'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

பாவை முப்பது


பாவை முப்பது

பைந்தமிழ்ச் செம்மல்
மன்னை வெங்கடேசன்

சென்ற இதழ் தொடர்ச்சி ...


நாயகனாய் நின்றவொரு நந்தகோ பன்தன்இல்
வாயிற்கண் சென்றங்கு வாய்மொழிந்த ஆயர்குலச்
சிட்டுரைப் பாவதுவும் செந்தமி ழன்னைக்குப்
பட்டியைந்த நல்லம் பரம்.                       16.
(ஆயர்குலச் சிட்டு = ஆய்ச்சிப் பெண் ;
அம்பரம் = துணி)

அம்பரம் தண்ணீர் அனைத்தும் தருவாயே
எம்பெருமான் நந்தனே என்றேத்தி உம்பர்கோன்
தன்னையும் போற்றியவன் தாளணையும் கோதையுரை
உன்னியே வாழ்வினை உந்து                   17.

உந்து மதகளிற்றன் உண்ணினையும் நப்பின்னாய்
வந்து திற;கதவை வாவென்று நந்த
மகனுடைய வாயிலில் மன்னியே நின்று
புகன்றதனை நெஞ்சிற் புகுத்து.                  18.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலுறை
மத்தக வேழமொத்த மாயவனை வித்தகமாய்
வாழ்த்து முரைநெஞ்சில் வைத்தவரை எஞ்ஞான்றும்
வாழ்த்துவர்முப் பத்துமூ வர்.                   19.

முப்பத்து மூவர்க்கும் முன்னிற்கும் தேவனை
நப்பின்னை தன்னொடு நன்கழைத்துச் செப்பிடு
வாரதைக் கோதையெனும் வார்குழலாள் தந்திட்டாள்
ஏருற ஓர்கவி யே!                              20.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கப் பால்சுரக்கும்
ஆற்றலுடை யாவினங்கொள் ஆயவனைப் போற்றி
விளித்துரைத்த பாவியந்தேன் வேண்டினேன் கண்டு
களித்திருக்க வாயிரங் கண்.                    21.

அங்கண்மா ஞாலத் தரசின்கீழ் சிற்றரசர்
சங்க மிருப்பார்போல் தாமங்குச் செங்கண்மால்
பொன்னடிக்கீழ் ஆய்ச்சியர் போந்ததனைக் கோதையுன்சொல்
மன்னுமனம் தாருமம் மா!                      22.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிய சிங்கம்போல்
மூரி நிமிர்ந்து முழங்கிடெனச் சீரிய
சிங்கமாய் ஏகும் திருமாலைக் கோதையும்
அங்ஙனே வேண்டினாள் அன்று.                        23.

அன்றிவ் வுலக மளந்த பெருமானைச்
சென்றங்குப் பாடித் திருமாலே குன்றெடுத்தாய்
இன்றுன்னைப் பாட இரங்கென்றாய் கோதையே
உன்றனுக்(கு) என்னே ஒருத்து.                  24.
(ஒருத்து மன ஒருமைப்பாடு)

ஒருத்தி மகனாகி ஓரிரவில் மற்றை
யொருத்தி குடிலில் வளர்ந்த திருமறு
மார்பனைப் போற்றிய மாதவள் தாள்பணி
வார்தமை யொன்றுவான் மால்.                         25.

மாலே மணிவண்ணா வாராய் அருள்தாராய்
பாலன்ன சங்கொடு மற்றெல்லாம் ஆலின்
இலையாய் அருளென் றியம்பிய கோதை
குலமகளின் பாதமதைக் கூடு.                  26.

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் தன்னையே
வாடாத சொற்கொண்டு பாடியே மாடா
மனைத்தும் தரவேண்டி மன்னியகோ தைப்பா
மனத்துச் செருக்கற வை.                       27.
.
கறவைகள் பின்சென்று கானேகும் ஆயர்
குறைவிலாக் கண்ணனைக் கூவிச் சிறுபேர்
அழைப்பதனைப் பாடும் ஆண்டாள் அடிசேர்ந்(து)
இழைபவர் ஆவர்மா சிற்று                     28
 (மாசிற்று = மாசு இற்று = அழுக்கின்றி)
.
சிற்றஞ் சிறுகாலே சென்றவனைக் கும்பிட
லுற்றநல் லாய்ச்சியர் ஓதியதைக் குற்றமிலாப்
பாகெனவே கோதையுரை பாவெள் ளமதற்கீ(டு)
ஆகிடுமோ வங்கக் கடல்.                       29

வங்கக் கடல்கடைந்த மாதவனை நாடியே
அங்கப் பறைகொண்ட வாற்றினை இங்குரைப்பார்க்
கின்பம் பயக்கு மெனவுரைத்த நற்கோதாய்
மன்னுயிர் காத்திடம் மா!                       30.


No comments:

Post a Comment