'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

பெற்றோரை மறவேல்

பைந்தமிழ்ச் செம்மல் 
மன்னை வெங்கடேசன்

எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா)

பெரிசென்றும் பைத்தியங்கள் இவர்கள் என்றும்
    பிடிவாதக் காரரென்றும் ஏச்சுப் பேச்சால்
பரிபவந்தான் செய்கின்ற பலரும் உண்டு
    பாவமங்கு முதியோரின் வருத்த மெல்லாம்
புரியாத மானிடரும் மனிதர் தாமோ
    புவியிவரைத் தாங்குதலும் சரியோ என்றே
எரிகின்ற வென்னெஞ்சு பொறுக்கு தில்லை
இங்கென்றன் ஏக்கத்தைப் பகிர்ந்து கொள்வேன்
                                                                                            1
 கருத்தோடே தம்புதல்வர் கல்வி கற்கக்
    கழனிவிற்றுக் காசாக்கி யன்பு கொண்டே
தெருத்தெருவாய்த் தாமுழைத்துத் துயரம் கண்டு
    சிறிதேனும் அஞ்சாமல் தம்பிள் ளைகள்
வருங்காலம் நன்றாக இருக்க மேனி
    வருத்தியவர் பின்னாளில் வருந்து மாற்போல்
இருக்கின்ற நிலைகண்டு நெஞ்ச மெங்கும்
    எரிதணலா லெரிப்பபோலே கொதிக்கு தன்றோ
                                                                                                2
 தாய்ப்பாலில் அன்பென்னும் அமுதம் சேர்த்துத்
    தானூட்டும் அன்னையவள் பாதம் தொட்டு
வாய்ப்புற்ற போதெல்லாம் வணங்கி நிற்க
    மனமில்லா மக்களவர் மக்கள் அல்லர்
பேய்பிடித்த கயவரென்றே சொல்வேன் இங்கே
    பின்னுமவர் உண்ணவரும் சோற்றை யெல்லாம்
நாய்க்கிடுவீர் நன்றியுள்ள அவற்றைக் கண்டு
    நலம்பெறட்டும் அவருடைய மனநோய் ஆங்கே!
                                                                                               3
ஒருசிலரும் இருக்கின்றார் உலகில் இங்கே
    உருவாக்கி விட்டோரை உடன்வைத் துள்ளார்
இருந்துமங்கே பெற்றோரைத் தம்ப ணிக்கே
    ஏவலராய் வைத்திருந்து கொடுமை செய்வார்
அருமையெனப் பிள்ளைகளை வளர்த்தோர் தம்மை
    அடிமைகளாய் வைத்திருக்கும் பாவி மைந்தர்
இருந்துமிங்குப் பயனென்ன எமனென் பானே
    எடுத்துப்போ அவருயிரை எனவென் பேனே!     4

(வேறு)
(நிலை மண்டில ஆசிரியப்பா)

எந்தவொரு செடிக்கும் ஏற்றவேர் இல்லையேல்
இந்தப் புவியினில் ஏது வளர்ச்சி?
தந்தைதாய் இல்லையேல் தரணியில் ஏதுசேய்
இந்தவோர் உண்மையை எதிர்ப்பவர் உண்டோ?
பாலினை ஊட்டிப் பாசத்தைக் காட்டி            5
நுலினைப் போல நொசிந்தவள் தாயென்றால்
பள்ளியில் சேர்த்துப் பயிலச் செய்து
வெள்ளிபோல் மின்னுமால் வைப்பவர் தந்தையே
இல்ல மரமதில் இவர்கள் வேரெனில்
நல்ல பிள்ளைகள் நயத்தகு விழுதன்றோ!          10
ஆல மரத்தினை அழகுறக் காத்திடும்
நீள விழுதினை நிகர்த்திடும் பிள்ளைகள்
எம்மைக் காப்பரென இருந்திடும் பெற்றோர்க்கு
நன்மை செய்வதே நன்றிக் கடனாம்
என்பதை உணர்வீர் இவ்வுல கோரே           15
மன்பதை சிறக்க வாழ்ந்திடு வீரே!

1 comment: