'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

நடுப்பக்க நயம்


கம்பனைப் போலொரு… 3

மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

இந்தப் பகுதியை எழுதத் தொடங்கும்போது என் விரல்களுக்குச் சற்றே நடுக்கமேற்படுகிறது. ஏனெனில், கம்பனை எதிர்ப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லப்போகிறேன். அதற்கெதற்கு நடுக்கம்? என்று கேட்கிறீர்களா?

நடுக்காட்டில் புலிக்கூட்டம் மிகுந்த வழியில் சிக்கித் தவிக்கையில் அவர்களை வழிமாற்றி (நரிக்கூட்டம் மிகுந்த) வேறு வழிக்கு மடைமாற்றிய ஒருவரைப் பற்றிச் சொன்னால் அந்தக் கூட்டத்தார்க்குச் சினம் வருமல்லவா? அட... அவர்களுக்கு நீயேன் அஞ்ச வேண்டும்? என்று கேட்கிறீர்களா?

ஆம்… அவர்கள் அனைவரும் தம்மை யறியாதவர்கள். இனவுணர்வு இன்னதென்று புரியாதவர்கள். ஆனால், படித்தவர்கள். முற்போக்குவாதியென்றும், பகுத்தறியத்தக்க பகுத்தறிவுடையவர்கள் (என்று சொல்லிக் கொள்பவர்கள்). எல்லாவற்றிற்கும் மேலாக... அவர்களும் நம்மைச் சேர்ந்த தமிழர்கள். அதற்கும் மேலாகத் தமிழிலக்கியங்களை நன்கு கற்றவர்கள்.
மடைமாற்றிய நபரைப் பற்றி எனக்கெந்தக் கவலையும் இல்லை. ஆனால், இந்தப் படித்த தமிழர்களைப் பற்றியே அச்சம்.

இந்தக் கட்டுரைக்குப் பின் எனக்குப் பலவிதமான முத்திரை குத்தப்படலாம். என் இலக்கியப் பயணமும், இலக்கணத் தொண்டும் கொச்சைப் படுத்தப்படலாம். ஏன்... மிரட்டலும் விடுக்கப் படலாம். முகநூலுள் நான் நுழையு முன்பு, இலக்கிய நிகழ்வுகள் நடத்துகின்ற அமைப்புகளாலும், 'தமிழர்கள்' என்ற போர்வையில் திரியும் பிறமொழிக் கயவர்களாலும், கொச்சைப்படுத்தப் பட்டும், குழிவெட்டப்பட்டும், திறமை மறுக்கப் பட்டும், இனவுணர்வால் தோன்றிய எழுச்சி அடக்கப்பட்டும் இழிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட படிப்பினை எனக்கிருக்கிறது. எனவே, இவர்களால் எனக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் அதை முறியடிக்கும் துணிவையும், ஆற்றலையும் எந்தமிழ்த்தாய் அருள்வாள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

கம்பனை எதிர்ப்பவர்கள் யார்?
நாள்தோறும் கல்லிலும் முள்ளிலும் கால்நடையாய் நடந்தும், காட்டையும் மேட்டையும் தம் உழைப்பால் திருத்திப் பக்குவப்படுத்தி உழுதும் இவ்வுலகிற்குச் சோறிடும் பாமரனா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில், அவர்கள் கம்பனைச் சுவைத்தவர்கள். உருகி உருகிக் கம்பன் கதையைக் கேட்டவர்கள். கம்பனின் எழுத்தில் மயங்கி அதன் சிறப்பை நுகர்ந்தவர்கள். ஏதேனும் எளிமையான செயலைச் செய்ய முடியாத போது "இதென்ன பெரிய கம்ப சூத்திரமா?" என்று கேட்குமளவு கம்பனின் எழுத்துக்கு மகுடம் சூட்டியவர்கள்.

பின்... வேறு யார்?
வடநாட்டினர் என்றும், ஆரியரென்றும் அழைக்கப்படும் இனத்தவரா? நிச்சயமாக இல்லை. ஏனெனில், தங்களுக்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட இராமனை, சராசரி மனிதனைக் கடவுளெனத் தொழச்செய்து பரப்பப்பட்ட இராமனைத், தன் கதைத்தலைவனாக வைத்த கம்பனை அவர்கள் ஏன் எதிர்க்கப்போகிறார்கள்? தாழ்ந்த இனத்தவனாகக் கருதப்பட்ட ரட்சன் என்னும் வேடன் எழுதிய இராமசரிதத்தை ஏற்றுக் கொள்வதற்காகவே அவனை உயர் சாதியாகக் காட்ட அவனை வான்மீகியாக்கிப் பொய்க் தையைப் பரப்பியவர்கள் கண்டிப்பாகக் கம்பனை எதிர்க்க மாட்டார்கள்.

பிறகு... வேறு யார்தான் எதிர்க்கிறார்கள்?
சொன்னால் வியந்து போவீர்கள்! மலைத்தும் போவீர்கள்.! யார் தெரியுமா? "ஆற்று நீரின் போக்கில் அடித்துச் செல்லப்படும் சருகுகள் அந்த நீரில் மூழ்கிவிடாமல், தன் இயற்கையறிவால் அந்நீரின் தன்மையறிந்து சுழன்று, வளைந்து, நெளிந்து, மூழ்கிப் பின் எழுந்து, சுழல் வந்தாலும் அதனைச் சுற்றிக் கடந்து தான் கொண்ட பயணத்தின் இறுதியாகக் கடலை அடையும். அல்லது இடையிலேயே கரையொதுங்கும்.

ஆனால், கல்லொன்று அந்த ஆற்றுநீரால் 'இழுத்துச் செல்லப்படும்போது' தன் கனத்தால் சிந்திக்கும் திறனற்று ஆற்றில் மூழ்கி, அதன் அடியில் சேர்ந்து முடங்கி, அவ்வப்போது ஏற்படும் ஆற்று நீரின் அலையீர்ப்பால் இழுக்கப்பட்டுத் தன் நிலைத்தன்மையால் பயணத்தைத் தொடர முடியாமல் ஓரிடத்திலேயே தங்கிவிடும். அந்தக் கல்லைப் போன்ற தன்மையைக் கொண்டவர்கள்  இவர்கள்.                                                     தொடரும்…

No comments:

Post a Comment