'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

கைம்மாறு!

மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,

      மாற்றுதவி  எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்

      குளிரொளியை விலைசொல்லி விற்ப  துண்டோ?

விழைவுடனே உலகமெலாம் சுற்றிச்  சுற்றி,

     வெம்மையுடன்  ஒளிபரப்பும் கதிரும் என்றும்

உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?


பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?

     புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?

கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்

     குயிலினங்கள் பரிசிலெதும்  பெறுவ துண்டோ?

ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி

       எஞ்ஞான்றும்  உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,

ஊக்குதொகை  கேட்பதுண்டோ? உயர்ந்த  சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?

                                        -- தில்லைவேந்தன்

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்

காசு பணம் எதற்கு?

 காசு பணம் எதற்கு?


*********************

பறவைகளின் ஒற்றுமையைப் பார்க்கும் வேளை

படம்பிடித்து முகநூலில் பதிவர். ஆனால் 

உறவுகளின் கட்டமைப்பை ஒதுக்கி விட்டு

ஒண்டியென வாழ்வதற்கே ஊக்கம் கொள்வர்

சிறகடித்துப் பறப்பதற்கே சிந்தை தன்னில்

சிற்றின்ப வானத்தில் சேர்ந்து கொள்வர்

நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் நின்று 

நிதம்மாறும் குணமொன்றே  நெஞ்சில் வைப்பர்.

**

சுயநலத்தின் வழிசெல்ல சொகுசு வாழ்க்கை

சுதந்திரமாய் உள்ளதென்று சொல்லு வார்கள்

வியத்தகுவா னந்தபூக்கள் விளைந்து வாசம்

வீசுவதாய் வேறுசொல்லு வார்கள். மண்ணில்

பயமிகுந்த சூழலொன்று பாய்ந்து வந்து

படபடப்பை யூட்டுகின்ற பீதி வந்தால்

தயக்கமற்று உறவுகளைத் தாவிச் சென்று

தஞ்சமென்று கால்வீழ்ந்து தாங்கக் கேட்பர்.


**

விறகாலே எரிந்தோயும் வேட்கை கொண்டு

விளையாட்டாய் வளர்ந்துவிட்ட வெற்றுத் தேகம்

மறவாமல் ஒருநாளில் மண்ணில் சாயும்

மரபோடு இவ்வாழ்க்கை மறைந்து போகும்

திறவாமல் மனக்கதவை திடமாய்ப் பூட்டித்

திரிகின்ற கடும்போக்குத் தீயை மூட்டிப்

பிறவிக்குப் பயனற்றப் பேராய் வாழப் 

பிடிவாத மென்கின்றப் பீடை யேனோ?

**

எரிகின்ற தீபமென இருந்து நாளும்

இருளென்ற பேயகற்றி இடரும் நீக்கித்

திரிந்திட்ட மகிழ்ச்சிக்குத் தீமை செய்து

திக்கெட்டும் பதைபதைப்பைத் தேக்கி வைக்கத்

தெரியாத நோயொன்று தீண்டித் தீண்டித்

தினந்தோரும் பலபேரைத் தீர்க்கும் வாழ்க்கை

கரிகின்ற வேளையிலும் கருணை யற்று

கண்மூடிக் கிடப்பதற்கேன் காசு பணமோ?

**

மெய்யன் நடராஜ் 

வண்ணப்பாடல்

 வண்ணப்பாடல்


கவிதை

**********

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

தனத்தன தனத்தந் தனதானா



கருத்துட னுருக்குங் கவித்துவ மிருக்குங்

களிப்பது மிகுக்குங் கனவாமே

கழித்தவ ரொதுக்குங் கருப்பொரு ளெடுக்குங்

களத்தினி லொலிக்குங் கனலாமே


குருத்துவ மளிக்குங் குறிப்பொடு சிறக்குங்

குணத்தினை நிறைக்குங் குரலாமே

குழப்படி யொழிக்குங் குலப்பகை யழிக்குங்

கொதிப்பதை நிறுத்துங் கனிவாமே


திருக்குறள் முழக்குந் திருட்டினை விரட்டுந்

திரட்டுவ தனைத்துந் திருவாமே

தெருக்களை யசைக்குந் தருக்களி லிசைக்குந்

திருப்புக ழினிக்குங் கடலாமே


சுருக்கமும் அருத்தந் திகைப்புற விரிக்குஞ்

சுருக்கென வுறைக்குஞ் சுடராமே

துலக்கமு மொளிர்க்குங் கலக்கமு மடக்குஞ்

சுரத்தொடை யணைக்குங் கவியாமே!


செல்லையா வாமதேவன்