'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

நாய்ப்பிழைப்பு

சரஸ்வதிராசேந்திரன்

ஏய், உனக்கு என்னாச்சு? பைத்தியம் மாதிரி நடுரோட்டிலே படுத்திருக்கே? எழுந்துவா. டிராபிக் நிறைய வர இடத்திலே ஏன் இப்படி மறியல் பண்ற மாதிரி படுத்திருக்கே, ப்ளீஸ் எதா இருந்தாலும் பேசிக்கலாம், இப்போ எழுந்து வா அதோ பார், பஸ் வேகமா வருது. வாயேன்என்று குட்டி ஆடு கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே வேகமாக வந்த பஸ் ரோசிமேல் ஏறி இறங்கியது. ரோசி துடித்துக் கொண்டிருந்தது.

சைசனியன், படுக்க இடம் பார்த்திருக்கு பார்என்று திட்டியபடியே யாரோ ஒருவன்  அதை இழுத்து ரோட்டோரத்தில் தள்ளினான். தலையைத் தூக்க முடியாமல் கண்களைப்போட்டு உருட்டிக் கொண்டிருந்தது ரோசி. பக்கத்தில்போய் நின்று கண்ணீர் வடித்தபடியே, ''நான் எத்தனை கத்தினேன், நீ கேட்டாயா? இப்பப்பார், உன் உயிர் போகப்போகிறது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தே?” பரிதாபப்பட்ட ஆடு கேட்டது.

''என் கதை ரொம்ப சோகமானது, என்னத்தைச் சொல்றது? ஆனால் என்னைப் பெற்றவர்களும், உடன்பிறப்புகளும் படாத கவலையை என்னை ஒரு முறையே பார்த்த    நீ என் மரணத்தை தடுக்க எத்தனையோ முயன்றாய், நான்தான் கேட்கவில்லை. உன் பாசத்தைப் பார்க்கும்போது என் மரணம் இப்போ என்னை வாழத் தூண்டுது. ஆனால்  அது முடியாது, என்னோட பிறந்தது மூன்று பேர். நான் கண்விழித்து இரண்டு மாதமே ஆனது, என் உடன்பிறந்தவர்களுடன் ஜாலியா விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போ காரில் வந்த ஒரு கனவான் டிரைவரிடம் அதோ பார், சுத்த கருப்பு கலரில் கிடக்கிற அந்த நாயைத் தூக்கிட்டு வாஎன்று ஆணை பிறப்பிக்க, என்னைக் கதறக் கதறத் தூக்கிட்டு போனான் அவர் வீட்டுக்கு.

நான் தாயையும், உடன்பிறப்புகளையும் பிரிந்த சோகத்தில் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்தேன். அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடாமல் இருக்கமுடியும்? வயிறு பசித்ததே, போட்டதைச் சாப்பிட்டேன். கொஞ்சம் வளர்ந்ததும் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.

அவர்கள் புதிதாக வீடுகட்டும் இடத்தில் என்னைக் காவல் காக்க வைத்தார்கள். வாட்ச்மேன் குடும்பமும் அங்கேயே இருந்தது ஒரு குடிசை போட்டு. அவர்கள் சாப்பிட்ட எச்சில் மீதியைப் போட்டார்கள். விதியே என்று அதையும் தின்று கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் மட்டும் என்னை அங்கிருந்த ஆற்று மணலில் கட்டிப் போட்டுவிட்டு வாட்ச்மேன் வீட்டுக்குள் படுத்து விடுவான். நான் பயத்தில் கத்தினால் வெளியே வந்து கம்பால் என்னை அடிப்பான் கடுப்பில். விறுவிறுவென்று வேலை நடந்தது. வீட்டு வேலையைப் பார்க்கவரும் முதலாளி  கடையில் விற்கும் டைகர் பிஸ்கட்டை நாயான எனக்கு வாங்கிப் போடுவார், அவர்கள் எப்படி நடத்தினாலும் நான் நன்றி உணர்ச்சியுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தேன். வீடு வேலையாகி விட்டது. ஒரு வாரத்தில் கிரஹப் பிரவேசம் என்று எல்லோரும் பிசியாக இருந்தார்கள். இப்போதெல்லாம் என்னைக் கட்டுவது இல்லை. சுதந்திரமாகத்தான் விட்டார்கள். ஆற்று மணலில் படுத்து இஷ்டப்படி புரண்டு விளையாடுவேன் குஷியாக.

கிரஹப்பிரவேச முதல் நாள் வந்த முதலாளி வாட்ச்மேனைக் கூப்பிட்டுஏம்பா நாளைக்கு கிரஹப்பிரவேசம்; இது என்ன திருஷ்டி பரிகாரமா? அடிச்சு விரட்டு, அசிங்கமா வீட்டு முன்னாலஎன்று கூசாமல் சொல்ல அந்த வாட்ச்மேன் என்னைக் கம்பை எடுத்து விரட்டினான்.

