'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

தீதும் நன்றும்...

பைந்தமிழ்ச் செம்மல் 
ஆதிகவி (எ)  சாமி சுரேசு

இளவேனிற்கால மாலை நேரம். தெற்கிலிருந்து தென்றல் மெல்லென வீசிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பி உடைமாற்றி வடக்குப் பார்த்துக் கட்டப்பட்ட வீட்டின் சனி மூலையின் முற்றத்தில் ஓய்வாக அமர்ந்தான் அரங்கன். நடுத்தர வயது. நெடுநெடு உயரம். இரட்டை நாடி தேகம், மாநிறம், அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தலைமுடியில் எட்டிப் பார்க்கும் நரைமுடி என ஒரு சராசரித் தமிழர்க் கூட்டத்தில் ஓர் ஆளாகக் காட்சியளித்தான். வழக்கம்போல, வந்தவனுக்குச் சூடான தேநீர் நீட்டினாள் அவன்மனைவி மகிழினி. சமகால இல்லத்தரசிகளின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் இருந்தாள் அவள்.

மாதச்சம்பளம் பெற்றுச் சொற்ப நாட்களே நகர்ந்திருந்ததால் கடுகடுப்பிற்கும் வெறுப்பிற்கும் அங்கு வேலையில்லாமல் இருந்தது. தேநீரை உறிஞ்சிக் கொண்டே அலைபேசியில் முகநூலை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் நின்றபடி மகிழினியும் பார்த்துக்கொண்டிருந்தாள். பளிச்சென்று ஒரு தம்பதியரின் புகைப்படம் அவன் கண்ணில்படவே மீண்டும் திரையை விரலால் மேலே தள்ளிப் பார்த்தான். யாரோ ஒரு தம்பதியருக்கு இவனது நட்பிலிருக்கும் ஒருவர் வாழ்த்துச் செய்தியோடு அவர்களின் பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட அவர்களின் புகைப்படத்தையும் போட்டிருந் தார்கள். விருப்பங்கள் முந்நூற்றைக் கடந்திருந்தன. பின்னூட்டங்களும் பெருமளவு இருந்தன. ஒன்றிரண்டு பகிர்வுகளும் இருந்தன.

சில வினாடிகள் படத்தை நோக்கியவன் மேலே செல்ல யத்தனித்தான். மகிழினி கையமர்த்திவிட்டு அரங்கனிடம் கேள்விகளைக் கேட்கலானாள்.

'அந்தப் பொண்ணு பார்க்கறதுக்கு மூக்கும் முழியுமா நல்லா இலட்சணமாத்தானே இருக்கு?'
'ஆமாம்'
'எவ்வளவோ பேர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் இல்லையா?'
'ஆமாம்'
'பின்ன, நீங்க மட்டும் எதுவும் செய்யாமல் அப்படியே போறீங்களே, ஏன்? படத்தைப் பதிவேற்றிய உங்கள் நண்பர் அதிக விருப்பங்களைப் பெற்றுவிடக்கூடாது என்கிற காழ்ப்புணர்வா?' எனக் கேட்டாள் மகிழினி.
வெள்ளந்தியாய்க் கேட்டவளைப் பார்த்து வெடிச் சிரிப்புச் சிரித்தான் அரங்கன். இவன் சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுப் பெண்கள் திரும்பி இவனைப் பார்த்தனர். அப்படி அவன் சிரித்தது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியதால் கடுப்புடன் கேட்கலானாள்.

'இப்ப எதுக்கு இந்தச் சிரிப்பு?' அவள் முகம் சற்று வதங்கியிருந்தது.

தொண்டையைச் செருமிக் கொண்டு அரங்கன் பேசத் தொடங்கினான். 'முண்டம்... முண்டம்... உன்னோட அறிவு இவ்ளோதானா? நான் காழ்ப்புணர்வால் விருப்பமோ பின்னூட்டமோ இடுவதில்லை என்றால் அவனின் எந்தப் பதிவுக்குமே அதைச் செய்யணுமே. ஆனால் நான் அப்படியா செய்கிறேன்? நல்ல பதிவுகளுக்கு எப்போதும் விருப்பங்களைத் தெரிவித்தே இருக்கிறேன். அதற்காக இது நல்ல பதிவு இல்லையா என்று கேட்காதே. நிச்சயமாய் இது நல்ல பதிவுதான். எனக்குப் பிடிக்கல, அதான்' என்றான்.

'உங்களுக்கு எதுதான் பிடிச்சிருக்கு?' எனக் கேட்டு முக்கினாள். பின்பு அவளே தொடர்ந்தாள். 'என் சிநேகதிகள் எல்லோரும் அவர்களது புகைப்படத்தை முகநூலிலும் புலனத்திலும் பதிவேற்றி மகிழ்கிறார்கள். ஏன் உங்கள் தம்பி மனைவிகூட அடிக்கடி படத்தை மாத்தி மாத்திப் போடுறா. என் படத்தை என்றாவது ஒரு முறையாவது போட்டிருக்கிறீர்களா? என்று வினாவினாள்.

அரங்கன் மெல்லிய புன்முறுவலோடு பதில் கூறினான். 'இதோ பார் மகிழு! அவனவன் அவன் பொண்டாட்டி படம், பொண்ணுங்க படம், மருமகள் படம்னு முகநூலில் போட்டு அதிக விருப்பங்களைப் பெற்று மகிழ்கிறார்கள். அந்த அதிக விருப்பங்க ளெல்லாம் அவனுக்குக் கிடைத்தவை என்றா நினைக்கிறாய்? இல்லை. நிச்சயமாய் இல்லை. அதெல்லாம் அந்தப் பெண்களுக்கு விழுந்தவை. அதன் பின்னணி இரகசியம் என்ன தெரியுமா?' எனக் கேட்டுப் பொருள்பொதிந்த பார்வை பார்த்தான்.

ஏதோ புரிந்தவளாய், 'அழகைப் பாராட்டி ஆராதித்திருப்பார்கள், இதிலென்ன தவறு?' என வேண்டுமென்றே கேட்டாள்.

அவளின் மனவோட்டத்தை அறிந்தவன், அறியாதவன் போலும் பதில்மொழி உரைத்தான். 'நீ சொல்வது சரிதான். அழகைப் புகழ்வதில் தவறில்லைதான். ஆனால், தன் மனைவியின் அழகை ஊரார் புகழ்வதும், இரசிப்பதும், நயந்து விருப்பமிடுவதும் நல்லாவாயிருக்கு? அதுக்குப் பேர் வேற' எனச் சொல்லி முடித்தான்.

'விருப்பத்திற்குப் பின்னால் இவ்ளோ இருக்கா?!' என விழி விரித்தாள்.
'ஏன் உனக்குத் தெரியாதா? புலனத்தில் பதிவேற்றிய படங்களைத் தரவிறக்கி உன் சினேகிதியை ஒருவன் மிரட்டியது?'
'ஆமாம்... ஆமாம்'
'அதிலிருந்து அவள் விடுபடுவதற்கு எத்தனை பாடுபட்டாள்?'
' '
'அதெல்லாம் நமக்குத் தேவையா?'
'ஐயையோ... வேணாம் வேணாம். இருக்கிற கண்ணாறே போதும்'
'இப்போ தெரியுதா... ஏன் உன் படங்களைப் போடுவதில்லை என்று?'
'ம்'

'இந்த மாதிரி பதிவுகளையும் நான் ஊக்கப் படுத்துவதில்லை'
'சரிதான்' என்றவள் 'பெண்களே நிறைய படங்களைப் போடுகிறார்களே?' என அப்பாவியாய்க் கேட்டாள்.
'அதில் பாதி, உண்மை முகவரி கிடையாது. ஆண்களே பெண்கள் படத்தைப் பயன்படுத்தி விருப்பப் பிச்சை எடுப்பது. மேலும் சைபர் கிரைம் போலிஸாரும், பலரைக் கண்காணிப்பதற்காகப் பெண்கள் ஐடியில் உலவுகிறார்கள். நிறைய கம்பளைண்ட் இருக்கிறது. அதாவது எதிலும் சிக்காத வரையில் எந்தச் சிக்கலும் இல்லை. மாட்டிக்கிட்டா மீளுவதென்பது குதிரைக் கொம்புதான்' என நீண்ட விளக்கம் கொடுத்தான்.

