பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
அகிலமும் என்னைப் போற்ற
என்றனின் அன்பை ஏற்க
இனியன உரைப்பேன் நாளும்
கன்னியாந் தமிழைப் போற்றிக்
காவியம் படைத்து நாளும்
உன்னத உயர்வு கொள்ள
உள்ளமும் உவகை காணும் 1
காண்பவர் என்னைப் போற்றக்
காரிய மெல்லாம் செய்வேன்
வேண்டிய வெல்லாம் ஈசன்
விருப்புடன் கொடுப்பேன் செய்து
வீண்வழுப் பேசி நின்று
மெய்யுடல் வருத்த வைத்தால்
நாண்மலர் போன்றே நின்று
நம்புவேன் துணையி றையே 2
இறைவனின் துணையை ஏற்றே
எளிதெனச் செயல்கள் செய்வேன்
பெறுமதி யற்ற சொல்லைப்
பிழையெனச் சுட்டிச் செல்வேன்
முறுவலைக் காட்டி உள்ளம்
முடக்கினை மறைத்து நிற்பேன்
பிறரது சுமையின் துன்பப்
பிணியினைப் போக்கு வேனே 3
பிணிகளைப் போக்க நாளும்
பெருவழி நாடிச் செல்வேன்
துணிவுடன் முன்னே சென்று
துயரினைத் துடைத்து நிற்பேன்
மனத்தினில் அன்பு பொங்க
மாற்றமும் வேண்டி நிற்பேன்
உணர்வினி லென்றும் மெய்ம்மை
உள்ளமும் மகிழ்வெள் ளத்தில் 4
இல்லறம் மகிழ்வில் பொங்க
ஏற்றமும் வாழ்வில் கூடச்
செல்வமும் நிலைத்து நிற்க
சிறப்பெனக் கொள்ளும் யாவும்
நல்லின மனிதர் போற்ற
நன்றிகள் சொல்லி நானும்
மெல்லிதாய்ப் புன்ன கைப்பேன்
மேதினி இதில்ந கர்ந்தே 5
நகருவேன் உணர்ந்து மண்ணில்
நகைத்தெனை வீழ்த்த எண்ணும்
முகத்தினில் விழிக்கு முன்னர்
முயற்சியைத் தொடர்ந்து செய்வேன்
அகத்தினில் நஞ்சை வைத்தே
அழித்திட நினைக்கும் தீயோர்
அகத்திருள் நீங்க வேண்டி
அமைதியாய்க் குறைகள் நீக்கி 6
குறைகளை நீக்கி விட்டுக்
குவலயம் மகிழ வாழ்வேன்
நிறைகளை வளர்த்துச் செல்வேன்
நிம்மதி மனத்தில் கொள்வேன்
அறவழி தன்னை நாடி
அடுத்தடி எடுத்து வைப்பேன்
இறையினை வணங்க நாளும்
இடரெனும் துயரும் நீங்கும் 7
துயரினை மறைத்துத் தாங்கிச்
சோர்வினை நீக்கி நல்ல
செயலினை முடிக்க நாளும்
சிந்தையைத் தேற்றி நிற்பேன்
உயரிய முயற்சி செய்து
உயர்வினை நாடச் செய்வேன்
கயவரின் சூழ்ச்சி யெல்லாம்
கடிதெனத் தொலைத்து யர்வேன் 8
உயர்வழி இஃதாம் என்றே
உள்ளமும் ஒப்ப நானும்
வியத்தகு செய்கை யெல்லாம்
விரைவினில் முடித்து நிற்பேன்
செயலதைத் தடுத்து விட்டால்
சிலையென நிற்க மாட்டேன்
முயற்சியைத் தொடர்ந்து செய்வேன்
முடிவினில் வெற்றி தொட்டு 9
உதவுவன் அருகில் நின்றே
உள்ளமும் மகிழ்வில் பொங்கச்
சதிவலை விரித்துக் கொல்லத்
தழும்பினை அகற்றி நானும்
எதிர்மொழி யற்றுக் காணும்
இடர்களைத் தகர்த்தி வீழ்த்தி
எதிர்மறை யாளர் முன்னே
என்னுடை ஆய்தம் அன்பே! 10
No comments:
Post a Comment