ஆரியர்கள் அந்தப் பகுதியில் நுழைந்ததும், அப்பகுதியில் வாழ்ந்திருந்த மக்களைத் தாழ்ந்த இனத்தவராகவும், தங்களைக் கடவுளின் பிள்ளைகளாகவும் கூறிக் கொண்டனர். அவற்றை மெய்ப்பிக்க மனுதர்ம சாத்திரத்தையும் எழுதி வைத்தனர். அந்தச் சாத்திரத்தின்படி சாதிப் பகுப்புகளை வைத்து அங்கிருந்த மக்களை இனக் காழ்ப்புடன் நடத்தியும், அந்நாட்டையாண்ட அரசர்களுடன் குரு என்ற நிலையில் அமர்ந்தும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர்.

அவர்களுடைய போக்கில் ஏற்பட்ட பிணக்கினாலும், பண்பாட்டு மாற்றத்தினாலும் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறிப் பிற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். காக்கேசிய இனத்தவர்களான வந்தேறியவர்களை வரலாற்றாசிரியர்கள் ஆரியர் என்றழைத்தனர். அவர்கள் வந்தேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது.

அப்பகுதியின் பூர்வீகக் குடிகளைச் சத்திரியர் என்றும், சூத்திரர் என்றும் மனுசாத்திரத்தில் குறித்தனர். சத்திரியர்களிலேயே திராவிடர் என்ற பகுப்பில் ஆதிக் குடிகளைக் குறித்தனர். (இவர்கள் தாம் ஆதி திராவிடர்).

எஞ்சிய மற்றவரை ஐதரேய பார்ப்பனர் என்றும் குறிப்பிட்டனர். ஐதரேய பார்ப்பனரும், சத்திரியர்களும் திராவிடர் என்றே ஆரியர்களால் குறிக்கப்பெற்றனர். (ஆதாரம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். பக்.4,5)

அப்போதிருந்துதான் ஆரிய - திராவிடப் பண்பாட்டுப் போர் நடைபெறத் தொடங்கியது.

ஆரியரை எதிர்த்தவர் அனைவருமே "திராவிடர்" எனப்பட்டனர். அவர்கள் வணங்கி வந்த தெய்வத்தையும் (சத்திய விரதன்) திராவிடக் கடவுளாகக் குறிப்பிட்டனர்.

ஆதாரம். இதோ...

"இராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவது இக்ஷ்வாகு என்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வது வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:

ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா ஸ வை விவஸ்வத: 

புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம் த்வத்தஸ் தஸ்ய சுதா: 

ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

                                                         (பாகவதம் 9.1.2 & 9.1.3)


இதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜ ரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.

மேல்சாதியினராகத் தங்களைக் கூறிக்கொண்ட. அப்பகுதியில் வழங்கிவந்த இராமகாதையைத் தங்களுக்கான இதிகாசமாக ஆக்கிக் கொண்டனர். அக்கதையில் கூறப்பட்ட இராமனையும், பாகவதத்தில் கூறப்பட்ட கிருஷ்ணனையும் தங்களின் இறைவராக ஆக்கினர். (இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே ஒரேபகுதியில் சிறு கால இடைவெளியில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளே)

அதுவரை சராசரி மனிதர்களின் வாழ்க்கைக் கதையாக இருந்த இராமாயணமும், மகாபாரதமும் இறைமைத்துவம் பூண்டன.

(பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சத்திய விரதனின் பிள்ளையான இக்குவாகு வம்சத்தில் வந்த தயரதனின் பிள்ளையான) இராமன் என்ற சராசரி மனிதனின் வாழ்வில் நடந்த நிகழ்வில் தங்கள் கடவுள் கொள்கையைப் புகுத்தி இராமனையும், கண்ணனையும் கடவுளாக்கினர்.

சத்திய விரதன் திராவிடர்களின் அரசன் என்றால் அவ்வழியில் வந்த இராமனும் திராவிடனே என்பதால் அவனை அவதாரமெடுத்த திருமால் என்றனர். இராமனைக் கடவுளாக்கிய ஆரியர் அக்கதையை எழுதிய சூத்திரரான ரட்சனைப் பார்ப்பனனாக்கி அந்த இராமகதையைத் தங்களுக்குரியதாக்கிக் கொண்டனர்.

இந்தப் புனைவுகள் அனைத்தையும் தாங்கிய இராமகதைகள் செவிவழியாகப் பலவிடங்களுக்கும் பரவின.

செவிவழிக் கதையாக இருந்த இராம காதை சோழ நாட்டுக்குள் புகுந்தபோது இராமன் கடவுளாகவே மாறிவிட்டிருந்தான். இச்சூழலில்தான் கம்பர் அக்கதையைத் தமிழில் எழுத விரும்பினார்.

கம்பர் வாழ்ந்த காலம் அஃதாவது கம்பராமாயணம் எழுந்த காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டாகும். ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வு பல்வேறு புனைவுகளாலும், நகர்வுகளாலும் கம்பர் காலத்தில் ஓர் இறைமைத்துவம் பெற்றே நிலைத்தது. எனவே, வான்மீகியால் மனிதனாகப் பார்க்கப்பட்ட இராமன் கம்பர் காலத்தில் மக்களின் வழக்கிற்கேற்பக் கடவுளாகக் காட்டப்பட வேண்டிய கட்டாயமாயிற்று.

இதைக் கம்பருக்கு முன் வாழ்ந்த யாரும் மறுத்தாரில்லை. இதற்குச் சான்றாக... சங்க இலக்கியக் காலந்தொட்டே இராமாயணச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

(தொடரும்)

No comments:

Post a Comment