'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2020

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல சிறப்பான படைப்புகளை உருவாக்கித் தமிழ்க்குதிர் மின்னிதழுக்கு ஆதரவு அளிக்கும் படைப்பாளர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.

கவிஞரே ஆயினும் பிழைகளின்றிக் கவிதை, கதை, கட்டுரைகள் இயற்றல் இக்காலத்தில் அரிதாகி வருகிறது. இலக்கணம் என்பது ஒரு மொழி எப்படிப் பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவும் அம் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுவதாகும். ஒரு மொழியின் இயல்புத்தன்மை கெடுவது அம்மொழியைச் சரியாய்க் கல்லாததாலும் பிறமொழிகளின் கலப்பாலும் ஏற்படுகிறது.

பைந்தமிழ்ச் சோலையின் நோக்கம் இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் களைந்து மொழியைக் கற்க உதவுவதாகும். பைந்தமிழ்ச்சோலை பாட்டியற்றுக பயிற்சிகளின் மூலம் கவிஞர்களைச் செம்மைப்படுத்தி வருகிறது. தமிழ்க்குதிருக்கு அனுப்பப்படும் படைப்புகளிளும் பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே வெளியிடப் படுகின்றன. இது கவிஞர்கள் தம் படைப்புகளில் காணும் பிழைகளைத் திருத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

தமிழைத் தமிழாய்ப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும். தாய்மொழியாம் தமிழைப் பிழையின்றிக் கற்றுக்கொண்டு வளருங்கள். சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கம் கொண்டு படைப்புகளை உருவாக்குங்கள். மகிழ்ந்திருங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment