'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2018

மாசுபடும் உலகம்

அக்கினிச் சிறகு முடியரசு

இயற்கை என்பவள் தாய். அவளுக்குக் களங்கம் விளைவித்தலே மாசுபடுத்தல்.

மனிதனின் சுயநலம் உலக அழிவுக்கே காரணமாகிக் கொண்டிருக்கிறது. உலகப் போர்களால் அழிந்தோம். மூன்றாம் உலகப்போருக்குப் பின்னர் அழிவு என்றால் 'நமக்கு நாமே திட்டம்' தான். இயற்கையை மாசுபடுத்தி நாமே நம்மை அழிவுக்குள்ளாக்குவதுதான் இது.

நிலம், நீர், காற்று மூன்றையும் காசாக்கிப் பார்ப்பவனே இயற்கையை மாசாக்கிப் பின் இறுதியில் நோய்வாய்ப்பட்டு முடங்க ஆயத்தமாகிறான். தாயை மாசுபடுத்துபவன் என்றுமே  செழித்து வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. காற்று மாசு பற்றிச் சிலவற்றைப் பகிர்கிறேன்.

அஜாக்கிரதையாக வீசப்பட்ட பீடி, சிகரெட் சாலையோரம் குளிர்காயப் பயன்படுத்தும் சருகுகள்கூட வனத்தீயை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளைப் பத்திரிக்கைகளில் பார்த்துக்கொண்டே தொழிற்சாலைக் கழிவுகளை முதலாளிகளின் ஆணைக்கிணங்கி சாலையோரங்களில் கொட்டி எரிப்போர் எத்தனை பேர்? புகைமாசு தானே உருவாவதைவிட நம்மாலேயே 90% உருவாக்கப்படுகிறது என்பதே உண்மை.
       
தொழிற்சாலைப் புகை, அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள், கிரஷர் கல் உடைப்பு- எம் சேண்ட் ஆலைகள், வாகனப் புகை, உதவாத பொருட்களை எரிப்பது போன்றவையே நாம் காற்றைக் களங்கப்படுத்தும் தெரிந்தே செய்யும் காரியங்கள். இது தவிர சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றைத் தொழிற்சாலைப் புகையால் உருவாக்கி 'நமக்கு நாமே' நச்சுத்தன்மையை உருவாக்கி நோய்களுக்கு விருந்தாகிறோம்.

சல்பர் டையாக்ஸைடு அமில மழையை உருவாக்கும். அமில மழை உடலில் படும்போது எண்ணற்ற பாதிப்புகள் உண்டாகும். முக்கியமாகத் தோல், கண் பார்வை போன்றவற்றை பாதிக்கும். கட்டிடங்களின் பெயின்ட் சீக்கிரமாக வெளிரும். காயப்போடும் துணிகள் வெளிரும், மங்கும். தாவரங்களின் இயல்பான பண்புகள் கெடும்.

நைட்ரஜன் டையாக்ஸைடு வளிமண்டலத்தின் மிக முக்கிய நச்சு ஆகும். நைட்ரஜன் டையாக்ஸைடு நீருடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆசிடாக  மாறிவிடும். இது பேராபத்தை விளைவிக்கும்.

மனிதன்,விலங்குகளின் தோல் மற்றும் சதையைக்கூடப் பதம் பார்த்துவிடும். தாவரங்கள் கருகிவிடும்.

கார்பன் மோனாக்சைடு குப்பைகளை எரிப்பதால் உண்டாகிறது. இவ் வாயு மூச்சுத் திணறல், தலைவலி, சுவாசக் குழாயில் கோழை கட்டுதல், கண் எரிச்சல், கண் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 'ஹைபாக்சியா ' எனும் ஆக்சிஜன் பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்தும். 'ஹைபாக்சியா' மூச்சுத் திணறல் வருங்காலத்தில் அதிகம் ஏற்படும். தாவரங்கள் பாதிப்படையும். இலைச் சுருட்டு ஏற்பட இதுவே முக்கியக் காரணமாகும். காய் கனிகள் முன் முதிர்வு ஏற்பட்டு வெம்பி விடுவதும் இதனால்தான்.

இந்த காற்று மாசைத் தடுப்பது எப்படி?

சில வெளிநாட்டு சதிகள்கூட இந்தியா மாசுபடக் காரணமாக அமைகிறது எப்படி? போன்ற தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

இயற்கையே தாயானவளாம்...

தாயைக் களங்கப்படுத்தலாமா?

No comments:

Post a Comment