'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

கம்பனின் காவியம்


கவிஞர்
சிதம்பரம் சு.மோகன்

ஈற்றடி இன்பம் : 1
“மெய்ந்நெறி நோன்மையான் பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்”

ஈற்றடி என்றாலே நமக்கு வெண்பாவின் ஈற்றடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அதன் ஈற்றடிச்  சீர்கள்தான் கச்சிதமாகக் கருத்தை உரைக்கவல்லவை. நயமானவை. நச்சென்று நம் மனத்தில் பதிபவை. ஆனால், ஈற்றடி என்பதற்குப் பாட்டொன்றின் இறுதியில் அமைந்துள்ள அடி என்றே பொருளல்லவா? பாடல் என்றால் வெண்பா மட்டுந்தானா?

‘விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்’ என்று கம்பரைப் பாராட்டுவர் சான்றோர். அவர் படைத்தளித்த காவியத்தில் பல பாடல்களில் உள்ள ஈற்றடிகளின் பேரழகும் இனிமையும் உட்பொருளும் அறியப்படவேண்டியவை. அவற்றிலிருந்து சிலவற்றை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.

இவ்வாறு எழுத நினைக்கிறேன் என்று என் நண்பர் ஒருவரிடம் தெரிவித்தபோது, ‘உனக்கு என்னவிதமான தகுதியோ துணிவோ இருக்கிறதென்று நினைத்து இச்செயலில் ஈடுபடப்போகிறாய்? என்று கேட்டார்.  சற்று யோசித்து, ‘இரண்டும் இல்லை. ஆசையால் ஏற்பட்ட உந்துதல்’ என்றேன். ‘அப்படியானால் இடைக்கண் முறியுமோ?’ என்றார். ‘ஈற்றடி வரை இன்பம் தொடரும்’ என்றேன். சிறப்பாக வரும்; செய் – என்று வாழ்த்தினார். மாசிலா மனத்தவர் அவர்.

‘மெய்ந்நெறி நோன்மையனாய் விளங்கும் இறைவனின் பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்’ என்று துறவு நெறியைச் சொன்ன அடுத்த பாடலிலேயே, காவியத்தை ஆசைபற்றி அறையலுற்றேன் என்று சொல்கிறார் கம்பர். இது ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுவதால் இதனையே முதற்சிந்தனையாக முன்வைக்கிறேன்.

செய்யும் செயலை வேண்டாவெறுப்பாகச் செய்யாமல் முழுமையான மன ஈடுபாட்டோடு செய்யவேண்டும். அது ஒருவித ஒழுங்குமுறையையும், செயலுக்கு ஓர் உயர்வையும் கொடுக்கும்.  புரிதலைத் தூண்டும். திட்டமிடவைக்கும். அதனை முயற்சி என்பார்கள் சிலர். ஆற்றல் என்பார்கள் சிலர். அறிவு என்பார்கள் சிலர். தகுதி என்பார்கள் சிலர். இதனைப் புரிந்துகொண்டால் எவரும் எதனையும் செய்து முடிக்க முடியும். சாதனைகள் யாவும் விடாமுயற்சியால் செய்யப்படுவதல்ல. மன விருப்பத்தால் செய்யப்படுபவை.

விடாமுயற்சி பயிற்சியை மட்டுமே தரும். ஆனால் வெற்றியையும் நிறைவையும் தருவது இந்த ஆசையே. இந்த ஆசைபற்றியே கம்பர், காசில் கொற்றத்து இராம காதையை விரித்துரைத்தார். அவர் கொண்டது உலகியல் ஆசையன்று. தமிழ்ப்பற்று. இப்பற்றை முற்றத் துறந்தாரும் துறந்திலர்.

No comments:

Post a Comment