'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

அறஞ்சாரா நல்குரவு

கவிஞர் ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன் 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி, வேதாளத்தை இறக்கித் தன் தோளில் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

வேதாளம் ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிாித்து, "விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தொியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன் கேள்! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்குச் சாியான பதில் கூறாவிட்டால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும்" என்று எச்சாிக்கை செய்தது .

விக்கிரமனும், "சாி! வேதாளமே! கதையைச் சொல்!" என்று சொன்னான் .

"காவிாிப்பட்டிணம் என்ற ஊாில் முன்னொரு காலத்தில், சந்திரசேகரன் என்ற செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குக் கோடிக் கணக்கான மதிப்புடைய சொத்துகள் இருந்தன. தனசேகரன், குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனா். தன் மனைவி இலட்சுமியுடன் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தான்.

திடீரென்று சந்திரசேகரன் ஒருநாள் நோய்வாய்ப் பட்டான். வயதான காரணத்தால் மருத்துவா்கள் கொடுத்த மருந்துகளால், பயன் ஏதும் ஏற்பட வில்லை. தன் இறுதிக் காலம் நெருங்கிவிட்டதை அறிந்த சந்திரசேகரன், தன் சொத்துகளைச் சாிபாதியாகப் பிாித்துத் தன் இரு மகன்களுக்கும்  உயில் எழுதி வைத்தான்.

தாயைக் கவனிக்கும் பொறுப்பு, இரு மகன்களுக்கும் உள்ள காரணத்தால், ஒவ்வொரு மகனும் ஆறு மாதங்கள் முறைவைத்துத் தாயைப் பராமாிக்க வேண்டும் என்றும் உயிலில் எழுதி வைத்துவிட்டுக் கண்ணை மூடினான் .

இரண்டு மகன்களும், திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனா். பெற்ற தாயையும், முறைவைத்து, அவளது மனம் நோகாமல் காத்து வந்தனா். இவ்வாறு இருக்கையில், இரண்டு மகன்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.

பொிய மகன் தனசேகரனுக்குத் தீய நண்பா்களுடைய நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானான். வேசியா் தொடா்பும் ஏற்பட்டதால், குன்றன்ன செல்வம், வேகமாகக் கரைந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்தையும் சூதாடித் தொலைத்தான். மகனின் நிலைகண்டு, தாய் மிகவும் வேதனைப்பட்டாள். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் திருந்துவதாக இல்லை. இனி அவனைத் திருத்த முடியாது என்று தொிந்துகொண்ட அவள், அவனுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் அவனிடம் சொல்லாமலேயே வீட்டைவிட்டு வெளியேறினாள். நேராக இளைய மகன் குணசேகரன் வீட்டுக்கு வந்தாள்.

குணசேகரன் நிலைமையோ, அவன் அண்ணன் தனசேகரனைவிட மோசமாக இருந்தது. மளிகைக் கடை வியாபாரத்தில், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாத காரணத்தால், பெருத்த நட்டம் ஏற்பட்டது. நிதி நிறுவனம் ஒன்றில் இலட்சக் கணக்கில் முதலீடு செய்திருந்தான். அந்த நிதி நிறுவனத்தின் முதலாளி, ஒருநாள் இரவோடு இரவாக எல்லோருடைய பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான். மீதியிருந்த பணத்தையும், தன் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காகச் செலவிட்டிருந்தான். இப்போது அவன் அடுத்த வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் நிலைகண்ட தாய், அவனுக்காக மிகவும் வருந்தினாள். அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

தன் இளைய மகனுக்கும் அவள் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் அவனிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.

தனசேகரனும் குணசேகரனும் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனா். சொல்லாமல் கொள்ளாமல் போன தாயைப் பல இடங்களிலும் தேடி அலைந்தனா்.

இந்த நிலையில் ஒருநாள், குணசேகரனின் நண்பன் ஒருவன், குணசேகரனைப் பாா்க்க வந்தான்.  அவனைப் பெற்ற தாய், பக்கத்து ஊாில், பிச்சை
எடுப்பதாகச் சொன்னான். இதனைக் கேட்டு அதிா்ச்சியடைந்த குணசேகரன், தன் அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கே பேருந்து நிலையத்தில், தங்களைப் பெற்ற தாய், பிச்சையெடுக்கும் காட்சியைக் கண்டு, இருவரும் கண்ணீா் விட்டனா். அவளது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனா். மீண்டும் வீட்டுக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனா். முதலில் மறுத்த அந்தத் தாய், பிறகு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால்  குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், பொியவன் தனசேகரன் வீட்டுக்கு எப்போதும் வரமுடியாது என்றும் உறுதியாகத் தொிவித்துவிட்டாள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால், தன்னை விட்டுவிடு மாறும், தான் வழக்கம்போல் பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொள்வதாகவும் தொிவித்துவிட்டாள். வேறு வழியின்றி இருவரும் தாயின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டனா்.

கதையைச் சொல்லி முடித்த வேதாளம், "விக்கிரமா! குணசேகரனின் வீட்டுக்கு வருவதாக ஒத்துக்கொண்ட தாய், பொியவன் தனசேகரன் வீட்டுக்குப் போக மறுத்தது ஏன்? இதற்குச் சாியான விடை சொல்லாவிட்டால், உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகச் சிதறிவிடும்" என்றது.

உடனே விக்கிரமன், "வேதாளமே! இருவருமே வறுமையில் வாடினாலும், வறுமை வந்தவிதம் மாறுபட்டது. வியாபாரத்தில் நட்டம், நிதி நிறுவனக் காரனின் மோசடி, மனைவியின் மருத்துவச் செலவு ஆகிய காரணங்களால் குணசேகரனுக்கு வறுமை வந்தது. இந்த வறுமைக்கு அவன் காரணமல்ல. இந்த வறுமை அறத்திற்கு உட்பட்டதே. அவன் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த வறுமையை ஐயன் திருவள்ளுவா் ‘அறன் சாா்ந்த நல்குரவு’ என்று கூறி, அதை நியாயப்படுத்துகிறாா். ஆனால் தனசேகரனுக்குக் குடிப்பழக்கம், வேசியா் தொடா்பு, சூதாடுதல் ஆகிய அறத்திற்குப் புறம்பான செயல்களால் வறுமை வந்தது. அவனுடைய வறுமையை அவனே தேடிக் கொண்டது. இத்தகு வறுமையை ஐயன் வள்ளுவா் ‘அறஞ்சாரா நல்குரவு’ எனக் குறிப்பிடுகின்றாா். பெற்ற தாய், பலமுறை இடித்துக் கூறியும் தனசேகரன் திருந்தவில்லை. ஆகவே தங்குவதற்கு இளைய மகன் வீட்டை அந்தத் தாய் தோ்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.

விக்கிரமாதித்தனின் இந்தச் சாியான பதிலால் திருப்தி அடைந்த வேதாளம், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.

குறள்:
அறஞ்சாரா நல்குர(வு) ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்:
அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து ஒருவனுக்கு வறுமை வந்தால், அவனைப் பெற்ற தாய்கூட, அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாள்.

No comments:

Post a Comment