'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

ஆசிரியர் பக்கம்

 அன்புக்குரியோர்க்கு வணக்கம்.


அறிவியலின் வீச்சு உலகைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் இக்கணினிக் காலத்தில், பல்வேறு கலைச்சொற்களையும் பயன்படுத்த வேண்டிய சூழலில் உலகப் பொதுவாய் ஆங்கிலத்தைப் பயன்கொள்வதும், அதற்கு அம்மொழியைக் கற்றலும், பணியில் சேர்தலும் வழக்கமாகிவிட்ட செயலாயிற்று.


அயல்நாட்டிற்குப் பணிசெய்ய வேண்டித் தாய்மொழி தமிழையொதுக்குவது ஓரோவழி ஏற்கலாம்... ஆனால், இங்கிருக்கும் தமிழாசிரியர், முனைவர் உள்ளிட்ட துறைசார்ந்த 'வல்லுநர்' யாருக்கும் முழுமையான தமிழிலக்கணம் தெரியவில்லை என்பதைக் கண்ணுறும்போது உள்ளம் பதைக்கிறது.


எப்படி படித்துப் பணியில் சேர்ந்தார்கள்?  இவர்கள் பங்கேற்கும் பாடநூல் தயாரிப்பின் தரம் எப்படியிருக்கும்? இனிவருங் காலங்களில் தமிழிலக்கணத்தைக் கற்பிக்கக் கூடிய யாரேனும் மிஞ்சுவரா? இவர்கள் நிலையே இப்படியென்றால் இவர்களிடம் படித்த இனிவரும் தலைமுறை எப்படியிருக்கும்? அவர்கள் கல்வித்துறையில் அமர்ந்து தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? பாடநூல்களிலாவது மரபு பாடல்களும், இலக்கணமும் அச்சேறுமா? அல்லது வசனக்கவிதை மட்டுமே இடம்பெறுமா? தமிழின் தொன்மை மண்ணாகிப் போமா? இன்னும் ஏராளமான வினாக்கள் எட்டிப் பார்த்துக் குட்டு வைக்கின்றன. 


இன்றைக்கு என்னைப் போன்ற சிலரிடம் மரபையும், இலக்கணத்தையும் கற்கும் அனைவரும் இதே கற்பிக்கும் கடமையைக் கண்ணெனக் கொண்டு  அவரவர் திறனுக்கேற்ற மாணவர் கூட்டத்தைப் பெருக்கி வருங்காலத்தில் தமிழ் மங்கிவிடாதிருக்கச் செய்ய வேண்டுகிறேன்.


ஓ... என் தமிழ்த்தாயே! எங்களை மட்டுமல்ல... உன்னையும் நீயே காப்பாற்றிக் கொள்.


வருத்தத்துடன்

பாவலர் மா.வரதராசன்


1 comment: