'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

விடுதி வாழ்க்கை

மணிமாறன் கதிரேசன்
பட்டயக் கணக்காளர்
(Chartered Accountant)

பள்ளியில் ஆண்டுத் தேர்வு முடிந்தது. பள்ளிக்கு ஒரு மாத காலம் விடுமுறை என்பதால் பள்ளியில் இருக்கும் விடுதிக்கும் விடுமுறை விடப்பட்டது. விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்புப் படிக்கும் யாழினிக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. இந்த ஒரு மாதக் காலத்தை எப்படி எப்படி கழிக்க வேண்டும் எனவும், என்ன உணவுகளை அம்மாவிடம் வாங்கி உண்ண வேண்டும் எனவும் கற்பனை வளர்த்துக் கொண்டாள். அது மட்டுமல்ல, அவளுடைய  நண்பர்களையும் உறவினர்களையும் பார்ப்போம் என்ற மகிழ்ச்சி வேறு. முக்கியமாக அவளுடைய  பாட்டியைப் பார்த்துப் பலவிதமான பலகாரங்களை செய்து கொடுக்கச் சொல்ல வேண்டுமென பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறாள்.

அவளுடைய நண்பர்களை எல்லாம்  இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவர்களுடைய   பெற்றோர்கள் அழைத்துச் செல்லத் தன்னை அழைத்துப்போகத் தன் பெற்றோர் வருவார்கள் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். இருப்பினும் ஏமாற்றமே. அவளுடைய தந்தை, தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தான் தம் சொந்தக்காரரை அனுப்புவதாகவும் அவருடன் வீட்டிற்கு வரவும் கூறிவிட்டு வைக்கிறார்.

அப்பா கூறியதுபோல் அவரது சொந்தக்காரர் கூட அல்ல, அவர் வீட்டிற்குப் பக்கத்தில் வசிக்கும் அவர் அவரது கடை வேலையை முடித்துக்கொண்டு இரவு 10.30 மணிக்கு  விடுதியை அடைகிறார். விடுதியில் அவளை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

இவளோ, பேருந்தில் ஏறியதிலிருந்து அவரிடம் கேள்விகளைத் தொடுக்க முயல, அவரோ சற்றும் பதில் சொல்ல முற்படாமல் வேலை அசதியில் உறக்கத்திற்குச் சென்றுவிட்டார். அவளோ அவளுக்கான விடை கிடைக்காத நிலையில் செய்வதறியாது புலம்பிக் கொண்டும், அவளது வீட்டின் நினைவுகளை நினைந்தும் பயணிக்கலானாள். அவளது எண்ணமெல்லாம் அவளது வீட்டையும், அவளுடைய பெற்றோரையும் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருக்கிறது, அவளுக்கு இந்தப் பயண தூரம் பல வருட காலம் போல சென்று கொண்டிருந்தது. எப்பொழுது தனது வீடு வரும் என்ற எண்ணமே மேலோங்கியது, தனது வீடு வரவில்லையென நினைந்துகொண்டே தன்னையும் அறியாமல் தூங்கினாள்.

அதிகாலை 3.45 மணிக்கு அவளையும் அறியாமல் எழுந்தாள், ஆம். அவளுக்குள் ஒரு வித சந்தோஷம் மற்றும் மனத்தில் மிகப்பெரிய கொண்டாட்டமே பூத்துக் குலுங்கியது. காரணம் அவளது ஊர் வருகின்ற சந்தோஷம். அவளுக்கு மனத்தளவில் தெரிந்திட அவளாக விழித்துக் கொண்டாள், அவள் அந்த பக்கத்து வீட்டுக்காரரையும் ஆவலோடு எழுப்புகிறாள்.

சரியாகக் காலையில் 4 மணியளவில் பேருந்து அவளது ஊருக்கு வந்து சேர்ந்தது. காலையில் பேருந்து நிலையத்தில் அவளுடைய கண்கள் தனது அப்பாவைத் தேடியது. ஆனால், அவளுடைய அப்பா இங்கும் அவளை அழைத்துச் செல்ல வரவில்லை. என்னைக் கூப்பிட இங்கும் வரவில்லையா என மனத்திற்குள் புலம்பியபடி, வீட்டில் அவரிடம் பேசப் போவதில்லை என விளையாட்டுச் சபதம் எடுத்தவாறே அவருடன் அவளது வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தாள்.

