'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

மரபைக் காப்போம்!


பாவலர்
கருமலைத்தமிழாழன்


1.      மரபு பாட்டே  தமிழ்ப்பாட்டு
தாலாட்டும் ஒப்பாரிப் பாட்டும் வாழ்ந்த
  தமிழர்தம் பண்பாட்டைக் கூறும் பாட்டு
காலாட்டிக் கையாட்டி வயலில் வேலை
  களைப்பின்றிச் செயப்பாடும் நாற்றுப் பாட்டும்
கோலாட்டிக் கிணற்றுநீரை இறைப்ப தற்குக்
  கோவணத்தில் நின்றிசைக்கும் ஏற்றப் பாட்டும்
நூலாக வாராமல் வரலா றாக
  நின்றொலித்து நமைமயக்கும் நாட்டுப் பாடல்! 1

ஆயிரங்கள் இரண்டிங்கே கடந்த பின்பும்
  ஐந்துபெரும் காப்பியங்கள் உள்ள தின்றும்
பாயிரமாய்ச் சங்கத்துப் பாக்க ளெல்லாம்
  பைந்தமிழின் பெருமையினைச் சொல்லு தின்றும்!
தாயினுடைப் பால்போன்ற குறளின் முப்பால்
  தமிழுக்கு வலுவூட்டி நிற்கு தின்றும்
சேயிக்கு நாளையுமே சொல்லும் வண்ணம்
செம்மாஅந்(து) இருப்பதெல்லாம் மரபு பாட்டே!  2

காட்டாகச் சொல்வதெல்லாம் பத்தை எட்டை
  கண்முன்னே காட்டுவது கம்பன் பாட்டை
ஊட்டுதற்கே அறவொழுக்க நூல்க ளாக
  உரைப்பதெல்லாம் பதினென்கீழ்க் கணக்கைத் தானே !
ஏட்டினிலே இருந்தபோதும் புதுமை ஐக்கூ
  எடுத்துரைக்க இயலாத சொற்கோ லங்கள்
நாட்டினிலே என்றென்றும் வரலா றாக
  நமக்குதவ நிற்பதெல்லாம் மரபு பாட்டே !           3

2.      மரபே மாத்தமிழின் மாண்பு
படித்தவுடன் நெஞ்சத்தை ஈர்க்க வேண்டும்
  பதிந்துநெஞ்சில் கல்வெட்டாய்த் திகழ வேண்டும்
இடித்துரைக்கும் கருத்தெனினும் இனிய சொல்லில்
  இதமாக எடுத்துரைத்தே உணர்த்த வேண்டும்
வடிக்கின்ற சொல்லெல்லாம் பொருள்பொ திந்து
  வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்
படித்தவரும் பாமரரும் புரிந்து கொள்ளும்
  படிச்சொற்கள் எளிமையாக இருக்க வேண்டும்!
                         4
புதுக்கவிதை எனவிங்கே எழுத்தைக் கூட்டிப்
  புரியாமல் எழுதுவது கவிதை யன்று
மதுக்கவிதை எனமரபில் சொன்ன போதும்
  மயக்கத்தைத் தாராத தெளிவு வேண்டும்
எதுகவிதை மரபுபுது எதுவென் றாலும்
  எழுச்சியுடன் வீச்சினிலே தைக்க வேண்டும்
பொதுமையெனும் பயிர்வளர்த்துப் புரட்சி செய்யும்
  போர்ப்பாட்டே கவிதையாக நிலைத்து நிற்கும்!
          5
சொந்தக்கால் இல்லாமல் நடத்தல் போல
  சொல்யாப்பில் அமையாமல் எழுதும் பாக்கள்
செந்தமிழ்க்குச் செம்மொழியின் தகுதி யெல்லாம்
  செம்மையாப்பு சங்கத்துப் பாக்க ளாலே
எந்தமொழி வந்தபோதும் இலக்க ணத்தின்
  எயிலாலே தனித்தமிழாய் உள்ள தின்றும்
நந்தமிழா யாப்பறிந்து கவிதை பாடு
  நறுந்தமிழும் வாழுமுன்றன் பெயரும் வாழும்!  6

                                             3.      மரபு கவிதையே மாத்தமிழைக்  காக்கும்
முகநூலில் நட்புதனை வளர்த்தல் போல
  மூத்தமொழி முத்தமிழை வளர்க்க வேண்டும்
அகநூலில் அன்புதனை வளர்க்கும் போதே
  அகிலத்தார் மனிதரென்று மதிப்பர் ஏற்பர்
தகவுடைய இலக்கணத்தில் எழுதும் போதே
  தரமான கவிதையென உலகோர் சொல்வர்
நகமகுடம் விரற்களிக்கும் உறுதி போல
  நல்யாப்பே கவிதையினை நிலைக்க வைக்கும்!
          7
சங்கத்துப் பாட்டெல்லாம் கட்ட மைப்பில்
  சருக்காமல் சாயாமல் அமைந்த தாலே
பொங்குகடல் அழித்தபோதும் களப்பி ரர்கள்
  பொலிவிழக்க வைத்தபோதும் மாய்ந்தி டாமல்
செங்கதிராய் இன்றளவும் ஒளிர்ந்து நின்று
  செம்மொழியாய் உலகோரை ஏற்க வைத்தும்
மங்காத முதன்மையினம் தமிழ ரென்று
  மார்தட்டிச் சொல்வதற்கும் நிற்கு திங்கே!           8

புதுக்கவிதை என்பதெல்லாம் அகவல் தானே
  புதுமையெனச் சொல்கின்ற ஐக்கூ கூட
முதுகுறள்பா வடிவம்தான்! ஏழு சீரில்
  முழுக்கருத்தைச் சொல்வதுபோல் சொல்லும் பாதான்
எதுகுறும்பா குறுந்தொகையின் பாட்டெல் லாமே
  எடுத்துரைக்கும் குறும்பாவின் வடிவ மென்றே
மதுமயக்கி அறிவிழக்க வைத்தல் போன்று
  மாத்தமிழை வெறுஞ்சொல்லால் தாழ்த்திடாதீர்!                                                                           9
கணினிக்கே ஏற்றமொழி என்று ஞாலக்
  கல்வியாளர் போற்றுகின்ற செம்மைத் தமிழை
மணியான அறிவியலின் கருத்தொ லிக்கும்
  மணித்தமிழைக் காப்பதுநம் கடமை யன்றோ
திணித்தபோதும் வடமொழியைத் தூக்கெ றிந்து
  திகழ்கின்ற தனித்தமிழை நலிவு செய்து
பிணிசெய்யும் ஆங்கிலத்தைக் கலந்தி டாமல்
  பிற்காலம் போற்றுமாறு மரபைக் காப்போம்! 10

No comments:

Post a Comment