'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

இலக்கியச் சாரல் - 4

முனைவர் த. உமாராணி

அன்பு

இலக்கியங்களை நம் முன்னோர் அகம், புறம் என்று பிரித்து வைத்துள்ளனர். அதில் அக இலக்கியத்தை விரும்பாத மாந்தர்களே இல்லை எனலாம். இதை மறுத்தலும் இயலாது. அன்பு நிறைந்ததுதான் அக வாழ்க்கை. இயற்கையாகவே மனிதன் அன்புக்கு அடிமை என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தானோ இவ்விலக்கியம் மாந்தர் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதை அறியும் பாடல்:

ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை - கலி.

அதாவது, ஓர் ஆடையை இரண்டாகப் பிரித்து உடுத்தும் வறுமைநிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியாது ஒன்றி வாழும் வாழ்க்கையே வாழ்க்கை என்று வாழ்க்கைக்கு அழகானதொரு விளக்கத்தை இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.

அன்பே வாழ்க்கைக்கு உரமிடும் என்ற உண்மைக்கு ஏற்ப இங்கு அன்பே மேலோங்கி யுள்ளது. அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள். இன்றும் அன்பு உள்ளது. அது நிலவை மறைக்கும் மேகக் கூட்டத்தைப் போல மறைக்கப் பட்டுள்ளது. அது வெளியே வருவதற்குள் வாக்குவாதம் அதிகமாகி மனம் புண்படுகின்றது. அன்பே வாழ்க்கைக்கு உரமிடும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துவது ஏற்கத்தக்கதாகும்.

இன்னுயிர் அன்னார்க்கு எனைத்தொன்றும்
என்னுயிர் காட்டாதே மாற்று - கலி.
   
‘என்னுடைய உடலிற்கு எந்தத் தீங்கும் விளைய வில்லை; நான் உயிரோடுதான் இருக்கிறேன். அதனால் என் தலைவனுக்கு எத்தீங்கும் நேந்ந்திருக்காது. அவர் நன்றாகத்தான் இருப்பார்’ என்று சொல்லும் இப்பாடலானது, நம்பிக்கையாகக் கூடத் தோன்றவில்லை. ஈருடல் ஓருயிர் என்ற காதலர்களின் தாரக மந்திரமாய்த் தோன்றுகிறது. தலைவன் தலைவியின் உண்மையான அன்பிற்கு உவமையாய் விளங்குகிறது இப்பாடல்.

அன்பில் அடைக்கலமாய்
இன்பத்தில் இணைந்து
தன்மையாய்த் தரணியில்
நன்மையென வாழ்ந்திடுக!

No comments:

Post a Comment