'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

தமிழச்சி திருப்பள்ளியெழுச்சி

ஆதி கவி (எ) சாமி.சுரேசு

பகுதி - 1

(பாவை பாடல்கள்
இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா)

பீடுறு திங்களைப் பீடையென்றார் புன்மனத்தார்
வீடுறும் நற்பேற்றை மீமிசைத் தானுணர்த்தும்
நீடுதுயில் நீக்கி நிலையாமை தாந்தோற்றப்
பாடுபெற பைங்கிளிகாள் பண்டை வழிதோற்றிக்
கூடுவிட்டுப் புள்புரைய கூதலுறும் இந்நாளில்
நாடுக நற்குளியில் ஞாலம் புலருமுன்னர்
காடுகுளிர் இத்திங்கள் காத்திர காற்றுரையும்
கூடெலாம் நற்காற்றுக் கென்றேலே ரெம்பாவாய்.                                1

எல்லே! இளங்கிளிகாள்! ஏற்றமுற எந்தமிழர்
புல்லும் புலர்காலை பூச்சுனையில் நீராடி
நல்லோர் பலர்வாழும் நாட்டிலுள்ள மாசகல
வில்லேர் விழியாளே! வீரமுடன் நீயெழுந்தே
கொல்லும் பலதிறத்துக் கோணாங்கி ஆட்சியரை
வெல்லும் வகையாவும் வேண்டுகிறோம் சொல்லாயோ
நல்லார் பலரிருந்தும் ஞாயங்கள் வெல்வதில்லை
அல்லை யகற்றிடவே வாரேலோ ரெம்பாவாய்.                                    2

நற்றாய் உவந்தளித்த நற்கொழுந்தே! நன்மகளே!
செற்றும் பகைசூழச் சீரில்லை கண்ணுறக்கம்
முற்றாய் நிலமெலாம் மூரியென ஆகுமுன்னர்
சற்றே விழிதிறவாய்! தண்ணிலவே தாழ்திறவாய்!
கொற்றவை நீயிருக்கும் கொஞ்சுதமிழ் நாட்டையார்
பற்றவைப்பார் என்றேகேள் பாரதிர நன்றேகேள்
இற்றை இழிநிலையை இல்லாமல் செய்திடவுன்
ஒற்றை விழிதிறவாய் வீழ்துயிலோ ரெம்பாவாய்.                                3

என்னே உறக்கம்! எழுகமின்! எந்தாயே!
நின்னைத் தவிர்த்தென் நிலமகளும் சுற்றுவதோ
முன்னை வினையாவும் மூச்சடக்கிக்கொல்கிறதே
சின்னாய் யெழுந்தாள் சிதறாதோ வல்வினைகள்
இன்றேல் திருநிலத்தை யார்காக்கும் எம்மமகவே
நன்குணர்ந்தும் நாளேக நீள்துயிலேன் நாமகளே
முன்பின் தெரியாத மாந்தர்க்கும் நீர்வார்க்கும்
அன்பே! அகல்விளக்கே! ஐயேலோ ரெம்பாவாய்.                                 4

தூய தமிழ்நிலத்துத் தூமணியே! தொன்றமிழே!
ஆய கலையாவும் ஆழ அறிந்தவளே!
பாயும் புலிநிகர்த்த பார்வல் உடையவளே!
யாயுஞ் சிறுசேயும் ஏதிலார் போலவே
நாயின் கடையென்றே ஞாலந் துடைத்தாரின்
வாயை உடைத்தெறிந்து வன்றிறம் நீகாட்ட
காயம் வலுசெய்யக் காலை அதிர்ந்தெழுந்து
தேயும் படைநிற்கத் தேற்றேலோ ரெம்பாவாய்.                                    5

மஞ்சு மலைதழுவ மார்மீது தேன்சொரியக்
கொஞ்சு மிசைபாடி புள்ளினங்கள் வான்பறக்கும்
துஞ்சுங் குரங்கினமும் தூயவானைப்பார்த்துவிட்டு
அஞ்சு வதறியா(து) அங்குமிங்கும் தானோடும்
பிஞ்சு மினிக்கின்ற பீடுகொள் நன்னிலத்துப்
பஞ்சு பொதியன்ன பாங்குடனே வந்தவளே!
நெஞ்சு பொறுக்குதியோ நேருகின்ற காட்சிகண்டு
வெஞ்சினம் கொண்டே வெடியேலோரெம்பாவாய்                             6

அச்சில் சுழலுகிற ஆழியுடை இவ்வுல(கு)
அச்சில் வடியாத ஆரணங்கே உன்னுல(கு)
எச்சில் சிறுமாந்தர் ஏனென்பார் இல்லையென்று
மிச்சம் பிறிதின்றி மேனி பிடுங்குகின்றார்
அச்சோ! எதிர்காலம் ஆளின்றித் தானுழலும்
அச்சம் சிறிதின்றி ஆடுகிறார் மாட்சியுடன்
பச்சை நிறமழிந்து பார்மகளும் கேவுகிறாள்
நிச்ச நிரப்பின்றிக் கேளேலோ ரெம்பாவாய்.                                          7

மண்ணு முயிருடலும் வேறல்ல மாண்புடையாள்!
தண்ணீர் வெளியாடும் தாமரையும் நற்சேறே
எண்ணித் துணிகவெம் ஏந்திழையே! காடுதனில்
வண்ண மலராட வண்டாடக் கொண்டலாடப்
பண்ணிசைத்துத் தையலார் பாத்தியுள் நீராட்டி
மண்ணை இளகாக்கி வித்திட்டும் நாற்றிட்டும்
கிண்ணம் பிடிச்சோற்றுக் கீழ்க்கையில் நெய்யாட
திண்ணமுறச் செய்வதெலாம் மண்ணேலோ ரெம்பாவாய்.            8

தெங்கிளந் தீஞ்சுவையே தெள்ளுதமிழ்ப் பாச்சுவையே
சங்கத் தமிழருந்தும் தத்தையே! கண்திறவாய்!
பொங்கு புனலோடிப் பொன்விளைத்துப் போய்ச்சேரும்
நுங்கு நுரைததும்பும் நூறாற்றைக் கற்பழித்துச்
சங்கு தனக்கூதி தன்னினத்தைக் கொல்லுமிந்த
நங்க நரியினத்தை நான்குதனி கூறாக்கி
வங்கக் கடல்மீது வீசிவிட்டு வாருதற்கே
தங்க இமைதிறந்து தாக்கேலோ ரெம்பாவாய்.                                       9

முப்பா லருந்தி முகிழ்த்த குலவிளக்கே!
தப்பாது தான்முளைத்த தாழா மணிவிளக்கே!
எப்பால் புலவர்க்கும் எட்டாத தொன்தமிழில்
உப்பாய் சிறுசேர்த்தி உப்பிட்ட இம்மொழியில்
வெப்புப் பிறமொழியை வேரோடல் செய்தாரைத்
தப்பவர் செய்கையெனத் தாளித் தெடுப்பதற்கும்
செப்பு மொழியொடும் செங்கண் விழியோடும்
துப்பும் மொழியென்றே சீறேலோ ரெம்பாவாய்.                                  10
                                    (தொடரும்)

No comments:

Post a Comment