'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

6. பைந்தமிழ்ச்செம்மல் சாமி.சுரேஷ்

 • புனைபெயர் - ஆதி கவி

• படிப்பு - முதுகலை வரலாறு

• பணி - நடுவணரசு துறை, பாதுகாப்புப் பிரிவு

• பட்டம் - பைந்தமிழ்ச் செம்மல்  (பைந்தமிழ்ச் சோலை), கவியருவி ( தடாகம் கலை இலக்கிய வட்டம், இலங்கை)


கவிஞர் அழைப்பு


பண்பில் சிறந்த கவிஞரிவர்

    படைக்கும் பாக்கள் அனல்கக்கும்

கன்னற் சுவையில் பாவிருக்கும்  

    கனலும் பாய்ந்து தெறித்தோடும்

அன்னைத் தமிழாள் மகிழுமாறே

    அவைக்கு வருக ஆதிகவி

மன்றம் சிறக்கும் உம்வரவால்

    மகிழ்வாய்க் கவிதை தாருங்கள்


கதவைத் திறந்து வை


தமிழ் வாழ்த்து

வானி லுறையும் மீன்களெல்லாம் - நாளை

வளரும் வெடிக்கும் வடிவிழக்கும்

தேனி லுறையும் இனிப்பெல்லாம் - ஓர்நாள்

தேயும் திகட்டும் சிறப்பிழக்கும்


காயுங் கதிரும் நிலவொளியும் - என்றோ

கருமைக் குழியில் புகுந்தொழியும்

தாயாய்த் திகழுந் தமிழ்மொழிதான் - பல

தடையை உடைத்துப் புகழடையும்


தலைமை வாழ்த்து

சோலை மலரில் வீற்றிருந்து - தமிழ்த்

தேனைச் சொரியும் வண்டமிழாள்

காலைப் பனிபோல் கள்ளமில்லாப் - பெருங்

கருணை விரியும் பெண்டகையாள்


குடியை இயக்கும் அரும்பணிபோல் - தமிழ்க்

குதிரை இயக்கும் நேரிழையே

அடியும் தொடையும் அணிவகுக்கும் - கவி

அழகு தலைமை வாழியவே

கதவைத் திறந்து வை

யாப்பில் சொல்லைக் கட்டிவிட்டால் - சில

எதுகை மோனை ஒட்டிவிட்டால் - பாட்டு

எல்லாம் தெரியும் என்கின்ற - மன

இருண்ட கதவைத் திறந்துவிடு


தோப்பில் பழங்கள் விளைந்திருக்கும் - அதன்

தோலும் அழகாய் சிவந்திருக்கும் - எல்லாத்

தோட்டக் கனியும் இனிக்குமென்ற - உன்

தொல்லைக் கதவைத் திறந்துவிடு


மூப்பில் திளைக்கும் முதியவர்க்கு - வெள்ளை

முடியைக் கொண்ட கிழவருக்கு - அட

மூன்று காலமும் தெரிந்திருக்கும் - எனும்

முட்டாள் நினைவை மறந்துவிடு


காப்பில் நிலத்தைக் கன்னியரைப் - பல

காளை மேய்ந்து தின்னவரும் - உன்

காவல் ஒன்றே உயர்ந்ததெனும் - சிறு

கன்றின் குணத்தைக் கழட்டிவிடு


பாட்டில் வீரம் காட்டிவிட்டுப் - பின்னால்

பம்மி வாலை ஆட்டிவிட்டு - நான்

பாயும் புலியினம் என்பவரின் - கொடும்

பசப்புச் சொற்களைக் கொன்றுவிடு


நாட்டில் நடக்கும் கொடுமைகளைக் - கண்டும்

நடித்துப் பிழைக்கும் அடிமைகளை - நம்

நலத்தைக் காக்கும் தெய்வமென - நீ

நம்பும் மடமையைக் கொளுத்திவிடு


ஆக்கங் கருதி உடனிருக்கும் - நாம்

அசந்த போதில் படையெடுக்கும் - சில

ஐயப் பிறவியை நம்புதற்கு - நீ

ஆற்றில் மூழ்கிப் பிறந்துவிடு


நோக்கம் தெளிவாய் இருந்தாலும் - உடல்

நோகும் வண்ணம் உழைத்தாலும் - நீ

நொண்டிக் குதிரை ஏறிவிட்டுக் - குறை

நொட்டைச் சொல்லைக் களைந்துவிடு


தத்தித் தவழும் கிள்ளைகளை - மடியில்

தாவிப் பரவும் பிள்ளைகளைக் - கல்விச்

சாலையில் தந்தால் போதுமென்றே - எண்ணும்

சள்ளை அறிவைக் கிள்ளிவிடு


அத்தி மலர்போல் அரிதனெவே - சில

ஆன்றோர் சான்றோர் வாழுகிறார் - நீ

அவரைப் புரத்தல் இல்லெனினும் - அவர்

அறிவைப் புறத்தலைத் தள்ளிவிடு


பச்சைக் குழந்தை போல்முகத்தை - இப்

பாரில் காட்டும் கருஞ்சிறுத்தை - நீ

பதிந்த கருத்தே உண்மையெனும் - உன்

பாழு மனத்தைக் கொட்டிவிடு


நச்சிப் பிழைத்து நலம்பெற்றுப் - பின்

நடையைக் கட்டும் குலமுண்டு - தெரு

நாயைப் பொன்னால் அலங்கரித்தும் - அது

நம்மைக் குரைக்கும் அவிழ்த்துவிடு


எரியுந் தழலைக் கொண்டுவந்து - இழி

எண்ணக் கனவை எரித்துவிடு - இன்னும்

எழுத முடியா இருள்வெளுக்க - உன்

இடுக்குக் கதவைத் திறந்துவிடு


அரிய வாழ்வை வாழ்கின்றாய் - ஏன்

அடிமை போலச் சாகின்றாய் - உன்

அடியைக் கவனி நிமிர்ந்துவிடு - நல்

ஆற்றல் மதகைத் திறந்துவிடு


வாழ்த்து

உள்ளம் வருந்த உரைத்த யாவும்

உன்னதக் கருத்தாய் எடுக்கின்றோம் - அதில்

அள்ளித் தெளித்த அநீதி யெல்லாம்

அகத்தில் ஏற்றுத்  தடுக்கின்றோம்


எரியுந் தழலை எடுத்து வந்தே

இடுக்கண் அனைத்தையும் வீழ்த்துகிறோம்- அதை

அறியத் தந்த ஆதிகவி பாடலை

அனைவரும் சேர்ந்து வாழ்த்துகின்றோம்


No comments:

Post a Comment