'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 15, 2019

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிரின் பத்தாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பைந்தமிழ்ச் சோலையின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மகிழ்ச்சியோடு பயணம் செய்துகொண்டிருக்கிறோம். பாட்டியற்றும் அடிப்படைப் பாடங்கள் முடிந்து, அதன் புரிதலுக்கான திறனறி தேர்வும் முடிந்து, ஒவ்வொரு வாரமும் ஒரு பயிற்சி என வரையறுக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான பாட்டியற்றுக பயிற்சிகள் தொடங்கப்பட்டு 16.09.2019 முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 40 கவிஞர்கள் பயிற்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அனைத்துப் பயிற்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டும், ஆண்டு முடிவில் பட்டத் தேர்வில் கலந்து கொண்டும் உங்கள் யாப்பியலறிவை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். பயிற்சிப் பதிவில் அந்தப் பதிவின் ஆசான் சொல்வதற்கேற்ப உங்கள் கற்றல் இருக்கட்டும். பதிவில் கொடுக்கப்படும் கருத்தூன்றுக மற்றும் பொது இலக்கணம் ஆகிய பகுதிகளை நன்கு கருத்தூன்றிப் படிக்கவும். ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் கேளுங்கள். ஒருவரின் பாட்டுக்குப் பிழைதிருத்தி விளக்குவதை நீங்களும் கவனியுங்கள். அதே பிழையை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம். மேலும் இலக்கணத்தில் செம்மையாகலாம். இத்தளம் மரபைப் பிழையின்றிக் கற்கவும், கற்பிக்கவும், பரப்பவும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்கிவருகின்ற தளமாகும். இங்கு வேண்டியது ஒன்றுதான். அது… தமிழின் மீதான பணிவும், சோலையின் கட்டுப்பாட்டை மீறாத கற்றலும் மட்டுமே. அனைவருமே பைந்தமிழ்ச் சோலைக் குடும்பத்தினர் என்ற உணர்வோடு பயணம் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment