'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

சேயெனைக் காத்தாலென்ன ?

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பன்னிருசீர்ச் சந்த விருத்தம்

ஆலால கண்டனே நாதவடி வானவா
     ஆதிமுத லானகுருவே !
  அலையாடு நதியோடு பாதிமதி யுஞ்சூடி
        அம்பலத் தாடுமழகே !
சூலாயு தத்தோடு மான்மழுவை யுங்கொண்டு
     துன்பந்து டைக்குமிறையே !
   சூழ்ந்திடும் வினைகளைத் தோற்றோட வைத்திடும்
        தூயனே கருணைவடிவே !
மூலாதி மூலமாய்ச் சோதியுரு வானவா
     முன்னின்று வழிநடத்திடு !
  முப்புரமெ ரித்தவா என்பாட்டு நீகேட்டு
       மும்மலம கற்றியருளே !
சேலாடு விழியாளை இடமாயி ணைத்தவா
     சேயெனைக் காத்தாலென்ன ?
சீர்மிக்க வடியாரை யன்பினா லாண்டிடும்
     தில்லையின் நடராசனே !!!

நானென்ற ஆணவம் சிந்தைதனி லேறாது
    நாதனே எனைமாற்றுவாய் !
  நம்பினே னுன்னையே வாழ்விலொளி ஏற்றவே
     நல்லதோர் வழிகாட்டுவாய் !
வானவர் போற்றிடும் தேவாதி தேவனே
     வடிவேல னின்தந்தையே!
  வளமாக நலமாக குவலயந் தன்னிலே
       வாழவைப் பாயீசனே !
ஏனினுந் தாமதம் கேட்கவே விழைகிறேன்
     இனியனே விடைவாகனா !
  எளியேனை யாட்கொள்ள அட்டியெது முள்ளதோ
       இன்றதனை யுஞ்சொல்லுவாய் !
தேனினிய வாசகம் நித்தமும் பாடியுன்
     திருவருளை நாடிநின்றேன் !
  தில்லையுட் கூத்தனே பார்போற்று மீசனே
       செவிகேட்டு விரைவாகவா !!!

2 comments: