'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2019

அம்மா


பைந்தமிழ்ச்செம்மல் அழகர் சண்முகம்

அன்பின் மொழியாலே ஆரத் தழுவிடுமென்
என்புதோள் போர்த்த எழிலிறையே நின்பெயரை
ஏட்டில் எழுத இயலாமல் என்னுயிர்க் 
கூட்டினுள் வைத்தேன் குறித்து!

ஊட்டி வளர்ப்பாளாம் ஊரடங்கும் வேளையிலும்
ஈட்டி விழியாலே ஈயெறும்பை ஓட்டி
உறங்காமற் காத்தாளின் உண்மைத் தவமே
அறத்தில் சிறந்த அறம்!

உழைத்துக் களைத்தாலும் உண்ணஅமர்ந் தாலும்
அழைத்து மடியமர்த்தும் அன்பாம் இழைத்துச்
செதுக்கிடும் சிற்பமாய்ச் செம்மை யுறச்சேய்
ஒதுக்காள் தனக்கென ஓய்வு!

கருவில் சுமந்தாளைக் காத்தகரத் தாளைத்
தெருவில் அலையவிட்டுத் தெய்வம்இருக்கும்
இடந்தேடிக் காசை இறைத்திடும் மாந்தர்
நடமாடும் மானிட நச்சு!

ஒழுகுமண் வீட்டில் ஒருவாய்ச்சோ றின்றி
அழுதிடத்தந் தாயே அமுது-முழுதாக
மாடி மனையிருந்தும் மாதாவைக் காணாமல் 
தேடியதே னும்கசக்கு தே!

நித்தமொரு ஆடைகட்டி நின்றாலும் இந்நாளில் 
அத்தனைக்கும் ஏதுமணம் அந்நாளின் -சொத்தான
உன்சேலை வாசம் உயிரில் கலந்திணைந்(து
என்மூச்சோ(டு)இன்றும் இருக்கு!

கட்டிக் கரும்பென்றும் கண்ணின் மணியென்றும்
தொட்டில் நிறைந்தாடத் தூயதமிழ்-கொட்டித்தா
லாட்டில்பண் பாட்டை அழகாய்  விதைப்பாளே
ஏட்டைப் படிக்காத ஏடு!

கல்லிலும் முள்ளிலும் காலிணை தேய்ந்திடக்
கல்வியெனும் கண்கொடுக்கக் காடளந்தே-அல்லும்
பகலும் அயராமல் பாதைதந்தா ளுக்கு
நிகரிலை யென்றுணர்  நீ!

பெற்றாள் நலத்தினைப்  பேண மறந்தவர்
கற்றிருந்தும் காணுமிரு கண்ணிலரே-பெற்ற
பெருஞ்செல்வம் ஊர்போற்றப்  பேர்தரலாம் ஆனால்
அருள்தாரா(து)என்றும் அறி!

உண்மையின் நற்கருவை உள்ளிருக்கும் போதிலே 
எண்ணில் நிறைந்திட ஏற்றுவாள்-விண்ணிலே
எண்ணிலாத் தெய்வங்கன் எத்தனை யானாலும்
மண்வணங்கும் தெய்வமம் மா

No comments:

Post a Comment