அன்னைக்குத்தான் மனுஷங்களைப் புரிஞ்சுகிட்டேன். தெருமுனைவரை விரட்டி விரட்டி அடித்தான். ஓடினேன் ஓடினேன், கால் வந்த திக்கெல்லாம், போகும் இடமெல்லாம் என் தாய் தென்படுகிறாளா எனப் பார்த்தேன். இல்லை கால்வலி மனவலியோடு பஸ் ஸ்டாண்ட் வந்த நான் அசதியால் அங்கு ஒரு மூலையில் ஆற்று மணல் கிடக்க, அதில் படுத்துக் கண் அயர்ந்தேன். அப்போது ஒருவன் பக்கத்தில் இருந்த ஒருவனிடம்அங்கே பாருடா! காலை நீட்டிகிட்டுச் சுகமா தூங்கிறதை. நாம வேலை கிடைக்காம நாயா பேயா அலையுறோம். பிழைப்புக்காக இந்த நாய்க்கு இருக்கிற சுகம் கூட நமக்கில்லையே. ரொம்பப்  பொறாமையா இருக்குடா அந்த நாயைப் பார்த்து, அதுக்கு இருக்கிற நிம்மதி கூட எனக்கில்லையே”. அவன் எந்த நேரத்தில் கண் வைத்தானோ, திடீரென்று ஒரு பஸ்காரன்  என் அருகில் வந்து உரசுராப்பில சரக் பரக்குன்னு பிரேக் அடிக்க, பதறிப் போய் பக்கத்தில் இருந்த டீ கடையில் ஒதுங்கினேன். அந்த டீ கடைக்காரன் என்னவோ அவன் கடை புரோட்டாவைத் திங்க வரதா நினைச்சு, “சனியனே! எங்க வரே?” என்று திட்டி குபீருன்னு  கொதிக்கிற வெந்நீரை என்மேல ஊற்றத் துடித்துப் போய் அலறி ஓடிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் மேல் விழ, பயந்து போன அவன் கம்பை எடுத்து அவன் கடுப்பைக் காட்டி என்னை ஓட ஓட விரட்டினான். நான் மீண்டும் ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே, மனம் விரக்தி அடைந்தது. கடவுள் நமக்கு பேசும் திறனைக் கொடுத்திருந்தாலாவது இந்த நன்றிகெட்ட மனிதர்களைத் திட்டியாவது தீர்க்கலாம். அதுவும் இல்லை. நொந்துபோய் நடந்தேன்.

பள்ளி விட்டு வந்துகொண்டிருந்த மாணவக் குரங்குகள் என்னைக் கண்டதும் கல்லை விட்டெறிய மீண்டும் ஓடினேன். விடாது அவர்கள் துரத்த, நான் இடறிப்போய் முள்வேலியில் விழ, என் வால் மாட்டிக் கொண்டது. அப்பொழுதும் இரக்கமில்லாமல் கல்லால் அடிக்க நான் வலி பொறுக்கமுடியாமல் ஓட எத்தனிக்க, என் வால் அறுபட்டுவிழ, நான் அதைப் பொருட்படுத்தாமல் ஓடினேன். உயிரைக்  காப்பாற்றிக் கொள்ள வால் போனதில் எனக்குத் துளியும் வருத்தமில்லை. ஏனெனில் என் பழைய முதலாளியையோ, வாட்ச்மேனையோ பார்த்தால் என்னை யறியாமல் நன்றி விசுவாசத்தால் வால் ஆடுமே, அது கூடாது என்பதற்காகத்தான். நம்மிடம் நன்றி இல்லாதவர்களிடம் நமக்கு ஏன் நன்றி? என்னைப் போல் வாயில்லாத நீ என்மேல் காட்டும் பாசத்தைப் பார்த்து எனக்கு வாழணும்னு தோணுது. ஆனால்.. இதோ என் உயிர்... போகப்போகிறதுகாலன் என்னை நெருங்கி விட்டான்.

ஆடே! நாய்ப்பிழைப்பு என்பது இதுதானோ?... நான் வரேன்வெட்டி வெட்டி இழுத்து உயிர் விட்டது ரோசி. கண்ணீர் விட்டபடியே அதைக் கடந்தது ஆடு. என் நிலைமை மட்டும் என்ன? கசாப்புக் கடைதான். தன் நிலைமையும் நினைவு வர அதற்கும் சேர்த்துக் கண்ணீர் விட்டபடியே சென்றது. அப்பொழுதும் விடவில்லை ரோசியை. பிரியாணி செய்ய எடுத்துப் போனான் ஒருவன்.

1 comment:

  1. என்கதையைலெளியிட்டதமிழ்க்குதிருக்கு நன்றி

    ReplyDelete