சரியாக 4.10 மணிக்கு அவள் அவளது வீட்டை அடைந்துவிட்டாள். வீட்டின் வாசலில் ஆவலுடன் தன்னுடைய அப்பாவும், அம்மாவும் தன்னை அழைக்கக் காத்திருப்பார்கள் என்று எண்ணி வந்தவளுக்கு ஏமாற்றம். அவள் வீடோ பூட்டியிருந்தது.

ஆமாம்அவளுடைய  பெற்றோர் இருவரும் வேலை செய்துவிட்டு வந்த அசதியில் தூங்கி விட்டார்கள். மேலும் அவளது அம்மா தன்மகள் வருகிறாள் என்பதற்காக இரண்டு நாள் விடுமுறை எடுப்பதால் தன்னுடைய வேலையை இரவு பகலாக முடித்துவிட்டு வரவேண்டிய நிலை.  அவள் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரை அழைக்க, அவளது தாயார் ஓடி வந்து தன் மகளை அள்ளிக்கொண்டு கட்டியணைத்து முத்த மிடுகிறாள். இவளோ தன் தாயிடம் அவளைக் கூப்பிட யாரும் வரவில்லையெனச் செல்லமாகக் கோபித்துக் கொள்கிறாள். அப்பாவிடம் இனிமேல் நான் பேசப் போவதில்லை என்றும், பரவாயில்லைஉன்னிடம் பேசிக் கொள்கிறேன் என்றும் வந்தவுடன் சட்டம் போட்டாள்.

வண்டியில் வந்த அசதியில் தனது அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தாள். அவளது தந்தையைக் கண்டும் காணாமல். அவளது தந்தையும் தன்னிடம் உள்ள கோபத்தைக் குறைத்துக் கொள்ளும்படியும், இனிமேல் இப்படி நடக்காது எனவும் ஒப்புதல் தந்து மகளைச் சமாதானப்படுத்துகிறார். மகளும் சற்றும் யோசிக்காமல் தந்தையின் பாசத்தில் மூழ்கிக் கன்னத்தில் முத்தமிட்டுப் படுக்கைக்குச் செல்கிறாள்.

மறுநாள் காலையில் அவளுடைய அம்மா அவளுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்ய ஆரம்பித்தாள். ஆம். அதற்காகத் தானே இரண்டு நாள் பணிக்கு விடுமுறை விடுத்திருந்தாள். வழக்கம்போல அவளுடைய  அப்பா அதிகாலையில் வேலைக்குக் கிளம்பிவிட்டார்.

காலையில் எட்டு மணிக்கு எழுந்து வந்தாள் யாழினி. எழுந்து வந்ததும் தன் அப்பா எங்கே என வினவச் சற்றே சில பல பொய்களைச் சொல்லிச் சமாளித்தாள். அதனைக் காதில் வாங்கியும் வாங்காதவளுமாய் அம்மாவிடம் தேநீர் வேண்டுமெனக் கேட்டுத் தன் விடுதிக் கதையை மீண்டும் நேரில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

விடுதியில் கிடைக்கும் தேநீர் பற்றியும், உணவுப் பண்டங்களைப் பற்றியும், அவளுடைய நண்பர்களின் ஆர்ப்பரிப்பு, அலப்பறையென அடுக்கிக் கொண்டே சென்றாள். இன்னும்  அவளது அட்டவணை குறையவில்லை. ஆம். பல் துலக்கப் பலதூரம் போக வேண்டுமெனவும், குளிப்பதற்கோ கும்பலில் நின்று அசைய வேண்டுமெனவும், கழிவறைக்குச் செல்வதில் கஷ்டகாலந்தான் என அவள் அனுபவித்த  துன்பத்தை அனுபவக் கூற்றாகக் கூறிக்கொண்டிருந்தாள்.  அம்மாவும் அவளைச் சரிசரியெனத் தேற்றியவாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தன் மகள் வந்திருக்கிறாள் என்பதற்காக அவள் அப்பா காலையிலேயே அவளுக்குப் பிடித்தமான பண்டங்களையும் அவள் விரும்பும் மீனும் வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டே வேலைக்குச் சென்றார். அவளுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. இருப்பினும் அப்பாவிடம் சேர்ந்து சாப்பிட முடியாமல் போனதில் வருத்தமே.

