'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

 பகுதி - 7

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

 

காதலியின் அடையாளம் கூறல்

(கேசாதிபாதம்)

 

கொண்டல் சுருட்டிவைத்த கொண்டையில்.! வெள்ளியன்ன

வண்ணமுத்தைச் சூடிவைத்துக் கொண்டவள்...! கொண்டைமுத்தைக்.!

 

கொண்டல் இடைப்பறக்கும் கொக்கென்றே கண்டுகண்டு

கெண்டைரெண்டும் உண்ணுமென்(று) அங்கிங்(கு)ஓடிக்கலங்கும்..!

 

வான்பிறையாய் நெற்றியது தோன்ற..! நிறைகுழலில்

தேனொழுகும் முல்லைமலர் ஊன்ற..! இரவெழிலாய்

 

வந்ததுபோல் மின்மினியைக் காட்டும்.. கழுத்தொளிரும்

அந்தமணிப் பேரொழுங்கின் தோற்றம்..! அடடடடா.!

 

காமன் படைக்கலமோ? கண்மை எழுதிவைத்த

ஏமன் கொலைப்பொருளோ? ஏந்திழையாள் வாள்விழிகள்

 

தாக்கத் தடுக்கும் உறையோஒ?! நீள்கரையோ.?

பார்க்கப் பலபொருளைக் காட்டுவது தான்முறையோ..!

 

என்போல வேகருத்(து)..! இன்னும் உடல்சிறுத்துக்.!

கண்மேல் புருவம் இருக்கும் கலைமிகுத்துக்..!

 

காவிமலர் பூந்த கருப்புவண்டைப் போல்.!உயிர்

ஆவி குடிக்கும் அவள்விழிகள்..! தூவியுடன்

 

அஞ்சனம் பூசி அழகு மொழிபேசி

வஞ்சனை தீர்க்கவந்த வாள்விழிகள்..! பூங்கிளிகள்..!


ஈரிதழ்ப் பூப்போல் இருக்கும்...! அதனழகில்

ஊரிலுள்..ளோர் கண்வண்(டு) ஓயாது வந்துமொய்க்கும்..!


செம்பவளம் போலவெழில் மின்னும்... உதடுகளைச்

செங்கழுநீர்ப் பூவெனலாம் இன்னும்... இதழுள்ளே

 

பாலில் குளிந்ததோ பால்நிலவில் தோய்ந்ததோ

நீலக் கடல்பிறந்த நித்திலமோ யானறியேன்

 

நாலெட்டும் பல்லோ நடுகல்லோ நான்சாக

ஏழெட்டுத் திங்களாய்த் தீட்டியொளி கூட்டினளோ..!

 

தங்கம் படையெடுப்புக் கொள்ளும்..! கழுத்தழகின்

அங்கம் மறைத்தபடி மாலை மணிதுள்ளும்..!

 

கண்ணை உருத்தும் முலைகள் கவின்கலைகள்

முன்னம் கருத்தவிளந் தெங்கின் சிறுகுலைகள்..!

 

கட்டெறும்பைப் போல இடையாள் எழிலுடையாள்

எட்டுமட்டும் தேடினும் காணக் கிடையாஅ..!

 

கொங்கைகுழைந் தாட இடையொடியும் என்றஞ்சித்

தங்கவிழை மேகலையால் தானிறுக்கிக் கட்டுவாள்..!

 

வாழைத் தொடையேறித் தோற்றதோ வாய்புலம்பித்

தாளில் கிடந்து கொலுசரற்றித் தள்ளாடப்!

 

பஞ்சிதழைப் பாதமாக்கிக் கொண்டாள்வான் பால்நிலவை

அஞ்சிரண்டு கால்விரலாய் ஆங்கமைத்துச் சென்றவள்..!

 

வஞ்சியவள் பேரழகை வாய்த்தவெழிற் சீரழகைச்

செந்தமிழில் செப்பச் செவிகொடுத்துக் கேட்டிருந்தாய்..!

 

வானிலவைக் காட்ட வகுப்பெடுக்க வேண்டுமோ..!

தேனிலவாம் தேவதையின் தேகவெழிற் பார்த்தாலே..!

 

என்னவள் என்றே அறிவாய்.! எடுத்துநான்

சொன்னவை எல்லாம் சரிதானெ னப்புரிவாய்.!

 

வள்ளிமுத்துச் சொல்லித்தான் வந்ததாய் வாயெடுத்துச்

சொல்லிப்பார் தோற்றத்தில் மாற்றத்தைக் கூட்டுவாள்..!

 

கண்ணிரண்டைக் காதுவரை நீட்டுவாள் அங்கிலங்கும்

பொன்குழையில் மின்னற் பொலிவுறக்கூர் தீட்டுவாள்..!

 

(கொண்டல் – மேகம், காவிமலர் – தாமரைப்பூ, குழை - கம்மல்)                          


     தூது தொடரும்...

No comments:

Post a Comment