'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

கீழடியால் பெற்ற கெலிப்பு


கவிஞர் பொன் இனியன்
kuralsindhanai@gmail.com  8015704659

வைகைத் துறைப்பரப்பில் வாய்த்தநம் கீழடியில்
உய்கை யுடைத்தாய் ஒளிர்நா கரிகம்
உலகளந்த வாறாக ஆங்கிருந்த வண்ணம்
நலமுரைக் கின்றதே நன்கு                            1

ஆய்வின் கருத்தோ அறிவார்ந்த தன்முடிபாய்த்
தூய்தமிழர் வாழ்ந்த துலக்கெல்லாம் தோன்றி
விளங்கும் படியாக வீறார் பெருமை
நலத்ததாக் காட்டுது நன்கு                            2

தொல்லியல் வல்லார் துறைசால் அறிஞர்கள்
சொல்லுவ தெல்லாம் சுடர்த்தன – எல்லே
மலர்க்கொடி என்னென்பேன் கீழடியின் பீடு
வலக்கை யடியா யுள                                     3

கிறித்துவம் வந்து கிளத்துமுன் னிங்கு
விரித்தனர் கீழடி தன்னில் – ஒருப்பட்(டு)
இருந்தனர் ஓரறுநூ றாண்டுக்கு முன்னே
இருந்தமிழின் மேன்மை யிது                         4

தமிழர்தம் மேன்மை தரணியில் ஓங்கி
அமிழ்த்தற் காகா அடையாள மானயிவை
போலுமின்ன மேலு(ம்)பல வுண்டாகக் கீழடியில்
நாளுமவை கிட்டும் நமக்கு                           5

மட்கலய வண்ணம் மனங்கவர் கோட்டெழுத்து
பெட்புற வில்லம் புமதன்மேல் கீறலாய்
வீற்றாய் இலங்குதல் காண்பவர் எல்லார்க்கும்
சாற்றும் தமிழர்தம் சால்பு                             6

இரும்பாலாம் ஆணிக்கு முன்எலும்பால் கீற்றித்
தரும்பால ராயிருந்த தெல்லாம் தெரிய
வரும்பால தன்றோ அடடாநம் முன்னோர்க்(கு)
அரும்பிய ஆற்ற லது                                       7

மணற்பாங்கு நீரூற்றை மக்கட் பயன்கொள்ள
கணக்காகக் கச்சிதமாய்ச் செய்த உறைகிணறு
நுட்பத்தை அன்றே அறிந்திருந்தா ரென்பதனை
பெட்புறக் காட்டும் பிளந்து                           8

செங்கற்சுண் ணாம்பாற் செறிந்த பெருஞ்சுவர்கள்;
அங்குண் டவைஅரண் போல்தோற் றுதுமற்றும்
எங்கும் குழாய்பதித்(து) ஏற்றநீர் மேலாண்மை
தங்கும் படியாந் தகவு                                     9

அரண்மனை போல்வீடும் ஆழ்கிணறும் என்றே
திறமான மேலாண்மை தேர்ந்தபெரு வாணிபம்
என்றிவற்றின் எச்சமாய் இன்றளவும் காட்டுது
நன்றாயந் நாகரிகத் தை                               10

கடல்கோள் பெருஞ்சீற்றம் காலத்தின் நீட்சி
படல்ஒல்லா மாற்றங்கள் பல்விதத்தும் தாங்கிநின்று
பாரோர்க்(கு)  உணர்த்திடவே  இன்றளவும்  எஞ்சலாய்ச்
சீரார்ந்த  கீழடியில் சீர்த்து                             11

கீழடியில் தோண்டிக் கிடைத்ததெலா மாவணமாய்ப்
பாழடிக்குப்  போகாமல்  பார்த்துப் பொறுப்பாய்த்
தொகைப்படுத்திப் பொத்திநாம் காத்துப் புவியோர்
வகைப்படக் காணவைப் போம்                    12

தொல்லியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற
எல்லா வகையானும் ஏற்றதுணை செய்வதுதான்
வல்ல நடுவரசும் வாய்த்தநம் ஆள்வோரும்
கொள்ளத் தகுவதாம் குறி                              13

கீழடி ஆய்வைக்  கிறுக்(கு)ஆர் அரசியலார்
பாழடிக்கச் செய்யாத வாறாகப் பார்த்து 
நடுநிலை நோக்கோடு நானில மெல்லாம்
படுபாங்கில் வைப்போம் பரிந்து                  14

1 comment: