'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

ஆசுகவிச்சுழல்

                              அமர்வு 4

தலைவர்: கவிஞர் விவேக்பாரதி
தலைப்பு: நாளை நமக்கான நாள்
வாய்பாடு: காய் காய் காய் காய் மா தேமா

முத்திரைகள் பதிக்கின்ற பிள்ளைகளாற் றானுலகம்
முன்னே செல்லும்!
நித்திரையில் வருங்கனவு கனவல்ல! கனவுறக்கம்
நீக்கி நம்மைப்
பொத்துவரும் உற்சாக ஊற்றோடு முன்னேறப்
புதுக்கும்! கல்வி
வித்தைகளைத் தெளிவாக்கும் நாளைநமக் கெனச்சேரும்
விந்தை காண்போம்! 1

காண்கின்ற காட்சிக்குள் வாய்ப்புகளைக் காண்பவரே
கடையில் வெற்றி
பூண்கின்ற நிலைகொள்வார் புறஞ்சொல்வார் தம்வாக்கில்
புரள்வார் மாய்வார்!
தூண்நின்று தம்பலத்தைத் தருதல்போற் பெற்றோர்கள்
துணையும் சேர
மாண்புற்ற பலநிலைகள் பெற்றிடுவார்! நாளையெனும்
மதிப்பை வெல்வார்! 2

வென்றிடவும் வெற்றியுடன் நின்றிடவும் பணிவென்னும்
வித்தே தேவை!
மன்றதனில் புகழ்சேர்ந்தும் மாறாத உயர்பண்பு
மனத்தே தேவை!
வென்றதனால் உயர்வில்லை விளையாட்டில் பங்குகொளல்
வெற்றி காண்பாய்!
சென்றிடுவாய் என்பிள்ளாய் வாய்ப்புகளைத் தேடிப்போ
செகத்தைக் கொள்வாய்! 3

வாய்ச்சொல்லில் வீரர்களாய் வாழுவதில் பயனில்லை!
வாழ்க்கை யோடைப்
பாய்ச்சலதில் எதிர்நீச்சல் போட்டழுந்தி முத்தெடுத்தல்
பலமாம் காண்பாய்!
வாய்த்தனவும் வாய்ப்பனவும் நிலையல்ல நம்பண்பே
வன்மை என்னும்
சாய்த்திடவே முடியாத எண்ணம்நம் நெஞ்சத்தில்
சதங்கள் சேர்க்கும்! 4

சேருங்கள் கனவுகளைச் சேருங்கள் அவையாவும்
செம்மை நோக்கி
நீருங்கள் அடிவைத்துப் பாட்டையிடப் போதிக்கும்!
நிறைவில் எண்ணிப்
பாருங்கள் அதுவரைக்கும் ஓயாமல் உழையுங்கள்
பாரை ஆள
வாருங்கள் பிள்ளைகளே நாளைநாள் நமக்கென்றே
வருவீர் முன்னே! 5

----------------

அழகர் சண்முகம்

வருவீர்முன் னேஒன்றாய் வாடாமல் உள்ளமொன்ற
வாகை யுண்டு
தருவீர்தான் எண்ணத்தைத் தட்டாமல் தாழ்வகற்றித்
தடையை வெல்ல
உருவாக்கு புதுப்பாதை உண்டாக்கி ப் பகுத்துவாழ்வாய்
உலகம் காண
நெருப்பாய்நீ இருந்தாலே நிழலென்ற இருளோடும்
நாளை நாமே 1

நாமெல்லாம் ஒன்றுபட்டால் நலமெல்லாம் தேடிவரும்
நாளும் தானே
பூமெல்ல நெகிழ்ந்துவிடும் புரட்டெல்லாம் பறந்துவிடும்
புதுமை பொங்க
வாய்மெல்லும் கடையருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டால்
வாய்மை துள்ளும்
பாமெல்லப் பாடிடுவோம் பாட்டாளி படுகின்ற
பாட்டைத் தானே 2

பாட்டைத்தான் பாடுகின்றோம் பாரெங்கும் சீரோங்கப்
பாடு பட்டே
நாட்டைத்தான் காத்திடுவோம் நன்மையுற வேண்டுமென்றே
நாளும் நாளும்
கேட்டைத்தான் போக்கிடுவோம் கெட்டவரின் கொட்டமதைக்
கட்டிப் போட்டே
ஏட்டைத்தான் படித்திடுவோம் எண்ணமெல்லாம் எழில்பூக்க
எண்ணி நாமே 3

----------------
கவிஞர் சோமு சக்தி

எண்ணிநாமே எங்கள் பிள்ளை
என்றுளத்துள் எண்ணும் போதே
விண்ணிலாடும் திங்கள் போல
மின்னியாடும் செல்வம் அன்றோ
கண்ணிலாடிக் கருத்தில் என்றும்
கன்னமெலாம் முத்தம் சிந்தி
மண்ணிலாடு மகவு என்றும்
மனத்திலாடு மகிழ்ச்சி யன்றோ! 1

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தால்
மங்கலங்கள் எங்கும் தங்கும்
நெகிழ்ச்சியாகத் துள்ளும் உள்ளம்
நேயமுள்ள மாந்த ராக்கும்
வகிடெடுத்து தலையும் கோதி
வசந்தவாழ்வை மண்ணில் காணும்
முகில்விலக்கும் மதியைப் போல
முகநூலில் கவிதை யாக்கும்! 2

கவிதையாலே கண்ட தெல்லாம்
களிப்புடனே காட்சி வைப்போம்
புவியிலாளும் புதுமை யெல்லாம்
புகழ்படைத்த செல்வத் தாலே
தெவிட்டலில்லாத் தேனும் பிள்ளை
தெய்வமென்று கொள்ளும் கிள்ளை
அவிசொரிந்து வேண்டல் என்ன
அதைவிஞ்சும் மழலை யன்றோ! 3

மழலைதானே நாளும் செல்வம்
மயக்கமென்ன மனமே கேளாய்!
உழலுநெஞ்சம் உண்மை பேசும்
உலகுதோறும் உணர்ந்து பார்க்கும்
சுழலுநெஞ்சில் சுருதி சேர்க்கும்
சுட்டிசெய்யும் பிள்ளை தானே!
கழலிலாடும் கொலுசு நாளைக்
கவின்மழலை யென்று போற்றும்! 4

----------------
கவிஞர் தர்மா

ஏட்டைத்தான் படித்திடுவோம் எண்ணமெலாம் எழில்பூக்க
எண்ணி நாமே
பாட்டாகப் பாடிவந்தும் பாராமல் ஓடுதல்நற்
பண்பு தானா
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அரணாக நின்றுவரும்
அருமை நண்பா
நாட்டுக்கும் வீட்டுக்கும் காவலாக இருக்குமென்றும்
நல்ல கல்வி 1

கல்வியறி வுற்றுவிட்டால் கவலையெலாம் பறந்தோடும்
கண்டு கற்போம்
எல்லையிலாப் பரம்பொருளாய் எண்ணிவந்த மண்டுகளிங்
கேற்றி வைத்த
தொல்லைதரும் கேடுகளால் துன்பமெனும் கூடையினைத்
தூக்கி வந்த
நல்லவர்கள் எல்லோரும் நானிலத்தில் ஒன்றிவிட்டால்
நன்மை தானே 2

நன்மையென்றும் தீமையென்றும் பகுத்தறிந்து வாழ்ந்துவந்தால்
நலிவு மாறும்
உண்மைகளை உறங்கவைத்த ஆள்களுக்குச் சரியான
உணர்வு வேண்டும்
கண்மூடி வழக்கமெலாம் காலத்தால் அழிவதனால்
கவலை யில்லை
நன்றிமறந் துள்ளோரும் நயமாகத் திருந்தவேண்டும்
நாட்டில் தானே 3

----------------

கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ

நாட்டில்தான் வாழுகிறோம் நம்பிக்கை யுறுதியுடன்
நமதாய் நாளும்
வீட்டில்யார் உறங்கினாலும் முன்னேற்றம் கிட்டாதே
வெல்ல வாழ்க்கை
காட்டில்தான் அழைந்தாலும் கவனங்கள் சிதறாதே
கண்டு கொள்ளும்
ஊட்டியதன் நம்பிக்கை விலங்கினுள்ளே நாளெல்லாம்
ஊனை வென்று! 1

வென்றுவாழ்தல் யாருக்கும் வீரமென்ற வெண்ணமதில்
விளைந்து வாழு
குன்றுக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவுவரும்
குறிக்கோள் கொள்ளக்
குன்றிவிடும் மாந்தரைத்தான் என்னவென்று சொல்லுவது?
குரைத்தாற் கிட்டும் !
நன்றுவாழ இன்றேகொள் நம்பிக்கை பலமாக
நமதே நாளும் 2

நாளும்நீ திண்ணமெனத் துணிந்துசெல்ல நாட்டங்கள்
நடக்கும் நம்பு
வீழுமேழ்மை வெற்றிகளே உனைச்சூழும் வெறுப்பாரும்
விரைவார் கூடப்
பாலுமூறும் கைப்படவென் பாரேபார் பகட்டல்ல
பண்பு காணு
நாளுமினி சுகந்தம்தான் நம்பிக்கை தானுண்மை
நாடிப் பேணே! 3

----------------
கவிஞர் விஜய்

நாடிப்பே ணிவந்தால்தான் உம்முடைய நல்லநிலை
நாட்கள் தோன்றும்
கூடியிருந் தால்தானிங்(கு) உன்னையென்றும் கொல்லுகின்ற
கொடுமை மாயும்
பாடிவைத்தார் அத்தனைபேர் அவற்றையெல்லாம் குப்பையெனப்
பார்த்து விட்டு
ஓடுகின்ற மாந்தர்காள் நான்சொல்லும் உண்மையினை
உடனே கேட்பீர் 1

கேட்பதற்குத் தைரியத்தை வரவழை!ஆம் உன்னையெங்கும்
கெடுப்பார் உண்டு
நாட்குறிப்பைக் கிழிப்பதிலே உம்முடைய பொன்னான
நாட்கள் போனால்
ஆட்சியாளர் அனைவருடை மனத்தினுள்ளும் நானென்ற
அகந்தை கூடும்
கூட்டாக நீசென்று நேரெதிர்த்தால் அவர்களுக்குக்
குருதி கொட்டும் 2

கொட்டுகின்ற முரசடங்கும் முன்னேநீ ஆட்சியென்னும்
கோட்டை கண்டால்
எட்டுத்தி சையெங்கும் உன்புகழே கொடிக்கம்பம்
ஏறக் காண்பாய்!
விட்டுவிட்டே நீயிருந்தால் உன்கரத்தில் விரல்கூட
மிச்சம் இல்லை
எட்டுவைத்து முன்நடந்தால் உன்னுரிமை கிட்டிவிடும்
எழடா தோழா! 3

----------------

கவிஞர் மஹ்மூத்பந்தர் நியாஸ் மரைக்காயர்

எழுதோழா இவ்வுலகம் இனிதாக வாழ்த்தட்டும்
ஏற்றம் பெற்றே
அழகான நாளையென அதிசயங்கள் கொட்டட்டும்
அமைதி பெற்றே
பொழுதெல்லாம் நாம்வடித்த பொற்கலசக் கண்ணீரும்
போகும் நன்றே
தொழுவோமே அதுவரையில் தோற்றிடாத நாளைஇனி
தொடங்கும் நன்றே 1

நன்றெல்லாம் தேடிவரும் நாளதுவும் இனிதெனவே
நமக்கு வெற்றி
குன்றெல்லாம் தமிழ்படிக்கும் கூட்டமெலாம் பொங்கிவரும்
கோட்டை நாட்டில்
இன்றிரவே ஈரென்னும் ஏற்றமிகு நற்செய்தி
இங்கே ஒலிக்க
நின்றுவிடாப் புகழ்பெற்று நிலைகொள்வோம் என்றினிமே
நிற்கும் வெற்றி 2

வெற்றியதால் வரலாற்றை வெற்றிடமே இல்லாமல்
வேங்கை போலே
குற்றமில்லாச் சங்கம்கொள் கோட்டைநா(டு) அதைமீண்டும்
கொட்டிச் சேர்ப்போம்
ஒற்றைநோக்கம் கொண்டிங்கே ஓரணியில் திரண்டுவந்து
ஓங்கும் நாட்டில்
பொற்காலம் இனிவரவே போதுமென்ற சொல்வரையில்
போற்றிக் காப்போம் 3

காப்பெல்லாம் நன்றாகும் கவியெல்லாம் அதைப்பாடும்
காணும் நாளில்
மூப்பெல்லாம் இளந்தளிராய் முக்காலம் பொற்காலம்
முடிவே இல்லாத்
தீப்பொறியைப் போலெங்கும் சிறக்கட்டும் பொழுதெல்லாம்
சிறப்புச் சேர்த்தே
கோப்பெல்லாம் அதைநினைக்கும் கோட்டையைப்போல் நம்நாட்டைக்
குவிக்க நாமே 4

No comments:

Post a Comment