'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

கவியரங்கத் தொடக்கக் கவிதை


பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


 தமிழ் வாழ்த்து

முத்தமிழே செம்மொழியே தமிழத் தாயே 

   முன்னவர்கள் முத்தென்றே உன்னைக் காத்தார்

தித்திக்கும் இன்தமிழாற் கவிதை பாடத்    

   தீந்தமிழின் சொற்களினைத் தேடி வந்தேன்

சித்திக்க வந்தென்றன் அருகில் நின்று   

   சிறப்பாக  அருள்தந்து வாழ்த்த வேண்டும்

எத்திக்கும் முழங்கட்டும் உன்றன் மாட்சி

   எழிலாக எனைக்காத்தே அருளு வாயே


ஆசான் வாழ்த்து

தரணியினில் சிறக்கின்ற மரபு பாக்கள் 

   தனித்துவமாய் மிளிர்கின்ற சோலை கண்டேன்

கரங்கொடுத்து வழிநடத்தும் ஆசான் நாடிக்

   கனிவாக என்விருப்பம் சொல்லி நின்றேன் 

குருவருளின் கருணையோடு மரபைக்  கற்கக்

   குதூகலத்தில் நாள்தோறும் வடித்தேன் பாக்கள் 

வரந்தந்தப்  பைந்தமிழின்  சோலை தன்னை

    மகிழ்வாகக் கரங்குவித்துப் போற்று வேனே


நற்றமிழின் சொற்களினால் மாலை கோத்து

    நறுந்தமிழால் பாவகைகள் கற்றுத் தந்தார்

ஒற்றுக்கள் வருமிடமும் வகையாய்ச் சொல்லி 

    உன்னதமாய்ப் பாட்டியற்றும் பயிற்சி தந்தார் 

பற்றுடனே திருத்தங்கள் செய்தே எம்மைப்

    பாவகைகள் பாங்காக வடிக்கச் செய்தார் 

குற்றமறக் கற்பித்த நல்ல ஆசான் 

    குருவருளின் துணையோடு தொடரு கின்றேன்


அவை வாழ்த்து

பைந்தமிழின் சோலையினுள் நுழைந்து நானும்   

    பாங்காகக் கதவுதனைத்  திறந்து வைத்தேன்

செந்தமிழின் சொற்களினால்  மாலை கோத்துச்

    சிறப்பாகக் கவிபாட மகிழ்வாய் வாரீர் 

அந்தமிழா லனைவருக்கும் வணக்கம்சொன்னேன்

    அகமகிழ்வாய் எண்ணமதைப் படைக்க வாரீர் 

செந்நெறியில் விருப்புடனே திறந்த தாளைச்  

    சிந்தையுடன் படைத்திடுவீர் மகிழு மாறே



தொடக்கம்

கதவுதிறந் துவையென்னும் தலைப்புத் தந்து

கவியரங்கத் தலைமையினைத் தாங்கச்

சொன்னார்

உதயமாகும் கற்பனைகள் பலவும் கண்டே

    உள்ளத்தின் கதவுதனைத் திறந்து விட்டேன் 

விதவிதமாய்க் கதவுகளும் இருக்கக் கண்டு 

    வியப்புற்று மகிழ்வுற்றேன் தலைப்பில் நானும்

மதுவருந்தும் வண்டாகச் சுவைக்க எண்ணி 

    மகிழ்வுடனே கவிதைகளைப் பார்க்க வந்தேன் 

புதுமையான கருத்துதன்னைப் படைக்க வாரீர்

  புறப்படட்டும் புதுப்புதிதாய்க் கவிதைப்பாய்ச்சல்


நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் வலிகள் தன்னை 

    நேர்மையாக எடுத்துரைக்க வலிகள் மாறும்

பஞ்சமின்றி வாழ்வதற்கு வழிகள் கூறப்  

    பட்டினியால் வாழ்வோரின்  உள்ளம் ஆறும்  

வஞ்சமின்றி அறிவுதனைப் பகிர்ந்து  விட்டால்   

    வளத்துடனே வாழ்வார்கள் உலகில் மாந்தர் 

கொஞ்சிடுமே விழுகின்ற சொற்க ளெல்லாம்

    குதூகலமாய்க் கவிவரியாய் வந்து துள்ளும் 


முத்தமிழ்ச் சொற்களால் முத்தாய்த் தொடுத்துத்

தித்திக்கும் மனத்தைத் திறக்க லாமே 


உரிமை தன்னை உரத்துக் கேட்டு  

விரைவாய்ச் சொல்லி வேட்கை தணிப்பீர்   


அறிவு கத(வு)அ னைத்தையும் திறக்கச் 

செறிவாய் ஓடும் அந்தமிழ்ச் சொற்கள்  


அன்பைக் காட்டும் அறவழி திறக்க

நன்றே தெரியும் நல்லோர் வழிகள்   


எண்ணக் கதவைத் திறந்து வைத்துப் 

பண்பாய் வந்து பகரு வீரே


No comments:

Post a Comment