'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 8

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

தமிழ் நெடுங்கணக்கே தேவையற்றதெனக் கூறிய பெரியார், எவ்வித மொழியறிவும், மொழியாய்வு மின்றி எழுத்துகளைச் சீர்திருத்துகிறேன் என்று தமிழைச் சிதைக்க முற்பட்டார். ஆனால் பெரும்பான்மைத் தமிழறிஞர்களால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

ஐகார உயிர்மெய்யெழுத்துகளான லை, ளை போன்ற இக்கால வடிவங்கள்கூட, அவருடைய அச்சு எழுத்துக் கட்டை தேய்ந்துபோனதால் மாற்று வடிவமாக எழுதப்பட்டவையே. அது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. முன்னரே மற்ற ஐகார உயிர்மெய்களான கை, ஙை… போன்ற எழுத்துகளில் இருந்த வடிவங்களே. எனவே லை, ளை என்னும் வடிவ மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

ஐ, ஔ இரண்டுமே தேவையற்றதென்றும், அய், அவ் என்ற எழுத்துகளாலேயே அவற்றைக் குறிக்கலாம் என்றும் அந்த இயக்கத்தாரின் நிலைப்பாடும் மிகமிகப் பிழையானதே. இதைக் குறித்துத் தனியே ஒரு கட்டுரை வரைகிறேன்.

இப்படி தமிழினத்தையும், தமிழ் மொழியையும் சிதைத்து, திராவிடத்தை முன்னிறுத்தித் ‘தமிழர்’ என்ற அடையாளத்தை இல்லாமற் செய்வதற்காகத் தன் விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர் பெரியாரும் அவருடைய தொண்டர்களும். தமிழ் என்று வருமிடங்களில் அடைப்புக் குறிக்குள் திராவிடம் என்றும், திராவிடம் என்று வருமிடங்களில் தமிழ் என்றும் எழுதும் வழக்கத்தைத் தவறாமல் செய்துவந்த பெரியாரின் உட்கிடை என்னவாக இருக்கும்? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

திராவிடம் என்ற பெயரைச் சொல்லி நம்மினத்தையும், மொழியையும், நாட்டையும் சிதைத்து, திராவிடம் என்ற தமது சிறுபான்மை இனத்துக்குள் திணிக்கவும், தம்மினத்தை நிலைபெறச் செய்யவுமே அவர்களுடைய அடிப்படை எண்ணம் என்பதை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த திராவிடச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் ‘திராவிட அடிவருடி’யாகித் தமிழினத்தையும், தமிழைப் பற்றி உணர்வாகப் பேசுவோரையும் ‘ஆரிய அடிவருடி’யென்று பேசி அடக்குவதைக் கீழ்த்தரமான வழக்கமாகவைத்துக் கொண்டுள்ளனர்.

ஆக.. முற்கூறப்பட்ட பல்வேறு தரவுகளினால் நாம் யார்? நம் இனம் எது? நம் நாடு எது? திராவிடம் என்றால் என்ன? அதைத் தூக்கிச் சுமப்பவர்கள் யார்? அவர்களுக்குப் பின்புலம் என்ன? அவர்களின் நோக்கமென்ன? என்பனவற்றைப் பார்த்தாகி விட்டது. சரி.. இனி... கம்பனுக்கு வருவோமா?

ஈ.வே.ரா. அவர்களுக்குத் தமிழகத்தில் திராவிடத்தை ஊன்றுவதற்குப் பெரிதும் உதவியன சாதியப் பாகுபாடும், பார்ப்பன எதிர்ப்புமேயாகும். சாதியொழிப்பையும், ஆன்மீக மூடத்தனத்தையும் மட்டுமே எதிர்கொண்டு அவர் போராடியிருப்பாரே யானால் மாபெருந் தலைவரெனலாம்.

