'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 10


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

போக்குவரத்து

இந்நாட்டில் மருத்துவம், கல்வி என்பன எப்படி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அதே போன்று போக்குவரத்தும் உள்ளகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து என்பது மக்களுக்கானது. ஒவ்வொருவரும் பயணத்திற்காகப் பயன்படுத்தும் மகிழுந்து, அரசப் போக்குவரத்துப் பேருந்து, தொடர்வண்டி போன்றவை பயணப்படும் பாதைகளும் அரசினால் சரியாகப் பேணப் படுகின்றது.

டென்மார்க் நாடு, பல சிறு தீவுகளைக் கொண்ட நாடாகும். இவற்றுள் ஜேர்மன் நாட்டுடன் நிலத்தொடர்புள்ள பகுதி இரு பெரும் தீவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியுடன் இணைந்துள்ள நிலப்பகுதியும் அதற்கு அருகிலுள்ள தீவும் பல்லாண்டுகளுக்கு முன்பே மேன்பாலம் மூலமாக இணைக்கப்பட்டு நேரடியான பயணங்களுக்கு வழி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலமாக மகிழுந்துகளும், தொடர் வண்டிகளும் இடையூறின்றிப் பயணிக்க ஏதுவாயிற்று. இப்பகுதியும் தலைநகர் கொப்பன்கெகன் அமைந்துள்ள தீவுப் பகுதியும் இணைப்பின்றி இருந்ததனால் கப்பல் மூலமே செல்ல வேண்டியிருந்தது. அதாவது மகிழுந்து களும், தொடர்வண்டிகளும், பேருந்துகளும், மக்களும் கப்பல் மூலமாக அடுத்த பகுதியினைச் சென்றடைய வேண்டியிருந்தது.




இந்நாட்டிற்கு 1991-ஆம் ஆண்டு வந்தபோது இவ்வாறே நானும் பயணித்தேன். ஆயினும் சில ஆண்டுகளின் பின் இரு மேன்பாலங்கள் மூலமாகவும் நீரடிச் சுரங்க வழி மூலமாகவும் 18 கிலோமீற்றர் போக்குவரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு இவ் வழியானது பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது. தொடர்வண்டியினைத் தவிர அனைத்து வாகனங்களும் இப்பாதையினைப் பயன் படுத்துவதற்காகப் பணம் செலுத்த வேண்டி யுள்ளதினையும் குறிப்பிட்டே யாக வேண்டும்.

இங்குச் சாலை விதிகள் மிகவும் கடுமையானதாக இருக்கின்றது. மக்கள் குடியிருப்புப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும்போது 50 கி.மீ/மணி வேகமும், குடியிருப்புகளைத் தாண்டி 80 கிமீ/மணி வேகமும், நெடுஞ்சாலைகளில் அதியுயர்வேகம் 130 கிமீ/ மணியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ் வரம்பினை மீறி வண்டியில் செல்வோர்கள் வாகனப் பகுதிக்குப் பொறுப்பான பாதுகாவலர் களினால் தடுக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தண்டப் பணமும் அறவிடப்படும். இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் 99% எமக்குச் சார்பான முடிவு கிட்டாது என்பதனையும் குறிப்பிடலாம்.

அனைத்து வாகன உரிமையாளர்களும் ஆண்டுதோறும் வாகனத்தின் தன்மையினைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகையினை அரசிற்குச் செலுத்த வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் தாமதமின்றி மேலதிகப் பாதைகள் அமைக்கப் பட்டு நேர தாமதம் சரி செய்யப்படுகின்றது. போக்குவரத்துச் சட்டத் திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆட்சியாளர்க ளாயினும், அரச குடும்பத்தவராயினும் தவறிழைத்தால் வேறுபாடு இன்றித் தண்டிக்கப்படுவார்கள்.  இந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மதுபோதையில் மகிழுந்து செலுத்தியதற்காக தண்டிக்கப்பட்டதையும், பதவியிலிருந்து விலகியதையும் இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment