'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

அல்வழிப் பத்து


கவிஞர்
ரா.சேது பாலசுப்பிரமணியன்


௧.
அல்வழி போனாலங் காக்கமென் றொன்றில்லை
நல்வழியில் என்றும் நடக்கவைக்கும் முன்னவர்
சொல்லையென்றும் வைமனத் தோடு

௨.
அல்வழி போவதற் கையுற்று நின்றக்கால்
கல்லாரும் பண்பினால் கற்றாரே நன்மையே
வல்லமை ஈயும் வழி

௩.
அல்லல் உறுங்காலும் அல்வழிச் செல்லாமை
இல்லறம் நன்றாக்கும் ஈண்டு மறந்தேனும்
நல்வழி தள்ளுதல் நாண்

௪.
நல்வழி யில்நிற்கும் நல்லார் இயல்பதுவாம்
நல்வழியி னின்று நழுவார் ஒருபோதும்
அல்லவை தம்மின் அகன்று

௫.
அல்வழி யில்செல்லும் அல்லார் இயல்பதுவாம்
பல்வழிச் செல்வர் பழிச்சொற்கு நாணாது
நல்வழி மாறி நடந்து

௬.
அல்வழி தள்ள அறம்பெருகித் தேய்ந்தொழியும்
அல்லவை என்றும் அறிவுடையார் சொற்படி
நல்வழி கொள்ளல் நலம்

௭.
நல்வழி நிற்போர்க்கெந் நாளும் குறையில்லை
அல்வழிச் சென்றால் அழிவுண்டு யாவர்க்கும்
அல்வழி தள்ளல் அறம்

௮.
நல்வழிச் செல்லின் நலம்பெருகி வாழ்வுயரும்
அல்லல் அளிக்கும் அனைத்தும் பறந்தோடும்
இல்லை இடுக்கணென்றும் இங்கு

௯.
அல்வழிச் செல்லின் அடைவது கானகமே
அல்லல் தொடரும் அனைத்தும் பறிபோகும்
இல்லை உயர்வென்றும் இங்கு

௧௦.
அல்வழிப் பத்திஃதும் அல்லல் தொலைக்கவே
நல்வழி நிற்றல் நலமெனக் கூறவே
கல்லிது வாழ்விற்குக் காப்பு.

No comments:

Post a Comment