'தன் மனைவியின் படத்தைப் போடும் கணவன்மார்களுக்கு இதெல்லாம் தெரியாதா?'
'தெரியலாம். தெரியாமலும் இருக்கலாம்' என்று மையமாகப் பதிலிறுத்தான் அரங்கன்.
சற்று அமைதியடைந்தவள் தொண்டையைச் செருமிக் கொண்டு மீண்டும் அவனைச் சீண்டலானாள்.

'சரி.. நீங்கள் சொல்லும் சமாதானம் சற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். இருப்பினும்.. என்று இழுத்தாள்'
'என்ன.. என்ன.. இருப்பினும்' என்று விழியுயர்த்தினான் அரங்கன்.
'பெண்களின் படத்துக்குத்தான் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சரி. குழந்தைகள் படத்தையுந் தான் தவறாகப் பயன்படுத்துகிறார்களாம். அது மட்டும் சரியா? நீங்கள் கூடத்தான் நம் குழந்தைகளின் படத்தைப் பதிவேற்றியுள்ளீர்களே' என்று வினவியவள் முகத்தில் அரங்கனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதம் பொங்கியது. அரங்கனும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

உண்மையில், இவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அவள் கேள்வியில் இருந்த நியாயம் அவன் அடிவயிற்றின் அமிலத்தை அதிகரித்தது. அவள் சொன்னவை முற்றிலும் சரியே எனச் சிந்தனை வயப்பட்டான் அரங்கன்.

இந்தச் சன்னமான இடைவெளியைப் பயன்படுத்தி மீண்டும் அவளே தொடர்ந்தாள். 'சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் பிள்ளைகளின் படத்தைத் தெரிவுசெய்து, அவர்களைக் கடத்திச், சிறுபிள்ளைகளிடம் தம் பாலுணர்வு வெறியைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு கூட்டம் செயல்படுதாமே.. நீங்கள் கேள்விப் படவில்லையா?' என மீண்டும் ஓர் அதிர்ச்சியை அரங்கனுக்குக் கொடுத்தாள்.

வீட்டிலேயே இருக்கும் இவளுக்கு இதெல்லாம் எப்படித் தெரிகிறது என்று மனத்தினுள்ளே வியந்தவனுக்குப் பதிலிறுப்பதுபோல், 'பள்ளியில் எனது நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்' எனச் சொல்லியமர்ந்தாள்.

'அடடே... நண்பர்களிடையே இவற்றையெல்லாம் விவாதிக்கிறீர்களா... அருமை... அருமை' என்று உள்ளன்போடு பாராட்டியவன் மேலும் தொடர்ந்தான்.

'மகிழ், நீ சொல்வது அத்தனையும் மறுக்கவியலாத உண்மைகள். நான் செய்திருந்தாலும் யார் செய்திருந்தாலும் அது தவறே என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வியலாது. முகநூலில், நான் தனியாக இருக்கிறேன் (am home alone) என்று பதிவேற்றிய (status upload) ஒரு பதின்பருவப் பெண்ணை, அவளின் முகவரியை அறிந்துகொண்ட சமூக விரோதிகள் சிலர், அப்பெண்ணின் வீடுபுகுந்து அவளைச் சீரழித்த நிகழ்வு நடந்துள்ளது. இன்னும் இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வராமலேயே நடந்துள்ளன. நடந்துகொண்டும் உள்ளன. சிறு பிள்ளைகளிடம் தொலைப்பேசியைத் தராதீர்கள் என்ற எச்சரிக்கையோடு சிறுபிள்ளைகளின் படங்களையும் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என நீண்ட சொற்பொழிவை ஆற்றினான்.

அவளின் மனநிறைவைக் கண்ணுற்று இவனும் அகமகிழ்ந்தான்.

உள்ளறையில், இவர்களின் ஆறாம் வகுப்புப் படிக்கும் அன்பு மகள் இனியவள், "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிற கணியன் பூங்குன்றனாரின் பாடலைச் சத்தமாகச் சொல்லி மனனம் செய்து கொண்டிருந்தாள்.

மகிழினியின் கண்களும் அரங்கனின் கண்களும் பொருள் பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டன.

No comments:

Post a Comment