'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

உற்ற துணை நீயே!

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

                                                        தத்த தனதானா


அருவியென விழிபெருக நின்றன்றி ருப்புகழை 

மொழிகுழற வுளமுருகி மன்றந்த னிற்பொழிய

அகமகிழு மறுமுகவ இன்பங்க ளைச்சொரிய

                                                            இத்த ருணம்வாராய்!

    அழகனுன திருவடியை யென்றுந்து திக்குமடி

    யவரிதய நிறையுமொளி பொங்குந்த மிழ்க்கடவுள்

    அமரர்களும் முனிவர்களும் வந்தன்பி னைப்பொழிய

                                                                உற்ற துணைநீயே!

குருபரனு னருமழையி லங்கஞ்சி லிர்ப்படைய 

நதிதவழு மலைகளென நெஞ்சம்ப னிக்கவொரு

குளிர்மதியி னொளிபடர விஞ்சுங்க விப்படைய

                                                                    லிட்டு மகிழ்வேனே !

    குறுநகையு மிதழ்களிடை சிந்துங்க னிச்சுவையு

    மினியதென நெகிழமன மெங்குந்தெ ளிக்குமது

    கொடியிடையு மசையநடை கொஞ்சுங்கு றத்திமகள்

                                                                மெட்டி யொலிகேளாய் !

வருகவென உயிர்விழைய வந்திங்கு நற்றமிழில் 

இனியகவி நெயுமெழில்வ ரந்தந்து முத்தமிழின்

மணம்நுகரு மெளியவழி யுஞ்சிந்தை யிற்பதிய

                                                                        வைத்த குருநாதா !

    மதுரமொழி யிலழகிய சந்தங்க ளைப்பழக 

    ஒருநொடியி லெழுதிடநெ கிழ்ந்திங்கு  நட்புமிக

    மலரடியை யுரிமையில்வ ணங்குஞ்சி றப்பினையெ

                                                                    னக்க ருளவேணும்!

இரவுபகல் நினைவினில்நி றைந்தன்பு மிக்கவனை

நொடியளவு பிரியமன மின்றிங்கு விக்கவுயிர்

இளகுமுனம் மயிலினில்ந டங்கொஞ்சி முத்தியருள்

                                                                    வெற்றி வடிவேலா!

    எழுகதிரி னொளியெனவி ளங்குந்தனிப்பொருளை

    உடலிலுயி ருளவரையி லன்றன்று பற்றிடவும்

    இருபுறமு மிணையரொடு வந்திங்கெ னைப்பரிவ

                                                                    ளிக்கும் முருகோனே !!

No comments:

Post a Comment