பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவையின் 11-ஆம் இலக்கியக் கூடல் 12-01-2020 அன்று ஆரணியிலுள்ள கிளை நூலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் திருமதி. சுதா ஜெயராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கவிஞர் அமலா அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் த. உமாராணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். திரு. சி.பாலாஜி, திரு. தமிழகழ்வன் சுப்பிரமணி, திரு. செஞ்சி சிவநாதன், திரு. பக்தவத்சலம், திரு.சிவசந்திரசேகர், திரு. மனோகரன், திரு. மு.சுகுந்த், திருமதி. வே. மனோகரி ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.
முனைவர் அர. விவேகானந்தன் அவர்கள் ஆசிரியப்பாவைப் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கிக் கூறி எளிமையாக மரபு பா கற்கும் வகை செய்தார்.
சிறப்புரையாளர் திருமதி. மா. பூர்ணிமா பார்த்தசாரதி அவர்கள் 'தமிழ் வெல்லும்' என்கிற தலைப்பில் செறிவான தமிழுணர்வூட்டும் உரை வீச்சை வழங்கினார். அதனைத்தொடர்ந்து பாவலர் எ.மோகன் அவர்கள் செவியினிக்கும் பொங்கல் விழாப் பாடலை யிசைத்து அனைவரையும் மகிழ்விலாழ்த்தினார்.
இந்நிகழ்வில், ஆரணி அ.பெ.மே. பள்ளியைச் சேர்ந்த மாணவிகளில் சிலர் தமிழ் பற்றிய மிக இனிமையான பாடலையும் கருத்தாழமிக்க சிற்றுரையையும் வழங்கினர்.
இறுதியாகத், திருமதி. சிறீவித்யா அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப் பண்ணுடன் இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவேறியது. மொத்தத்தில் இனிக்கும் தமிழ்ப் பொங்கலாக இக்கூடல் அமைந்தது.
No comments:
Post a Comment