'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

 பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி – 10


கண்விசிறித் தென்றலெண்ணிக் காதல் நெடுந்துயரால்

மின்விசிறிக் காற்றில் மிகநொந்நு வாடுகின்றேன்..!


ஆந்தை நிலவுடனே ஆங்கலையும் வாவல்போல்

கூந்தல் இருளெண்ணித் தூக்கம் தொலைக்கின்றேன்..!


கண்மீனை எண்ணியெண்ணி நள்ளிரவில் தூங்காது

விண்மீனை எண்ணியெண்ணி வேதனையில் தீய்கின்றேன்..!


பூவாய் மொழிகேளேன் கோரப் புயற்கடலில்

நாவாய் எனச்சிக்கி நாளும் நடுங்குகின்றேன்..!


பூக்காட்டைச் சூடும் பொழிலாளை உள்நினைத்துத்

தீக்காட்டில் நைந்துருகும் தேன்கூட்டைப் போலானேன்..!


வில்லம்பு தோற்கும் விழியாளைக் காணாது

புள்ளம்பால் மண்ணில் புரள்நிலை எய்துகின்றேன்..!


மாடன் பலிகடா மண்டையின்றித் துள்ளல்போல்

கேடோ பலவுற்றுக் கெண்டைவிழி தேடுகின்றேன்..!


அல்லும் பகலும் சமமென்று சொன்னதுயார்?

கொல்லும் இரவின்னும் கோடி மடங்காமாம்


வெண்பஞ்சு மெத்தையெல்லாம் முள்நெருஞ்சி போல்தைக்கக்

கண்துஞ்சல் நீக்கிக் கனவால் அழிகின்றேன்


ஆசை முகத்தாளை அப்படியே காட்டுவதால்

தோசை உணவதனைத் தொட்டுண்ண ஏலவில்லை..!


நெல்லரிசிச் சோறெல்லாம் முல்லையதைப் போல்தெரியப்

பல்வரிசை எண்ணிப் பசிபோக்கல் ஆகவில்லை..!


வேய்ங்குழலும் வேனில் இளங்குயிலும் வெண்ணிலவும்

பூங்குழலாள் காதல் புலப்படுத்தத் தூங்கமில்லை..!


பாற்சோறும் பச்சைப் பயறும் பசிமாற்றும்..!

நாற்சுவருள் நைந்தவென் காதலைத் தேற்றுமா..!


ஐங்கூந்தல் நின்றே அழகொளிரும் பூநாற்றம்.!

பைங்காற்றுத் தாங்கும் பலமலரும் தந்திடுமா.!?


எக்கள்ளும் போதைதரும் என்னவளின் பல்லொழுகும்

அக்கள்ளின் கால்தூசிக்(கு) ஆங்கவை ஈடாமா.!


நெய்யொழுகும் சோறும் பிடிக்கவில்லை நேற்றுவரை

பொய்யெழுதும் பாட்டும் பிடிக்கவில்லை வேறென்ன


மையெழுதும் கண்ணாளின் மையல் புயலடிக்க

மெய்யழ(கு) எல்லாம் மிகநைந்து போனதனால்...!


தண்ணீர் அடிக்காமல் கஞ்சா குடிக்காமல்

என்னுடல் இன்னும் இளைத்துருகக் காணுகின்றேன்..!


சொல்நட்டுப் பாட்டெழுதிச் சுந்தரிக்கு நானனுப்பக்

கல்நட்ட பின்னால்தான் காண வருவாளோ...!


அத்தி மரம்பழுக்க ஆங்கமரும் புள்ளினம்போல்

கத்திக் கதறுகிறேன் காதலிக்கோ கேட்கவில்லை


புத்திதடு மாறிப் புலம்புவதைக் கண்டுமக்கள்

எத்தனெனப் பார்த்திருக்க எம்வீட்டு முல்லைகூடக்


கோடி மலர்பூத்துக் கொல்லெனச்..சி ரிக்குதையே

வாடுநெஞ்சம் காணாமல் வண்டமர்ந்து பாடுதையே..!


பூக்குளம் வற்றியதால் பொய்கை வெடித்ததுபோல்

பாக்குளம் வற்றிநான் பால்நிலவுக்(கு) ஏங்குகின்றேன்..!


தூது தொடரும்...


No comments:

Post a Comment