'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

சூரிய வெளிச்சம்

 பகுதி-2

 பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்

 1.       தொண்டை நாடு!

தொண்டையாம் நாட்டின் பேரைத்

    தொடாவெனுங் கொடியா லாக்கிப்

பண்டைய காலத் துள்ளோர்

    பக்குவமாய்ப் பாடி வைத்தார்

மண்டையி லறிவைச் சேர்த்து

    மகிழ்ந்திட வாழ்ந்த சான்றோர்

அண்டையில் கூடி யாய்ந்த

    அருமையாம் தொண்டை யம்மே!             21

 

வடக்கினில் மாலின் குன்றம்

    வளந்தருந் தெற்காம் பெண்ணை

குடக்கினில் மலையென் றாகிக்

    குணக்கிலே கடலாம் காண்பீர்

எடுத்திடுந் தோற்றங் கொண்ட

    எளிமையின் சீராய் நின்று

தொடுத்திடு முண்மை கூறும்

    தொண்டையாம் பெருமை யம்மே            22

 

பல்வகை நதிகள் பாய்ந்து

    பசுமையாய் இசையை மீட்டும்

நெல்வகை முற்றி யாடும்

    நெறியெலாஞ் சிறந்தே ஓங்கும்

இல்வகை யில்லை யென்றே

    இனிப்பென வெல்லாஞ் சேரும்

பொல்லெனு முழங்கு மோசை

    புதுமையாந் தொண்டை யம்மே                23

 

பல்லவ ராண்ட பூமி

    பார்புக ழீந்த சாமி

வல்லவர் வலிமை யோர்கள்

    வறுமையைக் காணா தோர்கள்

வில்லினி லம்பைப் போலும்

    விருப்புட னியங்கி யோர்கள்

நல்லெனுஞ் சான்றோர் வாழ்ந்த

    நனிதிகழ் தொண்டை யம்மே                    24

 

திருவெனுங் கோயி லுண்டாம்

    திகழொளி யென்று முண்டாம்

வரவெனும் விருந்தி னோர்க்கு

    வாய்சுவை யாக்க முண்டாம்

கருமலைக் குன்றம் நன்றாம்

    கருத்தினில் செம்மை நன்றாம்

செருவெனி லெதிர்த்தே ஓங்கும்

    செழிப்பெலாம் தொண்டை யம்மே           25

 

தொன்மையைத் தாங்கி நிற்கும்

    துணையென வரலா றாக்கும்

வன்மையை வாடச் செய்து

    வாக்கினை நிலைக்கச் செய்யும்

பொன்னென வளங்கள் மிஞ்சப்

    பொலிவுறும் வயல்க ளோங்கும்

மின்னிடுங் குன்றந் தன்னில்

    மிரட்டிடுந் தொண்டை யம்மே                   26

 

தொல்லியல் கருவி யெல்லாந்

    துலங்கிடுந் தொண்டை நாட்டில்

நல்லிய லிருப்பின் கூட்டம்

    நனிந்திடும் பொருப்பின் மேட்டில்

ஒல்லிய மகளிர் கூட்டம்

    ஒளிவிடும் நெற்றித் தோட்டம்

புல்லிய ரஞ்சி யோடும்

    புலமையாந் தொண்டை யம்மே                               27

 

தேன்பிழி கூட்ட மென்றும்

    தெளிதொழில் செய்து வாழும்

ஊன்பிழி  யுழைப்பைத் தந்தே

    உறுதுயர் துரத்தி யோட்டும்

கான்வழி யெல்லாஞ் சென்று

    கமகம  மருந்தை யாக்கும்

வான்வழி  வரைக்கும் வீசும்

    வாசமாம் தொண்டை யம்மே                     28

 

விருந்தென வந்த பேர்க்கு

    விருப்பமாய் மலர்வர் நெஞ்சை

மருந்தென வாழ்வே கொள்ளின்

    மறுத்திடா உள்ளங் கொள்வர்

இருந்திடுங் கூலந் தன்னில்

    இளைப்பெனு மமுதம் பெய்வர்

வருந்திடும் பேர்கள் வாழா

    வாஞ்சையாந் தொண்டை யம்மே             29

 

மலர்களும் புள்ளும் மானும்

    மலையினில் மகிழ்வாய் வாழும்

அலரென மொழியும் பேச்சை

    அறிந்திடா மாண்பு மோங்கும்

புலர்ந்திடுங் காலை தன்னில்

    புதுவிசை மயங்கக் கூட்டும்

பலந்தரும் பழமை யெல்லாம்

    படைத்திடுந் தொண்டை யம்மே               30

 

வெளிச்சம் தொடரும்…

No comments:

Post a Comment