'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

கண்ணதாசா

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்

    கவியரசா நீவடித்தாய் பாட்டு !

காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்

    கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!

சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்

    துள்ளிவரு மின்சந்தத் தோடு

சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து

    சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!

வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்

    வாழ்விற்கு நல்லவழி காட்டும் !

மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக

    மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!

முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு

     முத்தாக ஒளிவீசி மின்னும் !

முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்

     முத்தையா நின்பாக்கள் என்றும் !!


பட்டுவேட்டிச் சட்டையுடன் மிடுக்கான நடை போட்டுப்

     பாட்டெழுத வருமுன்றன் தோற்றம்

பார்ப்போரைக் கவர்ந்திழுக்கப் பாவலநின் உள்ளத்தில்

     பழகுவதில் என்றுமில்லை மாற்றம் !

பொட்டுவைத்த நெற்றியிலே வெண்ணீறும் எடுப்பாகப்

    பொன்னொளிரும் நிறத்தழகைக் கூட்டும் !

பொலிவான வதனத்தில் பொங்கிவரும் இதழோரப்   

     புன்னகையில் சொக்கிவிடும் கூட்டம்

கட்டுடைத்த வெள்ளமெனத் தடையின்றித் துள்ளிவரும் 

    கதைகேட்ட அக்கணமே பாட்டு !

காண்போரும் விழிவிரிய அசையாமல் நின்றிருக்கக் 

   கண்ணதாசா நீகவிதை ஊற்று !

பட்டங்கள் பெற்றதில்லை கல்லூரி போனதில்லை

   பாட்டாலே பாடங்கள் சொன்னாய் !

பரம்பொருளின் அருளாசி நின்றனுக்கு வாய்த்ததனால்

    பார்போற்ற புகழீட்டி நின்றாய்! !!

 

தெவிட்டாத பாசமைத்தாய் தினந்தோறும் பருகுகிறோம்

    தீரவில்லை இன்னுமெங்கள் தாகம் !

தேமதுர மொழியினிலே தேவசுக மீட்டலிலே

    தென்றலுக்கும் பிறவாதோ மோகம்?

கவிமகனே! உன்படைப்பை மிஞ்சுதற்கு நீயிந்தக்

    காசினியில் பிறப்பெடுப்பாய் மீண்டும் !

கவல்போக்கும் களிம்பாகிக் காயத்தை ஆற்றிவிடக்

    கடவுளுனை இங்கனுப்ப வேண்டும் !!

செவிகுளிர இனுஞ்சொல்லி நம்பிக்கை ஒளியூட்டச்

    சித்தனுன்றன் தத்துவமும் வேண்டும் !

திருநீற்றுக் கீற்றோடு நெற்றியிலே பொட்டிட்டுச்

    சிறுகூடற் பட்டியானே வாராய் !!

புவியினிலே உன்புகழைப் பாடுவதே தன்பணியாய்ப்

    போற்றிவாழும் அன்பருளர் பாராய் !

பொலிவான சிலைவைத்துப் பெரும்பேறாய் அதைநினைத்துப்

    பூசிப்போர் பூரிக்க வாராய் !!!

No comments:

Post a Comment