ஆனால் அவருடைய நோக்கம் இவையல்ல. இவற்றின் வழியே திராவிடத்தை வேரூன்றித் தமிழரையும், அவருடன் இணைந்து வாழ்ந்திருந்த, பிறப்பால் தமிழரென வாழ்ந்திருந்த தமிழுணர்வு மிக்க பார்ப்பனர்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து எதிரிகளாக்கித் தமிழினம் என்ற அடையாளத்தை அழிப்பதேயாம்.

அருந்தமிழுக்கு அளப்பரிய பெருந்தொண்டுகள் செய்த பல தமிழ்ப் பார்ப்பனர்களை எள்ளி நகையாடியும், அவர்தம் தொண்டுகளை இழித்தும் பழித்தும் பேசியதாலும் நந்தமிழ் அந்தணர்கள் வேறு வழியின்றி மூலவேரான ஆரியப் பார்ப்பனருடன் அஃதாவது தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்டனர். இந்த விடயத்தில் பெரியாரின் எண்ணம் முழுமையாகவே ஈடேறியது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற கருத்தியலில் பெரியார் இருவேறு முரண்பட்ட கருத்துகளையே கொண்டிருந்தார் என்பது அவருடைய எழுத்துகளாலும், பேச்சுகளாலும் நன்குணரலாம். 'தமிழுக்கு உழைத்தார்' என்று சிலர் சொல்வது தன்னுடைய அமைப்பு வளர்ச்சிக்குத் துணையாக அமைந்த செயல்களையே. மனத்தளவில் அவருக்குத் தமிழ்மேல் பெருவெறுப்பே இருந்தது என்பதை மறுக்கமுடியாது.

(கம்பனைக் குறித்த இந்தக் கட்டுரைக்கு இவ்வளவு செய்திகள் போதும். மேலும் பல செய்திகளையும், உண்மைகளையும் அறிய வேண்டுமானால் உண்மையான தமிழுணர்வுடன் தேடுங்கள் தெளிவடைவீர்)

ஆகப்... பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டுமாயின் இறைமறுப்பும், இறைமறுப்பு எனும்போது ஆரியப் பார்ப்பனர்களின் முதன்மைக் கட்டுகளான இராமாயணமும், மகாபாரமும் தவிர்க்க முடியாத இலக்காயின.

வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட ஆரியப் பார்ப்பனியத்தின் வேரை அசைக்க. அவர் பயன்படுத்திக் கொண்ட ஆயுதம் திராவிடம் என்னும் சாட்டை மட்டுமே. அந்தச் சாட்டையால் ஆரிய மரத்தை அடிக்க முடிந்ததே தவிர அசைக்கவோ, பிடுங்கவோ, சாய்க்கவோ முடியவில்லை.

திராவிடத்திற்கு மாறாக அவர் இறைமறுப்புக் கொள்கையைத் தமிழியச் சிந்தனையுடன் தமிழியப் பண்பாட்டு ஆய்வுடன் எதிர்கொண்டிருந்தால் அந்தத் தமிழியப் பண்பாடு என்னும் கூரிய வாளால் ஆரிய மரத்தை வேரோடு சாய்த்திருக்க முடியும்.

ஏனெனில், சாதியக் கட்டமைப்பு என்பதையும் தாண்டி, வாழ்வியல் உண்மையும் இணைந்திருந்ததே தமிழர்தம் சமயநிலை. ஆன்மீகத்தை மருத்துவத்துடன் இணைத்துப் பொதித்து வாழ்ந்தவர் நம் முன்னோர். அவர்தம் வாழ்வியல் நெறிகளை இன்றைக்கும் புறந்தள்ளிவிட முடியாதபடி நந்தமிழர் வாழ்வியலும், இறைமையும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தன என்பதை ஆய்ந்துணரலாம்.

"சாதியம் என்ற கட்டமைப்புக்கும், சமயம் என்ற கட்டமைப்புக்கும் மலையளவு வேறுபாடுள்ளது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை யாகும்".

…தொடரும்…

No comments:

Post a Comment