'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

பன்னிருவர்

பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன்

ஆழ்வார் திருவடிகளே சரணம்!

வேதம் தமிழ்செய்த வித்தகர்கள் பன்னிருவர்

பாதம் பிடிக்கின்ற பாக்கியத்தால் - நாதனவன்

வாழும் பரமபத வாழ்வுறுதி செய்திடலாம்

சூழும் பிறப்பிறப்பைச் சுட்டு!

 

1.       பெரியாழ்வார்

சுட்டி இறைப்பொருளைச் சூழ்ந்தார்க் குணர்த்தியே

கட்டிக் கிடந்தகிழி தான்தாழ - வெட்டிய

விட்ணுசித்தர் பாதம் வியந்தேத்து வாய்நெஞ்சே!

உட்பொருளைக் காண்பாய் உணர்ந்து!

 

2.       ஆண்டாள்

உணர்வில் அரங்கத் துறங்குபவன் மேவக்

கனவினிலே கண்டகவி செய்தே - நனவிலுமே

சூடிக் கொடுத்தாளின் சொல்லைத் தினந்தோறும்

பாடிப் பரவுதலே பண்பு!

 

3.       குலசேகராழ்வார்

பண்பில் இறையடியார் பான்மை உணர்த்திடவே

தன்கை அரவக் குடங்கொடுத்த - மன்னவனாம்

வஞ்சிக்கோ பாதம் வழுத்திப் பயமின்றித்

துஞ்சிடலாம் ஓடும் துயர்!

 

4.       திருமழிசையாழ்வார்*

துயரில்லை கர்மத் தொடர்பில்லை மாலைச்

செயலாலே பாய்சுருட்டச் செய்த - செயலாலே

அன்பர்க்குப் பின்னே அரியென் றுணர்த்திவைத்த

பொன்மழிசைப் பூபதியைப் போற்று!


5.       தொண்டரடிப் பொடியாழ்வார்

போற்று திருமாலைப் போற்றித் திருமாலை

சாற்றியருள் செய்தார் சரனிணையே! நாற்றமலர்த்

தொண்டிட்ட தொண்டர் அடிப்பொடிக்கே என்றென்றும்

தெண்டனிட்டு நெஞ்சே தெளி!

 

6.       திருப்பாணாழ்வார்

தெளிக! திருமால் திருமேனி வண்ணம்

பொலியும் ஒருபத்தில் பொத்தி - அளித்த

திருப்பாணர் வாக்கைத் தினம்பாடி நெஞ்சே!

விருப்பெல்லாம் கொள்ளும் விடை!

 

7.       மதுரகவியாழ்வார்

விடைசொற் குருதாள் விரவிப் பணிந்தே

மடைமீறி வந்த மணிபோற் - தடையின்றித்

தேன்கவிசெய் எங்கள் மதுரகவி யாழ்வார்தாள்

தான்வணங்கத் தானே தலை!

 

8.       திருமங்கையாழ்வார்

தலையேற்றி உன்னைநிதம் தாள்பணிவேன் நெஞ்சே!

நிலையேற்றி என்னைநீ வைத்தால்! அலையாய்க்

கலியனவர் சொன்ன கவியாவும் சொல்லிப்

பொலிவாய் உனக்கே புகழ்!

 

9.       பொய்கையாழ்வார்

புகழ்வேண்டேன் நில்லாப் பொருள்வேண்டேன் இங்கே

நிகழ்கின்ற யாவும் நிகழ்த்தும் - மருளில்லா

மாயோன்கைச் சங்கம் மலர்ந்த திருப்பொய்கைச்

சேயோன் நினைவெனக்குச் சீர்!

 

10.    பூதத்தாழ்வார்

சீர்வேண்டின் வாழ்வில் செயம்வேண்டின் இப்புவியில்

நேர்கின்ற யாவும் நிகழ்த்தும் - ஓர்மாலின்

கைவாழ் கதையாம் கடல்மல்லை பூதத்தார்

மெய்யடியை நெஞ்சேநீ மேவு!

 

11.    பேயாழ்வார்

மேவுமருள் வேண்டின் மிடியறியா நாள்வேண்டின்

யாவும் நடத்துகின்ற யாதவனாம் - தேவகியின்

நந்தன்கை நந்தகமாய் நம்மயிலை கேணியிலே

வந்துதித்தார் தாளை வழுத்து!

 

12.    நம்மாழ்வார்

வாழ்த்துமினோ எங்கும் வரிசங்கம் ஊதுமினோ!

பாழ்கலியை வேதத்தால் பாழ்செய்தே - கூழ்செய்ய

தென்குருகூர் சேர்ந்த திருப்பயனாம் மாறனெனும்

அன்புருவே எங்கள் அரண்!

No comments:

Post a Comment