யாழினி அம்மாவை அழைத்தாள். அவள் அம்மாவிடம், “அம்மா இன்றிலிருந்து என்னுடைய துணிகளை நீயே துவைத்துத் தந்துவிடு, நான் ஒருமாத காலம் நிம்மதியாக இருப்பேன்என்றாள். அவள் மறுபடியும் துணியைத் துவைப்பதில் நடக்கும் கேலிகளையும், கஷ்டங்களையும் அவள் அம்மாவிற்கு எடுத்துக் கூறினாள்.

அது மட்டுமா… “நீயெல்லாம் விடுதியில் இப்படித்தான் கஷ்டப்பட்டாயாஎனக் கேட்க, அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. தாம் விடுதியில் எங்கே தங்கினோம் என்று மனத்திற்குள் குற்ற உணர்ச்சியுடன் சிந்தித்துக்கொண்டிருந்தாள். அது மட்டுமாஅவள் விடுதியில் என்னவெல்லாம் அழுந்தினாலோ அவற்றை எல்லாம் அம்மாவிடம் சொல்லி அவளுக்கெனத் தனி இரக்கத்தைச் சம்பாதித்தாள். இவள் பேசுவதைக் கண்டு, அவள் அம்மாவும்சரிநான் பார்த்துக்கொள்கிறேன்என்று உறுதி கூறினாள். அம்மாவிடம் சொன்ன  கதையை மீண்டும் பாட்டியிடமும் சொல்லிப் பாட்டியிடமும் நல்ல வேலை வாங்கினாள்.

இப்படியே காலைப் பொழுது கடக்க, யாழினியின் அம்மா, அவளுடைய அப்பாவிற்குத் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, “உங்களைச் சீக்கிரமாக வரச்சொல்கிறாள்என்றாள். அவனும் சரியெனச் சொல்லி வைக்கிறான். வந்த பிறகு இருவரும் தன் குழந்தையிடம் பேசி மகிழ்ந்து அவளுடன் வெளியே சென்று அவளுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று வருகின்றனர். இவ்வாறு அந்நாள் நன்னாளாக முடிந்தது.
இரவு உறங்கப் போகுமுன் யாழினியின் அம்மா அவள் விடுதியில் படும் சிரமத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். எப்போதும் சீக்கிரமே தூங்கப் போகும் யாழினி அன்று வழக்கத்துக்கு மாறாகத் தூங்காமல் தன் அறையில் படுத்துக் கிடந்தாள். வழக்கம்போல் அவள் பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். ஆம்எல்லாம் அவளை விடுதியில் சேர்த்ததன் காரணமாகத்தான். அவளை விடுதியில் சேர்த்ததில் துளியும் அவள் அம்மாவிற்கு விருப்பமில்லை, அவள் அப்பாவிற்கும். இருப்பினும் யாழினியின் அம்மா வேலைக்குச் செல்வதால் அவள் அப்பா இம்முடிவை எடுத்தார். இம்முடிவை அவள் அம்மா மாற்றச் சொல்லியும் கேட்டபாடில்லை. அவள் அப்பாவிற்கு, அவள் அம்மா வேலைக்குப் போய்கொண்டே தன் மகளைப் பார்த்துக்கொள்ள முடியாதென முடிவெடுத்து விட்டார். அவள் அம்மாவோ, “என்ன வேலை இருப்பினும் என் மகளை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்என்ற கூற்றைப் பல முறை சொல்லியும், கெஞ்சிக் கேட்டும், அவள் அப்பாவிற்குப் புரியவைக்க முடியவில்லை.

மேலும் அவள் அம்மா தம் குழந்தைக்கு இன்னும் விவரம் பத்தாது எனவும் அதுவும் அந்த மூன்று நாட்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டு மெனவும்,  என்னென்ன செய்ய வேண்டும், எவை செய்யலாம், எவை செய்யக் கூடாது என்பதுகூட அவளுக்கு தெரியாது, இந்த மாதிரியான நேரங்களில் அவள் தன்னிடம் வளர்வதே சிறப்பு எனவும், மேலும் அவளுக்குத் தேவையானது எவையெனவும் தன்னால் மட்டுமே அறிய முடியுமெனக் கூறியும் எந்தப் பயனுமில்லை, அவள் அப்பா காதில் வாங்கவும் இல்லை, அதற்கு மாறாக அவளுக்கு எல்லாம் தன் மகள் கற்றுக் கொள்வாள் என்று கூறி விடுதியில் சேர்த்தார்.

