'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

செந்தமிழ்ப் பாடினி
பாவலர் மணிமேகலை குப்புசாமி

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!

எனத் தமிழ்த்தாயின் மீது அளவில்லா அன்பு வைத்தவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார். பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்கள் என உலகெங்கும் கவிஞர் பலருளர். பாவேந்தர் பரம்பரையிலேயே தோன்றிய கவிஞர் ஒருவர் உள்ளார். ஆம். பாவேந்தர் பாரதிதாசனாரின் மகள்வழிப் பேர்த்தி செந்தமிழ்ப் பாடினி பாவலர் மணிமேகலை குப்புசாமி அவர்கள்.

அவர் 1956-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 25-ஆம் நாள் பிறந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி என்னும் சிற்றூரின் பெருநிலக்கிழார் திரு. இராமசாமி முதலியார் அவர்களின் தலைமகன் ஆசிரியர் இராம.சிவசுப்பிரமணியம்,  புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் மூன்றாம் மகள் இரமணி இணையரின் மூத்த மகள் ஆவார். இவர் 1984-ஆம் ஆண்டிலிருந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சிறப்புகள்:

தமிழிலக்கிய வரலாற்றில் ‘பிள்ளைத்தமிழ்’ சிற்றிலக்கியம்  படைத்த முதல் பெண் கவிஞர்.
கடந்த இரு நூற்றாண்டுகளில் ‘அந்தாதி’ சிற்றிலக்கியம் படைத்த சில பெண் பாவலர்களுள் ஒருவர்.
சித்திரக் கவிதைகள் எழுதி நூலாக்கி வெளியிட்ட முதல் பெண்பாவலர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
ஏறக்குறைய 61 இதழ்களில் இவர் எழுதிய செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன.
23 தொகுப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
முகம், மீண்டும் கவிக்கொண்டல், தாழம்பூ, இனிய நந்தவனம் ஆகிய இதழ்கள் முன்னட்டையில் இவருடைய நிழற்படத்தை வெளியிட்டுப் பெருமைப்படுத்தின.
புதுச்சேரி பெரும்புலவர் தமிழ் மாமணி அரங்க. நடராசனார் அவர்களால் செந்தமிழ்ப்பாடினி என அழைக்கப் பட்டவர்.
சாகித்திய அகாதெமி பொறுப்பு அலுவலர் முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்களால் இன்சொல் வலவர் என்று போற்றப்பட்டவர்.
செய்யுள் எழுதும் போட்டிகளில் கலந்து கொண்டு நாற்பத்தேழு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
தன்னுடைய மகனின் திருமண அழைப்பிதழைப் பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ (ஐந்து தொகுதிகள்) நூலோடு இணைத்து அனைவரையும் அழைத்தார்.

எழுதிய நூல்கள்

இவர் மரபு பா நூல்கள், சித்திரக் கவிதைகள், சிற்றிலக்கிய நூல்கள், சிறுவர் பாடல்கள், உரைநடை நூல்கள், கட்டுரைகள் எனப் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவருடைய நூல்களின் பட்டியலைக் கீழே காணலாம்

கவிதை நூல்கள்:
o தோப்பு
o அன்ன வயல்
o பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
o சித்தெறும்பே!... சித்தெறும்பே!...
o கவிஞரேறு வாணிதாசனார் பிள்ளைத்தமிழ்
o தந்தை பெரியாரின் தோழர் வே.ஆனைமுத்து அந்தாதி
o சித்திரக்கவிப் பேழை
o கலைமாமணி முனைவர்
வி.முத்து புகழ்மாலை.
o பாட்டரங்கப் பாடல்கள்

உரைநடை நூல்கள்:
o சிட்டுக் குருவியின் சின்ன கவலை
o அழகியல்
o செந்நெற் பயன்மழை
o பேர் பாதி
o இறையின் முகவரி
o கவிஞரேறு வாணிதாசனாரின் கவிதைகளில் பாவேந்தர் பாரதிதாசனாரின் தாக்கம்

பெற்ற பரிசுகள்

o ‘நேரு குழந்தைகள் இலக்கியப் பரிசு. (புதுச்சேரி அரசு)
o கம்பன் புகழ் இலக்கியப் பரிசு. (புதுச்சேரி அரசு)
o சிந்துப்பாவிற்கு இலக்கணம் கண்ட, இலக்கணச்சுடர் முனைவர் திருமுருகனார் அவர்கள் நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் நடத்திய மரபு பா எழுதும் போட்டியில் இருமுறை பரிசு பெற்ற பெண்பாவலர் இவர். இப்பரிசு அரசு தரும் பரிசுக்கு இணையாகக் கருதக் கூடியது.

பெற்ற விருதுகள்.

o புதுச்சேரி அரசின் உயரிய விருதான ‘தமிழ் மாமணி’ விருது.
o தமிழகம், புதுச்சேரியில் செயல்பட்டு வருகின்ற 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவரது முகவரி:
பாவலர் மணிமேகலை குப்புசாமி,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி – 605 008.
தொ.பேசி: 94421 86802

No comments:

Post a Comment