'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 8


அறுசீர் விருத்தம்

1.       கவிஞர் சுந்தர ராசன், சென்னை

ஆழ்தமிழ் கற்று வாழ்க!
    அகமகிழ் வோடு வாழ்க!
வாழ்தமிழ் வளர்த்து வாழ்க!
    வளமெலாம் பெற்று வாழ்க!
சூழ்தமிழ் சுவைத்து வாழ்க!
    சுறுசுறுப் போடே வாழ்க!
யாழ்தமிழ் இசைத்து வாழ்க!
    யாவரும் நலமே வாழ்க!
2.       கவிஞர் சுப முருகானந்தம், மதுரை

ஆழ்தமிழ் கற்று வாழ்க
    அகமகிழ் வோடு வாழ்க
வாழ்வறம் கண்டு வாழ்க
    வள்ளுவம் போற்றி வாழ்க
சூழ்பகை வென்று வாழ்க
    சுற்றமும் தாங்கி வாழ்க
பேழ்மனம் பெற்று வாழ்க
    பெற்றவர் வாழ்த்த வாழ்க

3.       கவிஞர் பொன். இனியன், பட்டாபிராம்

வாழ்வியல்  தன்னை  நன்கு
    வரையறை  செய்து  காட்டும்
தூய்தமிழ்  தொன்னூல்  சொன்ன
    தொடர்மர  பெல்லாம்  போற்றி
ஆய்வொடு  சுட்டு கின்றார்
    அரியராம்  வரத  ராசர்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
    அகமகிழ் வோடு  வாழ்க

4.       கவிஞர் தமிழகழ்வன், திருவண்ணாமலை

வாழ்க்கையில் வாய்க்கும் யாவும்
   வகைவகை அறிந்து வாழ்க
தாழ்ச்சிகொள் எண்ணம் வேண்டா
   தரணியே உனக்கா கத்தான்
காழ்ப்புணர் வகன்றோ டட்டும்
   காய்ப்பன காய்ந்தோ டட்டும்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
   அகமகிழ் வோடு வாழ்க

குறட்டாழிசை

5.       கவிஞர் சரண்ஜா செல்வரெத்னம், முல்லைத்தீவு, இலங்கை

வாழ்வினில் போற்றும் பேறே
    வகையினில் கண்டு கொண்டேன்
ஆழ்தமிழ் கற்று வாழ்க!              
   அகமகிழ் வோடு வாழ்க!

No comments:

Post a Comment