'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

தாய்மொழி தமிழாய் இருக்காது!



மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

(தெம்மாங்குக் கண்ணிகள்)

கொத்தித் திரியும் கோழிக ளுக்குக்
    குறிக்கோள் எதுவு மிருக்காது - தமிழ்
நத்திப் பிழைக்கும் நாய்களுக் கிங்கே
    நன்மனம் துளியு மிருக்காது!                                   1

தன்மொழிப் பற்றைத் தவறியும் மறவான்
    தமிழில் பற்றே பிறக்காது - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!                           2

வள்ளுவம் எங்கள் வாழ்வியல் என்றால்
    மறுப்பான் துடிப்பான் பரிதவிப்பான் - பின்
வள்ளுவன் எங்கள் சாதியே என்பான்
    வண்ணம் பூசி மகிழ்ந்திடுவான்                             3

தமிழில் பிறமொழிச் சொற்களை எந்தத்
    தயக்கமும் இன்றிக் கலந்திடுவான் - அது
தமிழை வளர்க்கும் வழியே என்பான்
    சரம்சர மாய்ப்பொய் அளந்திடுவான்!                  4
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

மரபைப் போற்றும் செயல்கள் எவையும்
    மதிக்கவும் மாட்டான் சிதைத்தொழிப்பான் - தமிழ்
மரபு கவியிலும் பிழையைச் செய்வான்
    மரபைக் கொன்று புதைத்தொழிப்பான்!              5

வலிமிகும் என்றால் மிகாமல் எழுதி
    வழக்கப் படுத்துவோம் எனச்சொல்வான் - அவன்
    வலிமிகா தென்றால் "நல்லா யிருக்கே"
மிகுந்தால் என்ன கேடென்பான்!                               6
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

யாப்பில் பலவிதப் பிழைகளைச் செய்வான்
    அதனால் என்ன இழப்பென்பான் - நீள
ஆப்பை வைப்பான் ஆலாம் தமிழை
    அசைத்துத் தள்ள முயற்சிப்பான்!                            7

அரைகுறை யாகக் கற்றுக் கொள்வான்
    அதற்குள் ஆசான் ஆகிடுவான் - புகழ்
விரைவாய்ப் பெறுவான் சான்றிதழ் விருதை
    விலைகொடுத் தேதான் வாங்கிடுவான்!                 8
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

இலக்கிய வட்டம் பேரவை என்பான்
    இலக்கோ எதுவும் இருக்காது - பணம்
பலப்பல வாகச் சுருட்டிக் கொழுப்பான்
    பைந்தமிழ்த் தொண்டே நடக்காது!                         9

தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ் என்பான்
    தன்பிள் ளைக்குத் தரமாட்டான் - அவன்
தமிழை விடுத்துத் தன்வீட் டிற்குள்
    தாய்மொழிப் பற்றை விடமாட்டான்!                    10
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

தையே எங்கள் புத்தாண் டென்றால்
    தைதை தைதை எனக்குதிப்பான்! - மிகு
பொய்யைப் புரட்டைச் சேர்த்துச் சித்திரை
    புத்தாண் டென்று கதையளப்பான்!                       11

வாழ்க்கை நடத்தத் தமிழைப் பேசி
    மானங்கெட்டு வாழ்ந்திடுவான் - இழி
சீழ்க்கை யாகப் புழுத்து நெளிந்து
    சீரழி வாக வீழ்ந்திடுவான்!                                      12
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

தம்பீ தம்பீ விழித்துக் கொள்வாய்
    தமிழின் புண்ணை ஆற்றிடுவாய் - உன்னை
நம்பி இந்தத் தமிழினம் இருக்கு
    நாட்டை உலகில் ஏற்றிடுவாய்! - தமிழ்
    நாட்டை உலகில் ஏற்றிடுவாய்!                              13

No comments:

Post a Comment