இன்று மட்டுமல்லஇப்படி ஒவ்வொரு நாளும் தன் மகளை விடுதியில் சேர்த்ததைப் பற்றி அவள் தந்தையிடம் குறை சொல்லிக் கொண்டிருப்பாள். சிலநேரங்களில் இருவரிடையே வாக்கு வாதங்களாகவும் இருக்கும், சில சமயம் அவை சண்டையில் முடியும். வழக்கம்போல ஆரம்பித்த பேச்சுவார்த்தை இன்று அவள் வந்ததுகூட நினைவில்லாமல் சண்டைக்கு வழிவகுத்தது. இப்படியே தொடர்ந்த சண்டையைக் காதில் வாங்கியும் வாங்காமலும் இருந்த யாழினிக்கு அவளால் பொருத்துக்கொள்ள முடியாதவளாய் இருவரின் முன் வந்து  நின்றாள்.

அம்மா, அப்பா! நான் விடுதியில் தங்கிய ஒவ்வொரு நாளும் எனக்கு மட்டுந்தான் நரகம் என நினைத்தேன். ஆனால், நான் இல்லாமல் இருக்கும் உங்களுக்கும் இங்கே நரகம் சூழ்ந்துள்ளது என்பதை இன்றே அறிவேன். விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு என்னை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுத்துள்ளது. ஆகவே, என்னுடைய வேலைகளை நானே பார்த்துக் கொள்கிறேன். என்னை இந்த வீட்டில் தங்க அனுமதியளியுங்கள்என்று மன்றாடினாள். “உங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளை நான் கொடுக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது”, என்று கூறினாள். இதைக்கேட்ட அவள் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வாயிலிருந்து பேச்சு வந்தும் வராததுமாய்அடுத்த வருடத்தில் இருந்து நீ நம் வீட்டிலேயே தங்கி படி, விடுதியில் தங்க வேண்டாஎன்று கூறிய அந்த நொடி அவள் அம்மாவிற்கு சொர்க்கத்திற்கே சென்றதாய் ஒரு உணர்வு. அவள் அம்மாவின் ஆனந்தக் கண்ணீர் யாழினியின் துயரத்தைத் துடைத்தது.

அவள் அம்மா மீண்டும் அப்பாவிடம், “விடுதியில் தங்குவது என்பது தவறில்லை, இருப்பினும் குழந்தைகள் நம்மிடம் வளர்வதே பள்ளிக்காலம் மட்டுந்தான். அக்காலத்திலும் நாம் விடுதிக்கு அனுப்பிவிட்டால் நம் குழந்தைகள் நம்மிடம் வளரும் பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள் இக்காலங்களில் மட்டுமே பெற்றோரின் அரவணைப்பில் வளர்கிறார்கள், இந்த அரவணைப்பு மிக முக்கியம். இக்காலங்களில் விடுதியில் தங்குவது அவ்வளவு நல்லதில்லை. அம்மாவின் அன்பிற்கு ஈடாக எதுவும் உண்டோ இவ்வுலகில். ஆகவே நம் குழந்தை நம்மிடம் வளரட்டும். வளர்ந்த பிறகு அவர்களே நம்மை விட்டு விலகுவார்கள். நாம் அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவோம். மாறாக, விடுதியில் போட்டு அவர்களின் கனவையும் அடைத்து வைத்து அவர்களின் எண்ணத்தைச் சிதைக்க வேண்டாஎனக் கூறினாள்.

விடுதி குழந்தைகளுக்கு விருப்பமல்ல
விடுதி குழந்தைகளுக்கு சுகமல்ல
விடுதி குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

குழந்தைகள் வளரட்டும் பெற்றோரிடம், பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை. அவை விடுதியில் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் பெற்றோருக்கு ஈடாவதில்லை.

No comments:

Post a Comment